Sunday, May 14, 2023

ஆசிரியர்களுக்கு தோல்வியே இல்லை...

.*ஆசிரியர்கள் எங்கே தோற்றுப்போகின்றனர்?*

📝ஓர் ஆசிரியருக்கு பிரச்சினை என்று வரும்பொழுது,
அவர் தொடக்கப்பள்ளியா?
ஆரம்பப் பள்ளியா?
கூட்டணியா?
SSTA?
மன்றமா? எனப் பார்த்து பிரிந்து நிற்கும்பொழுது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்.


📝ஆசிரியர் இனத்திற்கு ஒரு பிரச்சினை என்னும்பொழுது,
இடைநிலை ஆசிரியருக்கா?
பட்டதாரி ஆசிரியருக்கா?
முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கா? எனப் பாகுபாடு பார்க்கும்பொழுது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்..


📝ஓர் ஆசிரியர் தவறு செய்தால், 
அவரைக் கண்டிப்பதையோ,
தண்டிப்பதையோ
தடுக்க சங்கம் என்ற போர்வையில் முன்னே ஒரு சங்கம்
முன்னே  வரும்பொழுது
ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்.

📝தவறே செய்யாத ஆசிரியர்கள் பாதிக்கப்படும்பொழுது, நமக்கேன் வம்பு என பிற ஆசிரியர்கள் ஒதுங்கி நிற்கும்பொழுது தோற்றுப்போகின்றனர்.


📝ஏதோ ஒரு சங்கத்தில்
இணைந்துவிட்டால்
அவர்கள் தவறு செய்யும்பொழுதும் 
குரல் எழுப்பாமல்
எப்பொழுது அமைதியாய் இருக்கத் தொடங்கினார்களோ
அன்றே ஆசிரியர்கள் தோற்கத் தொடங்கிவிட்டனர்

📝ஏதோ ஒரு மூலையில்
புயலோ, பூகம்பமோ என்றால் துடிக்கும் ஆசிரியர்கள்,
ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியருக்குப் பிரச்சினை என்றால் மட்டும் அமைதியாக இருக்கும்போது தோற்கத் தொடங்குகின்றனர்.


📝கல்விமுறையிலோ
கற்பித்தல் முறையிலோ ஒரு மாற்றம் வரும்பொழுது
அது சரியா? தவறா?
என விவாதிக்காமல்
அனைத்திற்கும் தலையாட்டும்பொழுது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்.


📝சக ஆசிரியரின் திறமையைப் பாராட்ட மனமின்றி புறம்கூறத் தொடங்கும்பொழுது 
ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்.

📝LKG, UKG க்கு பல்லாயிரம் ஆசிரியர்களை தரம் இறக்கியபோது, 
லட்சம் ஆசிரியர்கள் வேடிக்கை பார்த்தபொழுதே தோற்கத் தொடங்கினர்.

📝ஒரே பணிநிலையில்
வேலை பார்க்கும் 
சக ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைத்துக் கொடுக்கும்பொழுது உரத்தக் குரல் கொடுக்காமல் வேடிக்கை பார்த்தபொழுதே தோற்கத் தொடங்கினர்.


📝ஆசிரியர்கள் தங்களுடைய அளப்பரிய பணிக்கான பாராட்டு  மேடைகளிலும்,
ஊடகங்களிலும் என நம்பி, எப்பொழுது அவற்றைத் தேடத் தொடங்கினார்களோ!
அன்றே தோற்கவும் தொடங்கிவிட்டனர்.


📝கல்விமுறையில் உள்ள
பிரச்சினைகளை உணராமல்
அங்கன்வாடிகளை
தொடக்க நிலையும்,
தொடக்க நிலையை
உயர்நிலையும்,
உயர்நிலையை மேல்நிலையும்
மாற்றி ,மாற்றி 
குறை சொல்லத் தொடங்கும்போதே தோற்கவும் தொடங்கிவிட்டனர்.

📝ஊதியத்தை வைத்து,
பதவியை வைத்து,
என்றைக்கு ஆசிரியர்கள் தங்களைத் தரம்பிரித்துப் 
பழகத் தொடங்கினார்களோ அன்றே தோற்கத் தொடங்கிவிட்டனர்.


