Wednesday, April 29, 2015

நம் கல்வி... நம் உரிமை!

- அஜிதனும் அரசுப் பள்ளியும்

ஜெயமோகன்
 
 
 
அஜிதனுக்கு எல்கேஜி, யுகேஜி முடிந்ததும் பத்மநாபபுரம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்தோம். பள்ளியில் சொன்னார்கள், “பையன் சராசரிக்கும் மிகக் கீழே, அவனுக்கு எழுதவே வரவில்லை” என. சோதித்துப் பார்த்தால் அது உண்மை. அஜிதனுக்கு சிறு வயதிலேயே இடது கைப்பழக்கம். அதைப் பொது வாகக் கவனித்திருந்தோம் என்றாலும், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மழலையர் பள்ளியில் அவனை முரட்டுத்தனமாக வலது கைக்குப் பழக்கியிருக்கிறார்கள். அவன் அதற்குச் சரிவராதபோது அவனைத் தொடர்ந்து அடித்திருக்கிறார்கள். சின்ன வயதில் மழலையர் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அவன் தொடர்ந்து அடம்பிடிப்பான். அது சிறுவயதில் என் வழக்கமும்கூட.

நான் ஐந்தாம் வகுப்பு வரை அடம்பிடித்தவன். “நீ இப்படி ராப்பகலா அவன்கிட்டே கொஞ்சிக் குலவினா அவன் எப்படி ஸ்கூலுக்குப் போவான்..?” என்று என் மனைவி கேட்பாள். அதற்காகப் பிள்ளையைக் கொஞ்சாமல் விட முடியுமா? ஆக, அஜிதன் மனதில் பள்ளிக் கல்வி பற்றி மிக ஆழமான ஒரு கசப்பை, எதிர்ப்புணர்வை அந்த மழலையர் பள்ளி உருவாக்கியிருந்தது.
நான் அவனை மீண்டும் இடது கைக்கு மாற்ற முயன்றேன். அது இன்னும் சிக்கலை உருவாக்குகிறது என்று தோன்றவே விட்டுவிட்டேன். வலது கைக்குப் பழகிவிட்டிருந்தான். ஆனால், எழுத்துகள் மிகமிகச் சிக்கலாக இருக்கும். சுந்தர ராமசாமியிடம் ஒருமுறை இதைப் பற்றிச் சொன்னேன். “நீங்க டீச் பண்ணாதீங்கோ… நீங்க அவன் எதிர்காலத்தைப் பத்தி கவலைப்பட்டு, அவன் மேல ஏறி உட்கார டிரை பண்ணுவீங்க… வேணுமின்னா, ட்யூஷன் வைங்க… அப்டியே விட்டுருங்க… செடிகள்லாம் பாறையையே மீறி வளந்திருது. குழந்தைகளுக்கு எல்லாத்தையும் தாண்டி வளரக்கூடிய உயிர்ச்சக்தி இருக்கு…” என்றார்.

அப்போது ஆரம்பித்த டியூஷன். ஆனால், டியூஷன் ஆசிரியர்கள் என்னைத் தெருவில் பார்த்தால் புலம்புவார்கள். “இ-ங்கிற எழுத்தை மட்டும் ஒரு ரெண்டாம் கிளாஸ் பையனுக்கு ஒரு வாரமா சொல்லித் தாறேன் சார்…” என்பார்கள். அவன் எப்படியோ ஒன்றை மட்டும் கற்றுக் கொண்டான். அது, மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளைப் போன்ற பாவனை. இதை எங்கோ அவன் கவனித்திருக்க வேண்டும். ஆசிரியைகள் எது சொன்னாலும் வாயை ஒருமாதிரி காட்டுவான். மண்டையை உருட்டுவான். அவர்கள் மெல்லமெல்ல அவனை அடிப்பதை நிறுத்தவே அதைத் தொடர ஆரம்பித்தான். ஆனால், இது வெளியேதான். வீட்டில் அவன் அசாதாரணமான சுட்டி. அவனுடைய நகைச்சுவை உணர்வையும் சாகசத்தன்மையையும் நான் ஒவ்வொரு கணமும் வியந்துகொண்டிருந்தேன்.

இரண்டாம் வகுப்பு ஆசிரியை என்னிடம் சொன்னார், “சார், பையனுக்கு எதாவது டிரீட்மென்ட் எடுங்க சார்… பொறவு சொல்லலேன்னு சொல்லப்படாது.”
அடிவயிற்றைக் கவ்விய அச்சத்துடன் “என்ன மேடம்?” என்றேன்.
“அவனுக்கு பிரெய்ன் குரோத்ல என்னமோ பிரச்சினை இருக்கு சார்….”
நான் கடும் சினத்துடன், “சும்மா எதாவது சொல்லி அவன் வாழ்க்கையக் கெடுத்திராதீங்க… அவனுக்கு ஒண்ணு மில்லை. கைமாறி எழுதவெச்சதுனால கொஞ்சம் எழுத்து மோசமா இருக்கும்… அதுக்காக?” என்றேன். எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது.
“நாங்க சொல்லியாச்சு... இனி எங்க மேலே பழி சொல்லக் கூடாது.”
“ ஏய்… இனி இந்தப் பேச்சை யாராவது எடுத்தீங்கன்னா வெட்டிப் போட்ருவேன்…” என்று தெருவில் நின்று கூவினேன். பையனை அணைத்தபடி கிட்டத்தட்ட ஓடினேன்.
என் மனைவியிடம் சொன்னபோது அவள் கதறிவிட்டாள். ஒன்றும் தெரியாமல் அஜிதனும் அழுதான். அவனையே பார்த்தேன். உண்மையிலேயே மூளைத்திறனில் ஏதாவது சிக்கலா? வீடு முழுக்கப் புத்தகங்கள். இரவுபகலாகப் புத்தகம் பார்க்கும் புத்தகப் பிரியன் அவன். அந்த வயதிலேயே நான் அவனுக்குப் பல நூறு கதைகளைச் சொல்லியிருந்தேன். கணிசமான கதைகளை அவனே மீண்டும் சொல்வான். மந்த புத்தி என்று சொல்லும்படி என்ன இருக்கிறது? ஒருவேளை வளர வளரத்தான் தெரியுமோ? ஒன்றும் புரியவில்லை.

சில நாட்கள் கழித்துத்தான் அவன் பள்ளியில் அப்படி நடிப்பதைக் கண்டுபிடித்தேன். ஆனால், அது அவனுக்கே தெரியாது. அவனுக்கு எல்லா மிஸ்ஸும் ‘கெட்ட மிஸ்’தான். ஆசிரியர்கள் அவனை மனமார வெறுத்தார்கள். எல்லாப் பாடங்களிலும் அவனுக்குச் சிவப்பு மைதான். எப்போதோ ஒருமுறை எழுபது மதிப்பெண் கணிதத்துக்கு வாங்கியது தவிர்த்தால், அவன் எப்போதுமே தேர்வுகளில் வென்றதில்லை.

ஆனால், மூன்றாம் வகுப்பு முதல் அவன் பெரும் வாசகன். அவன் ‘சிவகாமியின் சபத’த்தை வாசிக்கும்போது ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். ஆசிரியையோ அவனுக்கு நூற்றுக்கு பூஜ்யம் மதிப்பெண் அளித்தார். சோவியத் ருஷ்ய வெளியீடுகளான அறிவியல் நூல்களை இரவுபகலாகப் படிப்பவனுக்கு அறிவியலில் ஒரே பாடத்தில் ஒரே வினாவைக்கூட எழுதத் தெரியவில்லை. முனைவர் அ.க.பெருமாளின் அத்தனை வரலாற்று நூல்களையும் ஆறாம் வகுப்புக்குள் அவன் வாசித்திருந்தான். வரலாற்றில் ஒருபோதும் இரட்டை இலக்க மதிப்பெண் வென்றதில்லை.

முதல் பிரச்சினை எழுத்துதான். பூக்கோ சொல்லியிருக்கிறார் என்று நினைவு, நம் பண்பாட்டில் முதலில் குழந்தையின் விரல்களுக்கு ஆக்ரோபேடிக்ஸ் சொல்லிக் கொடுக்கிறோம் என. அதைக் கற்காமல் உலகமே அவனுக்கு இல்லை. எழுத முடியாமையில் இருந்து உருவான கசப்பு காரணமாகப் பள்ளி மேலேயே கடும் துவேஷம்.
அதன் பின் நகர்கோவிலில் புகழ்பெற்ற கிறிஸ்துவப் பள்ளியில் அவனைச் சேர்த்தோம். அவன் வாழ்க்கையை நரகமாக்கியது அந்தப் பள்ளி. கூடவே, என் வாழ்க்கையையும். அனேகமாகத் தினமும் எனக்கான கட்டளைகள். அதன்படி பள்ளிக்குச் சென்றால், மணிக் கணக்காக யார் யாருக்காகவோ காத்திருக்க வேண்டும். அப்புறம், கொலைக் குற்றவாளியை நடத்துவதுபோல நடத்துவார்கள். இதுநாள் வரையிலான வாழ்க்கையில் நான் மிக அதிகமாக எங்காவது அவமானமும் சிறுமையும் பட்டிருக்கிறேன் என்றால், அது அந்தப் பள்ளியில்தான்.
அஜிதனை, அவன் ஒரு உதவாக்கரை என்றும் முட்டாள் என்றும் முழுமையாக நம்பச் செய்தது அந்தப் பள்ளி. அந்தப் பள்ளி அளித்த அழுத்தம் காரணமாக நானும் அக்காலத்தில் அவனிடம் சற்றே கடுமையாக நடந்துகொண்டிருக்கிறேன். அடித்திருக்கிறேன். புத்தகங்களைக் கிழித்து எறிந்திருக்கிறேன். அதன் பின் அவனை அணைத்துக் கண்ணீருடன் சமாதானம் செய்வேன். இரவில் தூங்கும் அவனைப் பார்த்தபடி நிற்பேன்.
அவன் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் என் கழுத்துவலிக்காக காயத்திருமேனி எண்ணெயைப் போட்டு நீவிவிட அவனிடம் சொன்னேன். நான் குப்புறக் கிடக்க அவன் என் மீது அமர்ந்திருந்தான். மனைவி அவ்வழியாகச் சென்றாள். என்னிடம் “ஏன், சொல்லியிருந்தா நான் போட்டுவிட மாட்டேனா?” என்றாள்.
“இதுல போட்டிருக்கு… உலகத்திலேயே நமக்கு யாரை ரொம்பப் பிடிக்குமோ அவங்கதான் போட்டுவிடணும்னு…” என்றேன்.
சட்டென்று முதுகில் கண்ணீர் சூடாக விழுவதை அறிந்தேன். எழுந்து பார்த்தால் அழுதுகொண்டிருந்தான்.
“என்னடா?” என்றேன். 