📝மாணவர்களிடம் குடிக்காதே எனச் சொல்லும்
ஆசிரியர்கள்,
அரசிடம் 
ஏன் சாராயக் கடைகள்? எனக் கேட்க முடியவில்லை!

📝சுற்றுச்சூழல் காப்போம் எனக் கற்றுத்தரும் ஆசிரியர்கள் 
அரசிடம் ஏன் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள்? எனக் கேட்க முடியவில்லை.

📝தவறு எனத் தெரிந்தும்
நமக்கேன் வம்பு என
ஆசிரியர்கள் ஒதுங்கத் தொடங்கிய நாட்களிலேயே ஆசிரியர்களைத் தோல்விகளும் துரத்தத் தொடங்கி விட்டன.


உண்மை
என்னவெனில்
தோல்வி என்பதே இல்லை..
எல்லாம் தற்காலிகப் பின்னடைவு தான்...

தற்காலிகம்
நிரந்தரமானால்
அதுதான் தோல்வி...

என்ன செய்யப் போகிறது ஆசிரியர் சமுதாயம்...

சமூதாய மற்றும் ஆசிரியர் நலன் கருதி
நன்றி
பகிர்வு பதிவு

Monday, May 08, 2023

மார்க் மட்டும் வாழ்க்கையா..?

படிப்பு ஒண்ணு தான் ஒருத்தரை உயர்த்தும்... 
Spread the message to needy students,  let them study

*DEAR PARENTS AND KIDS* ....

மார்க் குறைந்தாலும் சாதிக்கலாம் Today 

+2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்குப் பிரச்னையில்லை. 
மருத்துவம், பொறியியல் என அவர்களுக்கான தேடல் விரிகிறது. 

*குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள்.. கவலைப்பட வேண்டாம்..*

*அதற்காக மனம் உடையத் தேவையில்லை. ஏகப்பட்ட வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன..* 

*சொல்லப் போனால், பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்குக் கிடைக்காத பெரிய பெரிய வாய்ப்புகள் எல்லாம் இவர்களுக்காகக் காத்திருக்கின்றன.*

மதிப்பெண் என்பது ஒரு தகுதி. ஒரே தகுதியல்ல. வாழ்க்கையில் ஜெயிக்க கம்யூனிகேஷன், விழிப்புணர்வு, சமூக அக்கறை, பர்சனாலிட்டி, ஒழுக்கம் என வேறு சில தகுதிகளும் தேவைப்படுகின்றன. நல்ல மதிப்பெண் பெறுபவரே புத்திசாலி, பெற முடியாதவர் புத்திசாலி அல்ல என்ற கற்பிதமே தவறானது.

 மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் பெரிய தொடர்பில்லை. சூழ்
நிலையும், பொருளாதாரப் பின்னணியும்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கிறது.

 மதிப்பெண் குறைந்ததற்காக வருந்தவும், குழப்பம் அடையவும் அவசியமில்லை. 

*முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். மருத்துவமும் பொறியியலும் மட்டுமே படிப்பல்ல. 250க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய துறைகள் உண்டு.* 
அதில் பல துறைகள் ‘கோரிக்கையற்று கிடக்குதன்னே’ என்று பாரதிதாசன் சொன்னது போல, வேலைவாய்ப்புகளை ஏந்திக்கொண்டு கண்டுகொள்வார் இல்லாமல் காலியாக இருக்கின்றன.* 

*அந்த துறைகளில் ஜொலிப்பவர்களுக்கு மருத்துவர்களை விடவும், பொறியாளர்களை விடவும் மிகப் பெரும் சமூக அந்தஸ்து கிடைக்கிறது.* எனவே மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. 

*ஒரு கதவு மூடப்பட்டிருக்கலாம். நீங்களே எதிர்பாராத பொக்கிஷங்கள் நிறைந்த இன்னொரு அறையின் கதவு உங்களுக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது.* 

‘டாக்டராக நினைத்தேன், மதிப்பெண் குறைந்துவிட்டது’ என்று வருந்துபவர்கள், நல்ல ஆசிரியராகி பத்து டாக்டர்களை உருவாக்க முடியும். ஆசிரியர்களுக்கு இந்த உலகமே தலைவணங்கும்.

 முதுகலை முடித்துவிட்டு பி.எட் படித்தால் போதும். பிஹெச்.டி முடித்தால் பேராசிரியராகவே ஆகலாம். ஆசிரியர் தேர்வுகள் முறைப்படுத்தப்பட்டு விட்டன. நல்ல ஆசிரியர்களுக்குத் தேவை எக்காலமும் இருக்கிறது. ‘இல்லை... இல்லை... மருத்துவம் சார்ந்துதான் என் வாழ்க்கை அமைய வேண்டும்’ என்பவர்களுக்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள் உண்டு. எம்.பி.பி.எஸ் படித்தால்தான் டாக்டர் என்றில்லை. சித்தா படிக்கலாம்... ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை மருத்துவம்... இதிலெல்லாம் போட்டியும் செலவும் குறைவு. பிசியோதெரபி படிக்கலாம். எம்.பி.டி முடித்து, பிஹெச்.டி வரை செல்லமுடியும். தகுதியை வளர்த்துக்கொண்டால் ஒலிம்பிக் வீரர்களுக்கே போய் சிகிச்சை அளிக்கலாமே..? பிசியோதெரபிஸ்ட்கள் இல்லாமல் மருத்துவத்துறை இனி இல்லை. அந்த அளவுக்கு வாய்ப்பு விசாலமாக இருக்கிறது. நர்சிங் படிக்கலாம். அதிலும் பிஹெச்.டி வரை போக வாய்ப்புண்டு. ஸ்காலர்ஷிப்புகள் கிடைக்கும். நர்சிங் முடித்த ஆண்கள் ராணுவத்துக்குச் சென்றால் நேரடியாக மேஜராகவே ஆகலாம். 

பார்மசியில் உயர்கல்வி முடித்தால் சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் வேலைக்குச் செல்லலாம். அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றலாம். விலங்கியல் சார்ந்த மருத்துவப் படிப்புகளும் இருக்கின்றன. கால்நடை மருத்துவம், மீன்வளப் படிப்புக்கெல்லாம் கூட நிறைய வேலைகள் காத்திருக்கின்றன. நியூட்ரிஷன் அண்டு டயடிக்ஸ் முடித்தால், மருத்துவருக்கு இணையாக அமர்ந்து ஆலோசனை வழங்கலாம். 

நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் விவசாயம் சார்ந்த படிப்புகளை நாடுவதில்லை. அந்தத் துறைக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு. விவசாய நுட்பங்கள் மாறி வருவதால், அதுசார்ந்த பட்டதாரிகளுக்கு கௌரவமான வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அக்ரிகல்ச்சர், தோட்டக்கலை படிப்புகளைத் தேர்வு செய்யலாம். கம்ப்யூட்டரோடு இணைந்த வேளாண் படிப்புகள் நல்லது. 
இயற்பியல், கணிதம், வேதியியல் துறைகளில் இளங்கலை படிப்பவர்கள் பிஹெச்.டி வரை போகமுடியும். 5 வருடத்தில் மருத்துவம் படிப்பவர்கள் டாக்டராக அமரும்போது, இவர்களும் ‘டாக்டராக’ அமர முடியும். 

பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்புள்ள ஏதாவது ஒரு டிப்ளமோவை குறைந்த செலவில் முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து சம்பாதித்துக்கொண்டே பகுதி நேரத்தில் 3 வருடத்தில் பி.இ முடித்துவிடலாம். இப்படி முடிப்பவர்களுக்கு பிராக்டிகல் நாலட்ஜ் அதிகம் இருக்கும் என்பதால் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 

இன்னொரு சாய்ஸும் இருக்கிறது. அது, AMIE (Associate Member of the Institution of Engineers). பொறியியலுக்கான தொலைதூரக் கல்வி. வேலை செய்தபடியே படிக்கலாம். ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் முதல் ஆர்க்கிடெக்சர் வரை எதையும் இதில் படிக்க முடியும். அனைத்தும் பி.இக்கு இணையானவை. இதை முடித்தவர்கள் எம்.இ, பிஹெச்.டி கூட படிக்கமுடியும். இதன் தலைமை அலுவலகம் கொல்கத்தாவிலும், தமிழக அலுவலகம் சென்னை, சிவானந்தா சாலையிலும் உள்ளன. செக்ஷன் ஏ, செக்ஷன் பி என இரண்டு பாடத் திட்டங்கள் உண்டு. மொத்தம் 19 பாடங்கள். +2வில் 45 சதவீத மதிப்பெண் எடுத்தவர்கள் சேர முடியும். பாடங்கள் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். அதற்காக ஏகப்பட்ட பயிற்சி நிலையங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. கூடுதல் உழைப்பும் ஈடுபாடும் இருந்தால் எளிதாக முடிக்கலாம். அதிகபட்சம் 12 வருடங்கள் வரை தேர்வு எழுதமுடியும். ரூ.1.5 லட்சத்துக்குள் படிப்பை முடித்துவிடலாம். தவணைமுறையில் கட்டும் வசதியுண்டு. நிறைய ஸ்காலர்ஷிப்புகளும் கிடைக்கும்.