குறுகி அமர்ந்து அழுதவன், “உனக்கு நெஜமாவே என்னைய ரொம்பப் பிடிக்குமா?” என்றான். “என்னடா… இது முட்டாள்தனமா கேட்டுட்டு… அப்பாவுக்கு உலகத்துலயே உன்னைத்தாண்டா ரொம்பப் பிடிக்கும்” என்றேன். அப்படியே சீறல்போன்று ஒலி எழுப்பி அழுதான். “நான் நெனைச்சேன், உனக்கு என்னைப் பிடிக்கல்லேன்னு… நீ பெரிய ஆளு… எனக்கு ஒண்ணுமே தெரியல. அதான் நீயும் அம்மாவும் என்னை அடிக்கிறீங்க. நான் இனிமே ஸ்கூலுக்குப் போகல. என்னைய ஓட்டலிலே சேத்துவிடு. நான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு ரூபா கொண்டுவந்து அம்மாட்ட குடுப்பேன்.” 

அந்த நிமிடத்தில் என் நெஞ்சு பொங்கியதை இப்போதும் கை நடுங்காமல் எண்ண இயலவில்லை. எப்போதோ அந்த ஓட்டல் பேச்சு மனைவி வாயில் வந்திருக்கிறது - படிக்காவிட்டால் ஓட்டல் வேலைக்குத்தான் போக வேண்டும் என்று. அப்படியே அவனை அணைத்துக்கொண்டேன். “நீ மக்குனு யாருடா சொன்னா?” என்றேன். 

“எங்க மிஸ் எல்லாருமே சொல்றாங்க. அம்மாவும் சொன்னாங்க. நீகூடத்தான் சொன்னே...” என்றவனை அணைத்துக்கொண்டு, “நீ மக்குன்னா உலகத்துல யாருமே புத்திசாலி இல்லடா” என்றேன். 

அன்று அவனை வெளியே கூட்டிப்போய்ப் பேசினேன். நான் ஒரு மாணவனாக எத்தனை கொடுமைப்படுத்தப்பட்டேன் என்று சொன்னேன். என்னைப் பெரும்பாலான ஆசிரியர்கள் வெறுத்தார்கள். அடித்தார்கள். எனக்குக் கணக்கு கொஞ்சம் கூட வரவில்லை. என் அப்பா என் விருப்பத்தை மீறி என்னை வணிகவியல் பாடத்தில் சேர்த்தார். நான் அதில் ஒரு முறைகூடத் தேர்ச்சி பெறவில்லை, படிப்பை முடிக்கவும் இல்லை. 

“எங்க அப்பாட்ட பணம் இல்லை. அதனால பயப்பட்டார். நான் அப்படி இல்லை. நீ இனிமே உனக்குப் பிடிச்சதை மட்டும் படி. இன்னும் மூணு மாசம். இந்தப் பள்ளிக்கூடத்திலேருந்து உன்னைக் கூட்டிட்டுப்போய் கவர்மென்ட் ஸ்கூலிலே சேர்க்கிறேன். இனிமே உன்னை யாருமே படிப்பு விஷயமா திட்ட மாட்டாங்க… போருமா?” 

மறு வருடம் அரசுப் பள்ளியில் சேர்த்தபோது நண்பர்கள் பலரும் எதிர்த்தார்கள். ஆனால், அப்பள்ளி அவனுக்குக் காட்டிய உலகமே வேறு. வீட்டில் சாப்பாடு இல்லாமல், பையன்கள் மதியம் சாப்பிடாமல் பசித்திருப்பார்கள் என்ற தகவல் அவன் உலகையே பல நாட்கள், பல மாதங்கள் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. தனிமையில் அதை எண்ணி அவன் கண்ணீர் விட்டிருக்கிறான். அவனது சக மாணவர்கள் சனி, ஞாயிறில் கூலிவேலைக்குச் சென்று வருவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவே அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. பெரும்பாலான நாட்களில் அவன் கொண்டுபோகும் சாப்பாட்டை பையன்கள் சாப்பிட, அவன் சத்துணவாக அளிக்கப்படும் உணவை உண்பான். மீன், இறைச்சி கொண்டுபோகும் நாட்களில் பெரிய டிபன் கேரியர் நிறைய கொண்டுசென்றாக வேண்டும். எங்கே முத்தாரம்மன் கோயிலில் கஞ்சி ஊற்றினாலும் பையன் களுடன் சேர்ந்து போய்ச் சாப்பிட்டு விடுவான். புதிய பள்ளி அவனுக்கு நண்பர்களை அளித்தது. நண்பர்கள் அவனுக்கு தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தார்கள். பள்ளிக்கு மகிழ்ச்சியாகச் செல்லும் அஜிதனை முதல்முறையாகக் காண ஆரம்பித்தோம். பழைய பள்ளியில் விளையாட்டுகூட விளையாட்டு ஆசிரியரால் அளிக்கப்படும் ஒரு பயிற்சி. ஒருவரோடு ஒருவர் பேசுவதும் சிரிப்பதும் கடுமையான குற்றம். அதைவிட மோசமான விஷயம், நட்பு என்றால் தவறு என்றே கற்பிக்கப்பட்ட குழந்தைகள் அங்கே படித்தார்கள். அந்தஸ்து, சாதி, மதம் நோக்கி கணக்கிட்டே அங்கே நட்பு இருந்தது. 

இந்த அரசுப் பள்ளியில் எல்லாமே கட்டற்றுதான். சட்டை கிழியாமல் அஜிதன் பள்ளி விட்டு வரும் நாட்கள் குறைவு. சண்டைகள் சச்சரவுகள். அதைவிடத் தீவிரமான நட்புகள். பரீட்சைக்கு முந்தைய நாள் இரவில் கூப்பிட்டுப் பொங்கும் பேரார்வத்துடன் சிலபஸ் என்ன என்று கேட்கும் சக மாணவன் அஜய்குமார்தான் அஜிதனின் உயிர் நண்பன். ஒருவனின் பையிலிருந்து பணத்தைப் பிடுங்கி இன்னொருவன் சாப்பிடலாம். “எங்க வீட்ல அம்மை தேங்காத் தொவையலையே போட்டுக் கழுத்தறுக்கிறாடா. பணமில்ல பாத்துக்கோ…உங்கம்மைட்ட நல்ல கோழியா குடுத்தனுப்பச் சொல்லு’’ என்று எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் சொல்லியனுப்பலாம். இந்த உலகமே வேறு. 

அவனுடன் எப்போதும் பேசிக்கொண்டே இருந்தேன். அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவனிடம் நான் எதை வேண்டுமானாலும் பேசலாம். “தோளுக்கு மேலே வளர்ந்தா தோழன்னு சொல்றாங்களே அப்பா” என்பான். “ஆமாடா. அது ரைட்டுதான்..” என்றால், “அப்றம் சொல்லு மச்சி…” என்பான். அதுதான் அவன் பாணி. 

ஒரு கட்டத்தில் அஜிதனுக்குப் புனைகதைகளில் ஆர்வம் போய் இயற்கையியலில் ஆர்வம் பிறந்தது. அதற்கு முதற்காரணம், சு.தியடோர் பாஸ்கரன். இரண்டாம் காரணம், அ.முத்துலிங்கம். அது தீயாகப் பற்றிக்கொள்ள அதிலேயே நாட்கள் நகர்ந்தன. பறவைகளைப் பார்ப்பது ‘லைஃப் லிஸ்ட்’ தயாரிப்பது, அதைப் பற்றிய நூல்களைச் சேகரிப்பது என ஒரு உக்கிரமான பொழுதுபோக்கு பற்றிக்கொண்டது. ‘நேஷனல் ஜியாக்ரஃபிக்’ சேனலில் ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு பெயர்கள் ஓடிக்கொண்டிருந்தன.
“எவ்ளவு பேரு…” என்றேன். “அந்த லிஸ்ட்டுல ஒரு நாள் ஜெ.அஜிதன் பேரும் இருக்கும்” என்றான். அவனிடம் ஒரு கனவு உருவாகிவிட்டிருப்பதை நான் கண்டேன். வெற்றியும் தோல்வியும் காலத்தின் அளவிலா ஆட்டத்தில் எங்கோ, எப்படியோ தீர்மானமாகிறது. ஆனால், இதேவயதில் என்னை அலைக்கழித்தது இதேபோன்ற ஒரு பெருங்கனவுதான். உக்கிரமான மின்சாரம் ஓடும் கம்பிபோல என்னை அது தகிக்க வைத்தது அன்று. அந்த தகிப்பைக் கண்டேன். இளமைக்கு அழகு அத்தகைய கனவுதான். 

அவனுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி இடையில் படி என்று சொல்வதும் இல்லை. அவன் மதிப்பெண்களைக் கவனிப்பதில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முடிந்தன. 460/500. 92%. கணிதத்தில் 99%. அறிவியலில் 97%. “அப்பா உன் மூஞ்சியில கரிய அள்ளிப் பூசிட்டேன்ல?” என்றான் சிரித்தபடி. “ஆமாடா” என்றேன். அஜிதன் சொன்னான்: “சும்மா ஜாலியாச் சொன்னேன்பா… உனக்காகத்தானே நான் படிச்சதே!”
(ஜெயமோகன் எழுதிய ‘தேர்வு’ கட்டுரையின் சுருக்கம் இது. அஜிதன் இப்போது உதவி இயக்குநர். ‘ஓ காதல் கண்மணி’யில் பணியாற்றியிருக்கிறார். )
- ஜெயமோகன், 

நன்றி  தி தமிழ் இந்து
நன்றி ஜெய மோகன்.
பெற்றோர் மற்றும் மாணவர்கள் நலம் கருதி
அன்புடன் சிவா....
 

Thursday, April 16, 2015

பிள்ளைகளை பந்தாடுது பெற்றோரின் தற்பெருமை!



‘‘கல்வி என்பது என்ன? வயிற்றைக் கழுவுவதற்கான வழிதான் கல்வியா? கல்வி கற்றால் நல்ல வேலை கிடைக்கும். கார், அபார்ட்மென்ட் வாங்கலாம். வளமாக வாழலாம். இதுதான் கல்வியா? அப்படித்தான் நினைக்கிறது இன்றைய தலைமுறை. கல்வி வணிகப்பொருள் என்ற நிலை வந்து விட்டது. இந்தப் பள்ளியில் முதலீடு செய்தால் பிள்ளைகள் நாளைக்கு நல்ல வேலைக்குப் போய் லாபம் சம்பாதித்துத் தருவார்கள் என்று பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். படி, கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகு, சம்பாதி, வீடு, கார் வாங்கு, செத்துப்போ என்றே இன்றைய தனியார் பள்ளிகளின் கல்வி போதித்துக் கொண்டிருக்கிறது.

கல்வி நுகர்வு சார்ந்த விஷயமாக மாறிவிட்டது. கல்வி என்பது ஆளுமையை, வளர்ச்சியை, தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கிற ஒன்றாக கருதப்படவில்லை. அது தேசத்தின் எதிர்காலத்தையே பாதிக்கிற அளவுக்கு விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கிறது. சமூகப் பிரச்னைகள், உறவுகள், தோழமைகள் என எந்தத் தொடர்பும் இல்லாத வேலை, உணவு, உறக்கம் என சுய செயல்களுக்குள்ளான ஒரு வாழ்க்கைக்குள் சிக்கியே நிறைய இளைஞர்கள் தொலைந்து போய் கொண்டிருக்கிறார்கள்...’’

இப்படி அதிரடியாகத் தொடங்குகிறார் குழந்தை உரிமை செயற்பாட்டாளரும் தோழமை அமைப்பின் இயக்குநருமான தேவநேயன்... ‘‘அரசுப் பள்ளி என்றால் தரமாக இருக்காது என்ற எண்ணம் இங்கே திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது. அரசுப் பள்ளியில் பணியாற்றுகிற 90 சதவிகிதம் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்தான் சேர்க்கிறார்கள். ஆங்கிலம் என்பது மொழி... அது அறிவல்ல. ஆனால், ஆங்கிலத்தில் பேசினாலே வேலை கிடைத்துவிடும் என்ற அதீத மூடநம்பிக்கை நம் மக்களிடம் இருக்கிறது. படிப்புக்கும் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பேருண்மை பலருக்குப் புரிவதில்லை. 10ம் வகுப்பில் 500க்கு 498 எடுத்து தேர்ச்சிப் பெற்றவர்கள், பிளஸ்டூவில் 1,198 மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்றவர்கள் எல்லாம் இன்று எங்கே இருக்கிறார்கள்?

ஒரு ஆய்வு செய்து பார்த்தால் உண்மை தெரியும். ஆபரேஷன் சக்சஸ்... நோயாளி..? ஒரு பாடத்தை புரிந்து கொள்ளாமல் வெற்று மனப்பாடம் செய்து எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் அதனால் துளியளவும் பயனில்லை. அது தேக்கம்தான். எப்படியாவது அடித்துப் பிடித்து, காத்துக் கிடந்து பிரபலமான ஒரு தனியார் பள்ளியில் சீட் வாங்கி பிள்ளையைத் தள்ளிவிட்டால் போதும்... வகுப்பறைக்குள் பிள்ளை என்ன பாடுபடுகிறது என்பது பற்றி எல்லாம் கவலை இல்லை. வீட்டுக்கு வந்து ஒரு ரைம்ஸ் பாடிவிட்டால் கட்டிய பணத்துக்கான பலன் கிடைத்துவிட்டது என்று கருதுகிறார்கள். உண்மையில் தனியார் பள்ளிகளில் குழந்தைகளின் உரிமைக்கு துளியளவும் மரியாதை இல்லை. எந்திரம் போலத்தான் வார்க்கப்படுகிறார்கள்.

பெரும்பாலான கல்வித் தந்தைகள் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள். அதனால் அரசின் நடவடிக்கைகளும் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவே இருக்கின்றன... என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறார் தேவநேயன். ‘‘அங்கன்வாடி திட்டம் உலகம் முழுவதும் செயல்பாட்டில் இருக்கிற அற்புதமான செயல்திட்டம். அதை தமிழகத்தில் திட்டமிட்டு அழித்து விட்டார்கள். 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் வளர்ச்சியையும் பராமரிப்பையும் உள்ளடக்கிய இடமாக அங்கன்வாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதை சோறு வழங்கும் மையமாக மாற்றி சிறுமைப்படுத்தி விட்டார்கள். அங்கன்வாடிகளின் தனி பாடத்திட்டமே இருக்கிறது. கல்வி, மருத்துவ சோதனைகள், நோய் தடுப்புகள், சரிவிகித சத்துணவு எல்லாமே ஒரே கூடத்தில் கிடைக்கிறது. ஆனால், அதை ஏழைக் குழந்தைகளின் மதிய உணவுக்கூடமாக மாற்றி வைத்திருக்கிறது அரசு. அங்கிருக்கும் பணியாளர்கள் எவருக்கும் குழந்தைகளின் உளவியல் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. அங்கன்வாடிகள் மட்டும் சிறப்பாக செயல்படுமேயானால், நர்சரி பள்ளிகளை நோக்கி பெற்றோர் ஓடமாட்டார்கள்... என்கிற தேவநேயன் தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான செயல்பாடுகளையும் விதிமீறல்களையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறார்.

‘‘ஒரு பெரிய நிறுவனம் தமிழகம் முழுவதும் 750 நர்சரி பள்ளிக்கூடங்களை நடத்தியது. அந்த நிறுவனத்தின் பெயரின் மீதிருந்த மயக்கத்தில் ஆயிரக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அங்கே சேர்த்தார்கள். பள்ளிக்கு அங்கீகாரமே வாங்கப்படவில்லை என்ற உண்மை நீதிமன்றத்தின் மூலம் வெளிவந்தபோது தமிழகமே அதிர்ந்து போனது. ஏ.சி. வகுப்பறை, தனித்தனி டாய்லெட் என்றெல்லாம் ஆசைகாட்டி ஒரு மோசடி கல்வி நிறுவனத்தை அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். இப்போது அங்கு படித்த குழந்தைகளின் எதிர்காலம் என்னவானது? பெற்ற பணத்தை திருப்பிக் கொடுத்தார்களா என்று எதுவும் தெரியவில்லை.

தனியார் பள்ளிகளின் பாடத்திட்டங்களின் தரத்தை யார் அளவிடுவது? குழந்தைகள் உடனான அணுகுமுறைகளை யார் கண்காணிப்பது..? தனியார் பள்ளிகளில் பெற்றோர் ஒருநாளாவது ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து பிள்ளைகள் எப்படி நடத்தப்படுகிறார்கள், பாடம் எப்படி நடத்தப்படுகிறது என்பதை சோதிக்க முடியுமா? பெற்றோரோடு சேர்த்து பிள்ளையையும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிற கண்காணிப்பு குழுக்கள் எந்த தனியார் பள்ளியிலேனும் நேர்மையாக அமைக்கப்பட்டுள்ளதா? சில பள்ளிகளின் பாடத்திட்டங்கள் இந்தியாவின் இறையாண்மைக்கே சவால் விடுகின்றன. ஒரு பள்ளியில் மதுரையின் பெயரை மதுரை என்கிற மதுராபுரி என்று புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள். மக்கள் சார்ந்த, மனிதம் சார்ந்த கல்விக்குப் பதிலாக குறுகிய மனப்பாங்கை உருவாக்கும் கல்வியை சில தனியார் பள்ளிகள் போதிக்கின்றன.

தனியார் பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பதன் மூலமும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்தி பெற்றோரை ஈர்ப்பதன் மூலமுமே மாற்றத்தை கொண்டு வரமுடியும்... என்கிறார் தேவநேயன். தனியார் பள்ளிகள் நடத்தும் மாணவர் விடுதிகள் எவ்வித கண்காணிப்புக்கும் உட்படுத்தப்படுவதில்லை. விடுதிக்கென்று பெருந்தொகையை கேட்டு வாங்கும் பள்ளிகள், போதிய தண்ணீர், படுக்கை வசதி, உணவு வசதி கூட செய்து தருவதில்லை. படி, படி என்று எந்நேரமும் விரட்டும் கொட்டடி போலவே விடுதிகள் செயல்படுகின்றன. விடுதிகளில் தங்கிப் படிக்கும் குழந்தைகளை அழைத்து தலைகோதி விசாரித்துப் பாருங்கள்... கதறி அழுவார்கள்.

ஆனால், ரெண்டு வருஷம் தானே... அட்ஜஸ்ட் செஞ்சுக்கோ என்று சிறிதும் இரக்கம் இல்லாமல் பெற்றோர் மீண்டும் அந்தக் கொட்டடிக்கு அனுப்புகிறார்கள். குழந்தைகளில் படிக்கும் குழந்தை, படிக்காத குழந்தை என்ற எந்தப் பிரிவும் இல்லை. படிப்பென்பது பாடப் புத்தகம் மட்டுமல்ல... ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. அதைக் கண்டறிந்து வளர்த்தெடுக்கும் இடம்தான் பள்ளிக்கூடம். அரசுப் பள்ளிகளில் அதற்கு ஏகப்பட்ட ஏற்பாடுகள் உள்ளன. நன்றாக பேசக்கூடிய மாணவனுக்கு இலக்கிய மன்றம், எழுதக்கூடிய மாணவனுக்கு கட்டுரைப்போட்டி, பாடக்கூடிய மாணவனுக்கு பாட்டுப்போட்டி, விளையாடும் மாணவர்களுக்கு அதற்கான பயிற்சிகள் என சகல வாய்ப்புகளும் அரசுப் பள்ளியில் கிடைக்கிறது. இத்தனை ஏற்பாடுகள் இருந்தும் அரசுப்பள்ளியை பெற்றோர் மனம் விரும்புவதில்லை.

‘‘அதற்குக் காரணமே அரசுதான்... என்கிறார் மாணவர் பெற்றோர் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் ந.வீரப்பெருமாள்.‘‘அரசு திட்டமிட்டு கல்வியை வணிகர்கள் கையில் தள்ளிவிடுகிறது. தன்னுடைய பொறுப்பில் இருந்து தட்டிக்கழித்து அதை பெற்றோரின் பொறுப்பாக மாற்றுகிறது. ஒரு பக்கம் 1 முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி என்று சட்டம் கொண்டு வந்துவிட்டு, மறுபக்கம் ‘25 சதவிகிதம் மட்டும் ஏழைகளுக்குக் கொடுங்கள்’ என்று தனியாரிடம் மன்றாடுகிறது. தனியார் பள்ளிகள் இதை சாதகமாக பயன்படுத்துகின்றன. அதிகாரிகள் மாதந்தோறும் பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். கண்காணிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் கல்வி அதிகாரிகள் டேபிள் ஒர்க்தான் செய்கிறார்கள்.

பள்ளியின் மீது பெற்றோருக்கு ஒரு குறை இருக்கிறதென்றால் அதை அதிகாரிகள் மூலம் தீர்க்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம். நீதிமன்றத்தைத் தான் நாடவேண்டும். பள்ளி வாகனங்கள் மூலம் எத்தனையோ விபத்துகள் நடக்கின்றன. விபத்து நடந்த நாளன்று வீராவேசமாக செயல்படுகிற அதிகாரிகள் அதன்பிறகு மீண்டும் அலுவலகத்துக்குள் முடங்கிப்போகிறார்கள். இன்றும் இயங்கத் தகுதியற்ற, உச்சநீதிமன்றம் வகுத்துத் தந்த விதிமுறைகளை மதிக்காத பலநூறு பள்ளி வாகனங்கள் நம் தெருக்களில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. இப்போதைய தமிழகத்தின் கல்விச்சூழலைப் பொறுத்தவரை பெற்றோர் நுகர்வோராகவே கருதப்படுகிறார்கள்.

அதே நேரம் நுகர்வோருக்கு இருக்கும் உரிமைகளைக் கூட அரசும் பள்ளி நிர்வாகமும் பெற்றோருக்குத் தர மறுக்கின்றன. கல்விக் கட்டணத்தைப் பொறுத்தவரை நிலை மிகவும் மோசமாகவே இருக்கிறது. அரசு கமிட்டி போட்ட பிறகு நிலை இன்னும் மோசமாகி விட்டது. ஆண்டுக்கு 15 சதவிகிதம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம், கட்டணம் குறைவென்று கருதினால் மேல்முறையீடு செய்யலாம் என பல்வேறு விதிமுறைகளை பள்ளிகளுக்கு சாதகமாக வைத்தே இந்த கமிட்டிகள் செயல்படுகின்றன. முறையாக கட்டணம் வாங்கிக் கொண்டிருந்த பள்ளிகள் கூட இந்த விதிமுறைகளை பின்பற்றி தங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டன.

தனியார் பள்ளிகள் பற்றிய குறையை யாரிடமுமே சொல்லமுடியாது. எந்த இடத்திலும் நியாயம் கிடைக்காது. இந்த யதார்த்தம் உணர்ந்தும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியுமே பெரும்பாலான பெற்றோர் அமைதி காக்கிறார்கள். அரசுப் பள்ளிகளை அங்கு பணிபுரியும் ஆசிரியர் மட்டுமல்ல... அரசும் கூட நம்பத் தயாரில்லை. அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை தேர்வு செய்து மிகச்சிறந்த தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று ஒரு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதைவிட, அரசுப் பள்ளிகள் மீதான அரசின் அவநம்பிக்கைக்கு வேறு சாட்சியே தேவையில்லை... என்கிறார் வீரப்பெருமாள்.

அரசுப் பள்ளி பிடிக்கவில்லை. அரசு மருத்துவமனை பிடிக்கவில்லை. அரசு வேலை..? அரசுப் பள்ளி மீது வெறுப்பு... அரசே நடத்துகிற அண்ணா பல்கலை மீது..? மாற வேண்டியது அரசுப் பள்ளிகள் மட்டுமல்ல... அரசு மற்றும் பெற்றோர் மனோபாவமும்தான்


நன்றி தினகரன் நாழிதல்
மாணவர்கள் நலம் கருதி...
அன்புடன் சிவா....

குரு நானக் தேவ் 10

ராஜலட்சுமி சிவலிங்கம் 

 

குரு நானக் தேவ்
குரு நானக் தேவ்
 
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் (Guru Nanak Dev) அவதரித்த தினம் இன்று (ஏப்ரல் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் ராய் போய் கீ தல்வண்டி (தற்போது நான்கானா சாஹிப்) என்ற கிராமத்தில் ஒரு இந்து குடும்பத்தில் (1469) பிறந்தவர். தந்தை அந்த ஊர் பண்ணையாரிடம் கணக்கராக வேலை பார்த்தார்.

l குழந்தையாக இருந்த போதே இவருக்கு ஆன்மிக நாட்டம் இருந்தது. படிப்பில் நாட்டம் இல்லை. சிறு வயதில் தந்தை இவரை மாடு மேய்க்க அனுப்புவார். அவற்றை மேய விட்டுவிட்டு இவர் தியானத்தில் அமர்ந்துவிடுவார். அந்த வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.

l ஒருமுறை, தியானம் செய்துகொண்டிருந்த இவர் மீது வெயில் படாமல் இருக்க கொடிய நச்சுப் பாம்பு படமெடுத்து குடைபோல நின்றிருந்ததை மக்கள் பார்த்து அதிசயித்தனர். இவர் சாதாரண பிள்ளை இல்லை என்று உணர்ந்தனர். பெற்றோரோ, ‘இவர் சாதாரண பிள்ளைகள்போல இல்லையே’ என்று வருந்தினர்.

l அக்கா கணவரின் சிபாரிசால் இவருக்கு அரசு வேலை கிடைத்தது. சிறிது காலம் பணியாற்றினார். ஆனால், தன் வாழ்வின் நோக்கம் இறையருளை மக்களுக்கு வழங்குவதுதான் என்பதை அறிந்தார். அந்த வேலையை விட்டும் குடும்பத்தை விட்டும் விலகினார். தொடர்ந்து தியானம் செய்தார். இவரது மகத்துவம் அறிந்து ஏராளமானோர் நாடி வந்தனர்.

l ஊர் ஊராகச் சென்றார். 1499-ல் திடீரென்று காணாமல் போனார். நதியில் மூழ்கிவிட்டதாக எண்ணினர். ஊரே கூடி நதியில் தேடியும் கிடைக்கவில்லை. மூன்றாவது நாளில், எதுவுமே நடக்காததுபோல திரும்பி வந்தார். அன்று முதல் ஆன்மிக செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார்.