 எஞ்சினியரிங்குக்கு இணையாக, நேரடி தொழில்வாய்ப்புகள் கொண்ட எத்தனையோ கலை, அறிவியல் படிப்புகள் வந்துவிட்டன. இன்றைக்கு பெரிய பெரிய சாஃப்ட்வேர் நிறுவனங்கள் பி.இ படித்தவர்களை விட பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.சி.ஏ, பாலிடெக்னிக் மாணவர்களையே விரும்புகின்றன. பி.காம், பி.பி.ஏ படிப்புகளிலும் நிறைய நவீனங்கள் வந்துவிட்டன. ஏதாவது ஒரு டிகிரி முடித்துவிட்டு, டி.என்.பி.எஸ்.சி, யூ.பி.எஸ்.சி, ஐ.பி.பி.எஸ், ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன், ஆர்.ஆர்.பி தேர்வுகளை எழுதி, தேர்ச்சி பெற்று உச்சத்தில் அமரலாம். யூ.பி.எஸ்.சியில் மட்டும் 28க்கும் மேற்பட்ட துறைகள் உண்டு. பி.எஸ்சி புள்ளியியல் முடித்து, எம்.எஸ்சி முடித்து ஐ.எஸ்.எஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் கலெக்டர் ரேங்க்கில் அதிகாரி ஆகலாம். 

இவ்வளவு ஏன்... ராணுவத்தில் எவ்வளவு வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன? அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் இந்தப் பக்கமெல்லாம் வருவதில்லை. +2வில் பிசிக்ஸ் வித் கெமிஸ்ட்ரி முடித்த திடகாத்திரமானவர்கள் ஒரு தேர்வு எழுதி ராணுவத்தில் நேரடியாக ஏர்மேன் ஆகலாம். ரேடார் மெக்கானிக் போன்ற பணிகளில் நியமிக்கப்படுவார்கள். இந்த தேர்வுக்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளது. ழிஞிகி எனப்படும் நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி நடத்தும் தேர்வை எழுதி ராணுவக்கல்லூரியில் படித்து, முப்படைகளில் ஒன்றில் ராணுவ அதிகாரியாக பணியில் சேரலாம். இதற்கான அறிவிப்பு ஒவ்வொரு வருடமும் ஜூன் அல்லது டிசம்பரில் வெளியாகும். அல்லது ஒரு டிகிரியை முடித்துவிட்டு CDS எனப்படும் கம்பைண்டு டிஃபென்ஸ் சர்வீசஸ் தேர்வு எழுதி பணியில் இணையலாம். இதற்கான அறிவிப்பும் டிசம்பரில் வெளியாகும். 

நம்மூரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் இருப்பது பலருக்குத் தெரியாது. ஏகப்பட்ட கோர்ஸ்கள் உள்ளன. ஸ்போர்ட்ஸ் மெக்கானிக் என்றொரு படிப்பு கூட இருக்கிறது. விளையாட்டு ஆர்வலர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தைத் தேடலாம். ஓவியம் வரைவதில், சிற்பம் வடிப்பதில் ஆர்வமா... கும்பகோணம், சென்னை, மாமல்லபுரத்தில் கவின்கலைக் கல்லூரிகள் உள்ளன. போட்டிகள் குறைவு. நிறைவான திறமையோடு வெளியில் வரலாம். இசையில் ஆர்வமுள்ளவர்கள் அரசு இசைக்கல்லூரிகளில் இணையலாம். 