l ‘புரிந்துகொள்ள முடியாத, உருவமற்ற, அழிவில்லாத, அனைத்து மதங்களிலும் குறிப்பிடப்படும் இறைவன் ஒருவரே. அவர் நம் எல்லோரிடமும் வாசம் செய்கிறார்’ என்ற செய்தியைப் பரப்பினார்.

l சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவம் வாய்ந்த ஆன்மிக, சமூக, அரசியல் தளத்தை உருவாக்கினார். நேர்மையாக வாழவேண்டும் என்றார். ‘குரு நானக்’ என அழைக்கப்பட்டார். சீக்கிய மதம் பிறந்தது.

l கிழக்கே வங்காளம், அசாம் வரை, தெற்கே இலங்கை வரை, வடக்கே காஷ்மீர், லடாக், திபெத் வரை, மேற்கே பாக்தாத், மெக்கா, மெதினா, அரேபிய தீபகற்பம் வரை என நான்கு நீண்ட நெடிய பயணங்களை அவர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

l பெரும்பாலும் நடந்தே சென்றார். சென்ற இடங்களில் எல்லாம் இறைச் செய்தியைப் பரப்பினார். இவரது போதனைகள் அடங்கிய ‘குரு கிரந்த் சாஹிப்’, சீக்கியர்களின் புனித நூலாகத் திகழ்கிறது. இவை குர்முகி என்ற மொழியில் பதிவு செய்யப்பட்டன.

l இந்து - முஸ்லிம் பேதம் பாராட்டாதவர். இரண்டு பிரிவினரின் அன்பையும் மதிப்பையும் பெற்ற ஒப்புயர்வற்ற ஞானியாகத் திகழ்ந்த குரு நானக் 70 வயதில் (1539) இறைவனடி சேர்ந்தார்.


நன்றி தி இந்து தமிழ் நாளிதழ்
அன்புடன் சிவா...

Saturday, April 11, 2015

இஷ்டப்படி படிக்கலாம்

-பன்முக அறிவுத் திறன்

ம.சுசித்ரா
எக்கச்சக்கமாக ஃபீஸ் கட்டிச் சிறப்பான பயிற்சி அளிக்கும் பள்ளியில் என் மகனைச் சேர்த்துள்ளேன். காலை முதல் மாலைவரை பள்ளியில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அதுவும் போதாமல் மாலை முதல் இரவு உறங்கும்வரை டியூஷனுக்கும் செல்கிறான்.
அவன் படிப்புக்குத் தேவையான புத்தகங்கள், டேப்லெட், மடி கணினி இப்படி எல்லாவற்றையும் வாங்கித் தருகிறேன். அவன் நண்பர்களும் நன்றாகப் படிக்கிறார்கள். இவனும் எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள்தான் வாங்குகிறான். ஆனால், கணிதப் பாடத்தில் மட்டும் மிகக் குறைவான மதிப்பெண்கள்தான் பெறுகிறான். இதற்கு மேல் என்ன செய்வதென்றே புரியவில்லை.
இப்படிப் பரிதவிக்கும் பெற்றோர்கள் பலரைத் தினசரிச் சந்திக்க முடிகிறது. பெற்றோர்கள் மட்டுமல்ல, இதே மனநிலையில் பேசும் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் உண்டு. எல்லா முயற்சிகளும் செய்தாகிவிட்டது. ஆனால் பலன் ஏதுமில்லையே எனக் கவலை கொள்கிறார்கள் இவர்கள். சொல்லப் போனால் பல தனியார் பள்ளிகள் மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மூன்று விதமாக அவர்களைச் சலித்து, பிரித்து எடுக்கிறார்கள்.
புத்திக்கூர்மை கொண்ட மாணவர்கள், நடுத்தர அறிவுடைய மாணவர்கள், மந்தமான மாணவர்கள் என அடையாளம் சூட்டுகிறார்கள். அதன் பின் அவர்களுக்குத் தனித்தனியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் புத்திக்கூர்மையான மாணவருக்கு ஒரு முறை சொல்லித்தரப்படும் அதே பாடம் மந்தமானவர் என அடையாளம் காணப்பட்டவருக்கு பல முறை சொல்லித்தரப்படுகிறது. சில பாடங்கள் தீவிரமான கவனம் செலுத்தி கற்பிக்கப்படுகின்றன. சில சுருக்கமான வழிகள் சொல்லித்தரப்படுகின்றன.
மீண்டும் மீண்டும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும் எதிர்பார்க்கும் பலன் கிடைப்பதில்லை. ஆகவே அந்த மாணவர்கள் மீண்டும் அறிவிலிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். அவர்கள் மனமுடையக்கூடாது என்பதற்காக மெதுவாகக் கற்கும் திறன் படைத்தவர்கள் (slow learner) என அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இத்தகைய அணுகுமுறை தீர்வாகாது என்கிறார் உளவியல் நிபுணர் கார்டனர்.
திரும்பத் திரும்ப பேசுற நீ…
குறிப்பிட்ட பாடத்தைப் படிக்க ஒரு மாணவர் திணறுகிறார் என்றால் அவருக்கு கற்கும் திறனில் குறைபாடு உள்ளதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆகவே முன்பு வகுப்பில் எந்தப் பாடத்தை, எத்தகைய வழிமுறையில் சொல்லித்தந்தார்களோ அதே அணுகுமுறையில் மீண்டும் தனிக் கவனம் செலுத்திக் கற்றுத் தருகிறார்கள்.
இதற்குச் சிறப்புப் பயிற்சி எனப் பெயர் சூட்டுகிறார்கள். ஆனால் நேர்மறையான விளைவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, “திரும்பத் திரும்பப் பேசுற நீ. என்ன…திரும்பத் திரும்பப் பேசுற நீ” என வடிவேலு சொன்னதையே திரும்பி திரும்பி பேசி காமெடி செய்வதுபோல இது எதிர்மறையாகத்தான் வேலை செய்யும்.
மாற்றம் தேவை
ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்வதில் பின்னடைவு ஏற்படக் காரணம் அவருடைய கற்கும் ஆற்றலில் உள்ள குறைபாடு அல்ல. அவருக்கு அந்தப் பாடம் கற்பிக்கப்பட்ட முறையில்தான் சிக்கல் உள்ளது என்கிறார் கார்டனர். கணிதம் மற்றும் தர்க்கத் திறனில் ஒரு மாணவர் பின்தங்கியிருக்கலாம். ஆனால் அவரிடம் பன்முக அறிவுத்திறனில் உள்ள வேறுவகையானத் திறன் அற்புதமாக இருக்கும். அந்தத் திறன் மூலமாக அவரால் எதையும் சிறப்பாகக் கற்றுக் கொள்ள முடியும். கேட்டல் திறனை அடிப்படையாகக் கொண்டிருப்பவரால் ஒலி வழியாகக் கற்ற விஷயங்களை நன்கு நினைவுகூரமுடியும்.
உடல் ரீதியான அறிவு படைத்தவர்களை ஒரே இடத்தில் உட்கார வைத்துப் பாடம் கற்பித்துப் பயன் இல்லை. ரோல் பிளே, உடல் அசைவு என செயலில் ஈடுபடும்போது உற்சாகமாக உணர்வார்கள். சில மாணவர்கள் வகுப்பு நடக்கும்போது இடையில் பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படியானால் அவர் மனிதத் தொடர்பு அறிவாற்றல் கொண்டவராக இருக்கலாம். குழுவாக இணைந்து செயல்பட்டால் அருமையாகக் கற்றுக் கொள்வார்.
கார்டனர் அளிக்கும் பதில் இதுதான். எல்லா மாணவர்களாலும் கற்க முடியும். ஆனால் ஒரு தகவலைப் புரிந்து கொண்டு உள்வாங்கும் விதம் நபருக்கு நபர் வேறுபடும். அதே போல நாம் பார்த்து வியக்கும் பல புத்திசாலிகளிடம் எட்டு அறிவுத்திறன்களில் ஒரு சில திறன்கள்தான் அபரிமிதமாக இருக்கும். அவர்களும் மற்ற திறன்களில் பின்தங்கித்தான் இருப்பார்கள். இது மீண்டும் மீண்டும் சோதிக்கப்பட்டுக் கார்டனரால் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மை.
கல்விக்கு எதிரானதா?
கார்டனரின் இந்த ஆய்வு முறைப்படுத்தப்பட்ட கல்விக்கு எதிரான குரலாகத் தோன்றலாம். ஒன்று அல்லது இரண்டு அறிவுத்திறன்களைக் கற்பிப்பதே கடினம். இதில் எட்டு விதமான அறிவுத்திறன்கள் உள்ளன எனும்போது எப்படி சாத்தியப்படும் எனும் கேள்வி எழத்தான் செய்யும். இத்தகைய கேள்விக் கணைகள் கார்டனரை நோக்கி இன்றும் வீசப்படுகின்றன.
கார்டனரின் இந்த ஆய்வு முறைப்படுத்தப்பட்ட கல்விக்கு எதிரான குரலாகத் தோன்றலாம். ஒன்று அல்லது இரண்டு அறிவுத்திறன்களைக் கற்பிப்பதே கடினம். இதில் எட்டு விதமான அறிவுத்திறன்கள் உள்ளன எனும்போது எப்படி சாத்தியப்படும் எனும் கேள்வி எழத்தான் செய்யும். இத்தகைய கேள்விக் கணைகள் கார்டனரை நோக்கி இன்றும் வீசப்படுகின்றன.
ஒரு மாணவரின் ஐ கியூ எனப்படும் மொழி, தர்க்கம் மற்றும் கணித அறிவை மட்டும் கண்டறிந்து அதன் அடிப்படையில் பயிற்றுவிக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்கிறார் கார்டனர். ஏனெனில் அவை மட்டுமின்றி இசை, உடற்கூறு மற்றும் விளையாட்டு, காட்சி மற்றும் வெளி, மனிதர்களோடு தொடர்பு கொள்ளுதல், தன்னிலை அறிதல், இயற்கை இப்படி எட்டு விதமான அறிவுத் திறன்கள் இருக்கின்றன. ஆகவே, ஒரே முறையில் கஷ்டப்பட்டு படித்தது போதும். இனி இஷ்டப்பட்ட விதங்களில் படிக்கலாம் என்பதுதான் கார்டனர் விடுக்கும் அழைப்பு.
கடந்த 25 ஆண்டுகளாக கார்டனரின் பன்முக அறிவுத்திறன் கோட்பாடு உலகெங்கிலும் பல சர்வதேசக் கல்விக் கூடங்களில் சோதிக்கப்பட்டு வருகிறது. அவ்வளவு ஏன்? இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் உள்ள சர்வதேசப் பள்ளிகளில் பன்முக அறிவுத்திறன் கற்பித்தல் முறை அறிமுகமாகியுள்ளது. அவை செயல்படும்விதம், மக்களை சென்றடைய வேண்டிய விதம் குறித்துத் தொடர்ந்து பேசலாம். 

நன்றி இந்து தமிழ் நாளிதழ்

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி....

அன்புடன்  சிவா......

பிளஸ் 2-க்குப் பிறகு:

மாணவர்களை வளர்க்கும் மென்திறன்

எஸ்.எஸ். லெனின்


பள்ளிப் பருவம் முடித்துக் கல்லூரியில் காலடி எடுத்துவைக்கும் மாணவர்களுக்கு, மதிப்பெண்களைக் குவிப்பது அத்தனை பெரிய சிரமமாக இருக்காது. ஆனால், அந்த மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு நல்ல வேலையைத் தேடுவதுதான் குதிரைக்கொம்பு.
மென்திறன்
வேலை தரும் நிறுவனங்களுக்கு உங்களின் மதிப்பெண்கள் ஒரு விசிட்டிங் கார்டு மட்டுமே. ஒரு நிறுவனத்தில் சவாலான பணியைச் சாதிப்பதற்கு மதிப்பெண்களைத் தாண்டி மேலும் நிறைய திறன் தேவைப்படுகிறது. கல்லூரிப் பாடத்துடன் இத்தகைய திறனை வளர்த்துக்கொள்வது இன்றியமையாதது. வேலை தேடலுக்கு மட்டுமல்ல, சமூகத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு மென் திறனே கைகொடுக்கிறது.
மதிப்பெண்களைக் குவிக்கத் தெரிந்த மாணவர்கள்கூட, கல்லூரிப் பருவத்தில் சிறிய பிரச்சினைகளுக்கும் துவண்டுவிழுவது இந்தத் திறன் கைவரப்பெறாமல் இருப்பதால்தான். தடாலென்று சூழ்ந்துகொள்ளும் குழப்பம், மாறிமாறி அலைபாயும் மன எழுச்சி, மன அழுத்தம், நல்லதையும் கெட்டதையும் பிரிக்கும் பக்குவமில்லாதது ஆகியவற்றை உதறித் தள்ளவும் கல்லூரிப் பருவத்தில் மென் திறனே பெரிதும் உதவியாக இருக்கும்.
களத்தைப் பொறுத்து மென் திறனை பல வகையாக வல்லுநர்கள் பட்டியலிட்டிருந்தாலும், கல்லூரி செல்லக் காத்திருப்போருக்கு அவசியமானதாக, கீழ்க்கண்டவற்றை அடையாளம் காட்டுகிறார், பெரம்பலூர் ‘மெஜெல் அண்ட் மெஜெல்’ மென் திறன் பயிற்சி மைய இயக்குநர் சேவியர் அமலதாஸ். இந்த விடுமுறையில் உங்கள் பகுதியில் இருக்கும் மென் திறன் பயிற்சி மையம் மூலமாக மாணவர்கள் இவற்றைப் பயிலலாம்.
1. குழுவாக பணியாற்றல் (Team working):
தனித்து இயங்கும் பள்ளிப் பருவ இயல்புக்கு மாறாகத் திறந்த உலகமாக எதிர்கொள்ளப்படும் கல்லூரிப் பருவத்தில் குழுவாகப் பணியாற்றும் திறன் அவசியம். சக மாணவர்கள், ஆசிரியர்கள், வெளியுலகத்தினர் என அதிக எண்ணிக்கையில் மனிதர்களோடு ஊடாடி அவர்களிடமிருந்து தனக்குச் சிறப்பானதைப் பெற்றுக்கொள்வதும், குழுவாக ஒருங்கிணைந்து இலக்கை அடைவதும் இந்தத் திறனின் வெளிப்பாடாகச் சொல்லலாம்.
பின்னாளில் நிறுவனம் ஒன்றில் பலதரப்பட்ட தனி மனிதர்களை, அவர்களுடைய சாதக பாதகங்களை எடைபோட்டு பொது இலக்கு நோக்கி முன்னெடுக்கும் திறமை குழுவாக பணியாற்றுவது மூலமாகவே கிடைக்கும். எனவே வகுப்புகள், புராஜெக்ட் பணிகள், விளையாட்டு, விடுதி தங்கல் என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு மாணவனாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் இயங்கினால் இந்தத் திறன் எளிதில் வசப்படும்.
2. தகவல் தொடர்பு (Communication):
தாராளமயப் பொருளாதாரத்துக்கு உலகம் மாறியதிலிருந்து தகவல் தொடர்புதான் பல்வேறு நிறுவனங்களின் ஆதாரமாக மாறியுள்ளது. இந்த நிலையில் தகவல்தொடர்புக் கலையின் நுட்பங்களை அறிவது முக்கியம். எழுத்து, பேச்சு, உடல் மொழி என்பவை இந்தத் திறனின் உட்கூறுகள்.
பேச்சு மூலம் ஒருவரைத் தன் வசப்படுத்துவது தனிக் கலை. அதே போலத்தான் எழுதுவதும். இந்த இரு திறன்களையும் பயிற்சியால் சாத்தியமாக்கிக்கொள்ளலாம். ஆனால் உடல்மொழி (Body Language) மூலம் ஒருவருடைய மனஓட்டத்தை உணர்வதையும் உணர்த்துவதையும் நிதர்சன உலகில் பழகியே தெரிந்துகொள்ள முடியும். தண்ணீரில் இறங்கினால் மட்டுமே சாத்தியமாகும் நீச்சல் போல, பல்வேறுபட்ட மனிதர்களிடம் பழகியே உடல் மொழி திறனைக் கூர்மைப்படுத்திக் கொள்ள முடியும்.
3. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் (Problem solving):
பள்ளிப் பருவத்தில் செயல்வழி கற்றல், செய்முறை தேர்வுகளின் நோக்கமே இந்த மென் திறனை மேம்படுத்திக் கொள்வதுதான். பட்டிமன்றம், வாதிடுதல் உள்ளிட்டவையும் செயற்கையாக ஒரு சவாலை உருவாக்கி, அதைத் தன்னுடைய பாணியில் தீர்க்க முயற்சிக்கும் கலைதான். ஆனால், பொத்திப் பொத்தி வளர்க்கும் தற்போதைய பெற்றோர் வளர்ப்பில் குழந்தைகளுக்கு இந்தத் திறனில் பரிச்சயமே கிடைப்பதில்லை.
எனவே, இந்தத் திறனில் புடம் போட்டுக்கொள்ள, தனிப்பயிற்சி அவசியம். கல்லூரிப் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினை ஒவ்வொன்றையும் தடையாகக் கருதாமல், தங்களுடைய திறமையை உரசிப் பார்த்துச் சொல்லக் கிடைத்த சவாலாக எதிர்கொள்ளும் மனநிலை இந்தத் திறனை வளர்த்தெடுக்கும்.
4. நேர மேலாண்மை (Time management):
படிப்போ, விளையாட்டோ, பொழுதுபோக்கோ... எப்போது, எதில் ஈடுபட்டாலும் அப்போது அதை முழுமையாக மேற்கொள்வதே நேர மேலாண்மைக்கு அடிப்படை. ஒரு செயலைத் தொடங்கும் முன்னர் அதற்கு முறையான திட்டமிடல், எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகளைக் கணக்கிடல், சரியான நேரத்தில் தொடங்குதல் ஆகியவை இதன் அடுத்த படிகள். நேர மேலாண்மையின் அருமையைப் புரிந்துகொண்டவர்கள், கல்லூரிப் பருவத்தை என்றைக்கும் நினைவுகூரத்தக்கதாக மாற்றிக்கொள்வார்கள்.
5. கூர் நோக்கு (Observation):
வெற்றிகரமான நபர்களைத் தனித்துக் காட்டுவது அவர்களுடைய கூர் நோக்குத் திறனும், நடைமுறையில் அந்தத் திறனை இதர திறன்களோடு பொருந்தச் செய்வதும்தான். விழிப்புடன் இருத்தலும், வருமுன் அறிதலை வளர்த்துக்கொண்டு, எந்த ஒரு விஷயத்தையும் பகுத்தறிந்து பார்க்க கூர் நோக்கல் திறன் உதவும். இணையத்தில் இந்தத் திறன் வளர்ப்புக்குச் சுவாரஸ்யமான விளையாட்டுகள் கொட்டிக்கிடக்கின்றன.
6. முரண்பாடுகளைத் தீர்ப்பது (Conflict resolution):
அடிப்படையான சமூகத் திறனும், மனிதவள மேம்பாட்டுக் கலையில் அத்தியாவசியமானதும் இதுதான். வெவ்வேறு மனிதர்களைக் கையாள்வதில், அவர்களிடமிருந்து சிறப்பானதைப் பெறுவதற்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இந்தத் திறன் பெரிதும் உதவும். ஆனால், பிரச்சினையைக் கண்டு பின்வாங்குவது, ஒத்திப்போடுவது போன்றவை அண்டாமல் இருப்பது இந்தத் திறன் வளர்ச்சிக்கு உதவும்.
7. தலைமைப்பண்பு (Leadership):
மென் திறனுக்கான பாராட்டு உணர்வு, நகைச்சுவை உணர்வு, குழுவை வழிநடத்தும் ஆற்றல், சிறப்பான மதிப்பீடுகளைப் பின்பற்றுவது என்று தலைமைப்பண்புக்கான பன்முகத்திறன்களை அடையாளம் கண்டு, அவற்றைத் தன்வயமாக்கிக்கொள்ளக் கல்லூரிப் பருவமே சரியான களம்.