ஓரளவுக்கு வசதியிருக்கிறதா... வானத்தில் பறக்க ஆசையா... பைலட் ஆகலாம். இதில் மூன்றுவகை உண்டு. கமர்ஷியல் பைலட், மிலிட்டரி பைலட், ஸ்பேஸ் பைலட். சென்னை ஃபிளையிங் ஸ்கூலில் கமர்ஷியல் பைலட் படிக்கலாம். இதில் மூன்று நிலைகள் உண்டு. முதலில் ஸ்டூடன்ட் பைலட் லைசன்ஸ். அடுத்தது, பிரைவேட் பைலட் லைசன்ஸ், மூன்றாவது நிலை, கமர்ஷியல் பைலட் லைசன்ஸ். 

கற்பனைத்திறன் மிகுந்தவரா நீங்கள்? சமூகத்தின் மரியாதைக்குரிய மீடியா துறையில் சாதிக்கலாம். போட்டோகிராபி, வீடியோ எடிட்டிங், சவுண்ட் எஞ்சினியரிங், ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேஷன், விஷுவல் கம்யூனிகேஷன், வெப் டிசைனிங் படிக்கலாம். அனிமேஷனுக்கு மிகச்சிறப்பான வாய்ப்புகள் இருக்கின்றன. 

சட்டம் படிக்கலாம். இப்போது சாஃப்ட்வேர் கம்பெனிகளில் கூட சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மருத்துவத்தைப் போல, சட்டத்திலும் பல சிறப்புப் பிரிவுகள் வந்துவிட்டன.   சிலிகிஜி எனப்படும் காமன் லா அட்மிஷன் டெஸ்ட் எழுதி மத்திய சட்டக்கல்லூரிகளில் சேரலாம். 

கடல் பிடிக்குமா..? இருக்கவே இருக்கிறது கடல்சார் பல்கலைக்கழகம். ஷிப்பிங் மேனேஜ்மென்ட், ஷிப்பிங் பைனான்ஸ், ஷிப்பிங் டெக்னாலஜி என ஏகப்பட்ட டிகிரி, டிப்ளமோ படிப்புகள் இருக்கின்றன. அவற்றை தேர்வுசெய்து கடலுக்குள்ளாகவே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். இத்துறையில் உடனடி வேலைவாய்ப்பு, கணிசமான சம்பளம் கிடைக்க வாய்ப்புண்டு. 

நம்புங்கள் மாணவர்களே... பிஏ, பி.எஸ்சி, பி.காம் படிப்புகளும் படிப்புகள்தான். அவற்றைப் படித்தால் வாழ்க்கை அஸ்தமித்துவிடாது. மற்றவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை விட இவர்களுக்கே கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். 

மதிப்பெண் கிடக்கட்டும். கவலையை விடுங்கள். இந்த உலகம் எல்லோருக்குமானது. *நீங்கள் சாதிக்க இந்த உலகத்தில் பரந்த வெளிகள் உண்டு.* *சரியானதைத் தேர்வு செய்யுங்கள். அதில் முழுக்கவனத்தையும் செலுத்தி படியுங்கள். நிச்சயம் சிகரம் தொடுவீர்கள்!’’*

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன் கருதி...
 
நன்றி..

பகிர்வு பதிவு...

Saturday, May 06, 2023

வாழ்வை..வாழுங்கள்...உங்களுக்காக...!

_*வாழுங்கள்...உங்களுக்காக*_ 

இறுதிஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவுக்கு  ஆர்டர்கள்  ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,

பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருபார்கள்

படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,..

சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,..

ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.

மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்.

இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,

தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..
கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

அடுத்து வரும் நாட்களில்
நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..

உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,

ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, 
உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.

இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர், 

அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,

அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,

ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்,

மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும்,  ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்..

நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,
இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.

கண்மூடித் திறக்கும் நொடியில்
வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, 
என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்,

உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய்,அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..

மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும்..

மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,
இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?. 

உங்கள் வாழ்க்கை , யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை, யாரும் உங்களை திருப்தி படுத்தபோவதும் இல்லை. வாழுங்கள் உங்களுக்காகவும் வாழுங்கள் ...

படித்ததில் மனதை தொட்டது...

நன்றி..
பகிர்வு பதிவு...