நன்றி  தமிழ் இந்து நாளிதழ்
மாணவர்கள் நலம் கருதி.....
அன்புடன் சிவா....

வேளாண்மைக்கு வேட்டு?

பாமயன்

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
வேளாண் சமூகத்தின் மீது ஏற்றப்பட்டுள்ள சுமையை இறக்கி வைக்கும் எந்த முற்போக்கான அறிவிப்புகளும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இல்லை. வேளாண்மைக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைத் தெளிவாக விளக்கியுள்ள நிதி அமைச்சர், அதற்கான தீர்வை மட்டும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து தேடுவது முற்றிலும் முரண்பட்டது.
நாளுக்கு நாள் சாகுபடிச் செலவு உயர்ந்துகொண்டு வரும் வேளையில் இந்தியச் சந்தையை உலகுக்குத் திறந்துவிட்ட பின்னர், மானிய விலையில் பல வெளிநாட்டு பொருட்கள் இந்தியச் சந்தையில் குவிகின்றன. இதனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
சில எடுத்துக்காட்டுகள் மூலம் இதை விளக்கலாம். தேங்காய்க்கான விலை உயரும்போது, சந்தையில் பனை எண்ணெய் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. உடனடியாகத் தேங்காயின் விலையும், கடலையின் விலையும் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கின்றன. இதேபோல் பருத்திக்கு அமெரிக்கா மானியங்களை அளித்து, அங்கே கிடைக்கும் விளைச்சலை மட்டும் மற்ற நாடுகளின் மீது திணிப்பது மூன்றாம் உலக நாடுகளை பாதிக்கத் தானே செய்யும்.
எங்கே மானியம் அதிகம்?
கடந்த 2010-ம் ஆண்டு வேளாண் பொருட்களுக்கு அமெரிக்கா கொடுத்த மானியம் 12,000 கோடி அமெரிக்க டாலர்கள். இந்தியா கொடுத்த மானியம் 1,200 கோடி அமெரிக்க டாலர்கள். அதேநேரம் அமெரிக்க மக்கள்தொகை ஏறத்தாழ 32 கோடி, இந்தியாவிலோ ஏறத்தாழ 120 கோடி. இந்நிலையில் இந்தியா தற்போது தரும் மானியத்தையும் குறைக்க வேண்டும் என்று ஐரோப்பிய, அமெரிக்க வளர்ந்த நாடுகள் நெருக்கடி கொடுத்துவருகின்றன.
அதற்கான அநீதியான ஒப்பந்தங்களில் நமது ஆட்சியாளர்கள் கையெழுத்து போட்டுவிட்டு, அதற்கு உகந்த நிதிநிலை அறிக்கைகளைத் தயாரித்துக்கொண்டு இருக்கின்றனர். அமெரிக்காவில் மானியங்களை அரக்கு நிறப் பெட்டிகளில் (மானியங்களை அரக்குப் பெட்டி, பச்சைப் பெட்டி, நீலப் பெட்டி என்று பிரித்துக் கொடுக்கும் ஒரு வகை உத்தி) இருந்து பச்சைப் பெட்டித் தொகுப்புக்கு மாற்றி, தங்களது உழவர்களைக் காக்கின்றனர். ஆனால், நமது நிதி அமைச்சர் உழவர்களைப் பாதுகாக்கும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
விலகி ஓடும் அரசு
அரசு கொள்முதல் நிலையங்களைக் குறைத்து வெளிச் சந்தைகளில் அரிசி, கோதுமையை வாங்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அதாவது தேவையான உணவு தவசங்களில் 25% மட்டுமே, அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்வது என்று முடிவாகிவிட்டது. அதற்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. ஆக, உழவர்களுக்கு ஓரளவாவது விலையை நேரடியாக உறுதிப்படுத்துவது கேள்விக்குறியாகிவிட்டது.
இனித் தரகர்களும், பன்னாட்டு முதலீட்டாளர்களும் விளைபொருட்கள் விளையும்போது அடிமாட்டு விலைக்கு வாங்கி, சந்தையில் அதிக விலைக்கு விற்பார்கள். ஏற்கெனவே தற்சார்புடன் சாகுபடி செய்து பிழைத்துவந்த உழவர்களை, சந்தையைச் சார்ந்து உற்பத்தி செய்ய வைத்து அழித்தார்கள். இப்போது எந்தச் சந்தைப் பாதுகாப்பும் வழங்காமல், இருக்கும் கொஞ்ச நஞ்ச சந்தை வாய்ப்பையும் தட்டி பறிக்கும் போக்கை என்னவென்று சொல்வது?
காப்பாற்றப் போவது யார்?
குறைந்த அளவாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை வேளாண் பணிகளுடன் இணைத்து, அதன் மூலமாகக்கூட உழவர்களைக் கைதூக்கிவிட முடியும். இதன்மூலம் வேளாண் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள். வேளாண்மையும் ஓரளவு கட்டுப்படியானதாக மாறும்.
ஆனால், இந்த நிதிநிலை அறிக்கை வேளாண் துறைக்கு உண்மையாகத் தேவைப்படும் ரூ. 61,000 கோடிக்குப் பதிலாக, ரூ. 34,000 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது! அதேநேரம் பெரு நிறுவனங்களுக்கான வரி 30%-லிருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு புறம் வேளாண்மைக்கான ஊக்குவிப்பைக் குறைத்துவிட்டு இயல்பாக வேளாண்மையை நலிவடையச் செய்வதற்கான வழி ஏற்படுத்தப்படுகிறது. மற்றொருபுறம் நிலத்தை விற்க வைக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும் கொண்டுவந்து, இந்திய உழவர்களை முற்றிலும் மண்ணைவிட்டு அகற்றும் கொடுமையைத் தடுக்கப் போவது யார்?
- கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 


நன்றி  இந்து தமிழ் நாளிதழ்
உழவர்களின் சார்பாக.....
அன்புடன் சிவா.... 

Sunday, April 05, 2015

கணிதம் அறிவோம்:

 பலகாரம் தின்ற நாள் கணக்கு

எஸ். ஸ்ரீதர்

எந்தக் கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் படித்திராத பழந்தமிழர்கள் கற்பனை திறனிலும், கவிநயத்திலும், கணிதத்திறனிலும் புகழ்பெற்றவர்களாகத் திகழ்ந்துள்ளனர். அத்தகைய திறன்பெற்றவர்களில் ஒருவர் காரிநாயனார்.
இவர் பாண்டிய நாட்டில் உள்ள கொறுக்கையூரில் பிறந்தவர். இவரின் கணிதத் திறனைக் கண்டு வியந்த மன்னர் புராரி நாயனாரின் வேண்டுகோளின்படி காரிநாயனார் இயற்றிய நூலே கணக்கதிகாரம்.
இந்த நூல் காரிநாயனாரின் கற்பனைத்திறனையும், கவிதை நயத்தையும், கணிதத்தில் இவர் பெற்றுள்ள புலமையைக் காட்டுகிறது.
தமிழ் எண் உருவங்கள்
இந்த நூல் முழுவதும் பக்க எண்கள் உட்பட அனைத்துக் கணிதப் புதிர்களும், கணிதச் சூத்திரங்களும் தமிழ் எண் உருவங்களைப் பயன்படுத்தியே எழுதப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்
இந்த நூலில் மொத்தம் 64 வெண்பாக்களும், 46 புதிர் கணக்குகளும் உள்ளன. வெண்பாக்கள் மூலமாகப் பண்டைய கால நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவைகள், உலோகக் கலவை முறைகள், பூமி, சூரியன், சந்திரன் ஆகியவற்றின் தொலைவு, சமுத்திரங்களின் அளவுகள், நாழிகை விவரங்கள், விவசாயம், அறுவடை, கூலி வழங்கும் முறை, வயல்வெளிகளை அளக்கும் முறை, வட்டத்தின் சுற்றளவு, பரப்பளவு காணும் முறை, மிக நுண்ணிய அளவீடுகள் முதல் மிகப்பெரிய அளவீடுகள் வரையிலும் கணக்கிடும் முறைகள் பற்றி தெளிவாக விளக்கவுரையுடன் விவரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக;
அணு எட்டு கொண்டது- கதிரெழுதுகள்
கதிரெழுதுகள் எட்டு கொண்டது- பஞ்சிற்றுகள்
பஞ்சிற்றுகள் எட்டு கொண்டது - மயிர்முனை
மயிர்முனை எட்டு கொண்டது நுண்மணல்
நுண்மணல் எட்டு கொண்டது சிறுகடுகு
சிறுகடுகு எட்டு கொண்டது- எள்ளு
எள்ளு எட்டு கொண்டது நெல்
நெல் எட்டு கொண்டது விரல்
விரல் பன்னிரெண்டு கொண்டது சாண்
சாண் இரண்டு கொண்டது முழம்
என நட்சத்திர மண்டலம் வரை தூரத்தை அளவிடக்கூடிய முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
வட்டத்தின் பரப்பளவு
வட்டத்தின் பரப்பளவைக் காண காரிநாயனார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“விட்டத்தரை கொண்டு வட்டத்தரை தாக்கச்
சட்டெனத் தோன்றும் குழி”
இதன் விவரம்;
விட்டத்தரை (விட்டத்தில் பாதி) = r
வட்டத்தரை (சுற்றளவில் பாதி) =2r/2= r
குழி (பரப்பளவு) = r X r = r2
இதுபோல பல அரிய விவரங்கள் இதில் காணப்படுகின்றன.
புதிர் கணக்குகள்
46 வகையான அன்றாட வாழ்க்கை கணக்குகளைப் புதிர்களாக வழங்கி அதற்கான தீர்வுகளையும் விவரித்துள்ளார் காரிநாயனார். பலாப் பழத்தை வெட்டாமல் அதிலுள்ள சுளைகளைக் கணக்கிடும் முறை, சர்க்கரைப் பூசணியை உடைக்காமல் அதிலுள்ள விதைகளைக் கணக்கிடும் முறை எனப் பல அற்புதமான கணக்குகள் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளன. உதாரணமாக, ஒரு புதிரைப் பார்க்கலாம்.
பலகாரம் தின்ற நாள் கணக்குப் புதிர்
பட்டிணத்தில் இருக்கும் செட்டியார் வீட்டுக்கு மருமகப்பிள்ளை வந்தார். அந்த மருமகப்பிள்ளைக்கு தினந்தோறும் பலகாரம் செய்ய சக்தி போதாமல் ஒரே நேரத்தில் முப்பது ஜாணிகளத்தில், முப்பது ஜாணுயரத்தில், முப்பது ஜாண்கலத்தில் ஒரு பலகாரஞ்செய்து அதனைத் தினம் ஜாணிகளம், ஜாணுயரம், ஜாணகலமறிந்து மருமகனுக்கு விருந்திட்டார்கள் எனில் அதை எத்தனை நாளைக்கு விருந்திட்டார்கள்?
புதிர்விளக்கம்
பலகாரத்தின் மொத்தக் கனஅளவு = 30 x 30 x 30 = 27000 கன அலகுகள்
தினம் விருந்திட்ட பலகாரத்தின் கனஅளவு = 1 x 1 x 1 = 1 கன அலகு
ஒரு வருடத்துக்கு விருந்திட்ட பலகாரத்தின் கனஅளவு = 360 x 1 = 360 கன அலகுகள் (காரிநாயனார் ஆண்டுக்கு 360 நாட்கள் எனக் கணக்கிட்டுள்ளார்)
அப்படியானால் மொத்தப் பலகாரத்தை விருந்திட்ட ஆண்டுகள் = 27000/360= 75 ஆண்டுகள்.
பழந்தமிழர்கள் அந்தக் காலத்திலேயே கணிதத்தில் புலமை பெற்று விளங்கினார்கள் என்பதற்குக் காரிநாயனார் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.
- கட்டுரையாளர், ஆசிரியர் பயிற்றுநர், வேலூர். 
 நன்றி  தமிழ் இந்து நாளிதழ்

மாணவர்கள்  நலம் கருதி.... 
அன்புடன்  சிவா....
 

வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவேன்'

- ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியரின் லட்சியப் பயணம்

குள.சண்முகசுந்தரம்

தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன்
தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன்
“இன்னும் பத்து ஆண்டுக்குள் இந்த ஊரில் வீட்டுக்கு ஒரு பட்டதாரியையும் குறைந்தது ஐம்பது அரசு ஊழியர்களையும் உருவாக்கிவிட்டுத்தான் ஓய்வு பெறுவேன்” என்று உறுதிபடச் சொல்கிறார் தாமரைச்செல்வன்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ளது சித்தாதிக்காடு. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன். 15 ஆண்டுகளுக்கு முன்பே தனியார் பள்ளிக் குழந்தைகளைப் போல இந்தப் பள்ளிக் குழந்தைகளையும் சீருடை, டை அணிந்து மிடுக்காக நடக்கவைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை தந்தவர்.
பொதுவாக கிராமத்துக் குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட பெற்றோருக்கு நேரமும் இருக்காது; ஞாபகமும் வராது. இதனால் தனது பள்ளிக் குழந்தை களின் பிறந்த நாளுக்கு தனது செலவிலேயே கேக் வாங்கி வந்து குழந்தைகள் மத்தியில் அதை வெட்டவைத்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார் தாமரைச்செல்வன். இன்பச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா - இதெல்லாம் இந்தக் காலத்து பள்ளிக் குழந்தைகளுக்கு கனவாகிவிட்ட நிலையில் தாமரைச்செல்வனின் செலவில் இந்தப் பள்ளிக் குழந்தைகள் ஆண்டு தவறாமல் சுற்றுலா போகிறார்கள்.
“இங்க படிக்கிற பிள்ளைங்க எல்லாருமே வறுமைக் கோட்டுல இருப்பவங்க. பெத்தவங்கள கேட்டால் ‘ஆடி மாசம் பொறந்தான்’னு தான் சொல்லுவாங்க. இந்த நிலைமையை மாத்தி, பிள்ளைகளின் பிறந்த நாளை அனைத்துப் பெற்றோருக்கும் தெரியவெச்சேன். ஒருவாரம் முன்னாடியே பிறந்த நாள் தேதியை பெத்தவங்களுக்கு தெரிவிச்சிருவோம். ஆரம்பத்துல கேக் மாத்திரமில்லாமல் புத்தாடையும் நானே எடுத்துக் குடுத்தேன். இப்ப, ஒன்றிரண்டு பேர் தவிர மத்தவங்க புத்தாடை எடுத்துடுறாங்க. கேக், சாக்லேட் மட்டும்தான் நம்ம செலவு. பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்து மேல நாட்டம் வந்தாதான் படிப்புல ஆர்வம் காட்டுவாங்க. அதுக்காகத்தான் இப்படிச் சின்னச் சின்ன வேலைகளை செய்யுறோம். வீட்டில் நம்ம பிள்ளைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட மாட்டோமா? அப்படித்தான் நினைச்சுக்குவேன்.
வறுமையில இருந்தாலும் சில குடும்பங்களை குடி சீரழிக்குது. அதனாலேயே பிள்ளைகளை மேல்படிப்பு படிக்க வெக்க முடியாம திண்டாடுறாங்க. இன்னும் சிலருக்கு இயல்பாகவே வறுமை காரணமா படிப்பை தொடர முடியாம போயிடுது. அப்படி பாதியில் படிப்பை நிறுத்த வேண்டாம். மேலே படிக்க நான் உதவி செய்யுறேன்னு தைரியம் கொடுத்து பல பிள்ளைகளை கல்லூரி வரைக்கும் கொண்டு வந்துட்டேன்.
மது அருந்தும் தகப்பன்களிடம், ‘நீ குடியை விடுறதா இருந்தா உன் பிள்ளையை நான் படிக்க வைக்கிறேன்’ என்று சொல்லி அவங்கள குடியிலிருந்தும் மீட்க முயற்சிக் கிறேன். எனது முயற்சிக்கு நல்ல பலன் கிடைச் சிருக்கு. இப்ப இந்த ஊருல மொத்தம் 187 பட்டதாரிகள் இருக்காங்க. ஆனா அரசு ஊழியர் ஒருத்தர்கூட இல்லை.
எஞ்சி இருக்கிற எனது பத்தாண்டு பணிக் காலத்துக் குள்ள இந்த ஊருல வீட்டுக்கு ஒரு பட்டதாரியையும் குறைஞ்சது 50 அரசு ஊழியர்களையும் உருவாக்கிக் காட்டுவேன். அதுக்காக விரைவில் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுறதுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம்னு இருக்கேன்” என்கிறார் தாமரைச்செல்வன். 

நன்றி இந்து தமிழ் நாளிதழ்
 ஆசிரியர்களின்  புனிதம் கருதி......
 வாழ்த்துகளுடன்....
 சிவா....