Wednesday, September 25, 2019

புதிய பார்வை...புதிய கோணம்....

🍁🍁புதிய பார்வை🍁🍁

வெற்றிகரமான மனிதர்களின் செயல்களை கவனித்து பார்த்தால், ஒரு முக்கிய கருத்து புலப்படும்.

அவர்களது திடமான குறிக்கோளை செயல்களாக மாற்றுவது, ஒரு ''ஊக்கியாக'' இருக்கும்.

அந்த ஊக்கிதான்
"உற்சாகம்''.

உற்சாகமே
அவர்களது உயிர்.

சாதனையாளர்கள் அனைவரையும், இந்த உற்சாகம் 'கள்வெறி' போன்ற போதையை தந்து, அவர்களை குறிக்கோளை நோக்கி
இட்டுச் செல்கிறது.

வாழ்வில் ஒரு புதிய மலர்ச்சி, அழுத்தமான ஈடுபாடு, மகத்தான அர்த்தம் தென்படும்.

நீங்கள் விரும்பினால், சோம்பலை நினைத்து,பேசி, சோம்பேறியாகி துயரத்துடன் ஆழ் இருளில், இருக்கவும் இருக்கலாம்.

இல்லை...

அதே முறையில் ஊக்கம், உற்சாகம் பெற்று மகிழ்ச்சி ஊற்று ததும்பி வழியும் புது வாழ்வையும், அமைத்து கொள்ளலாம்

"உலகில் சரித்திர முக்கியத்துவம் பெறும் பெரிய தருணங்கள், உற்சாகத்தின் வெற்றியையே அறிவிக்கிறது" என்கிறார் எமர்ஸன்.

'ஒரு வருடத்தில் முடிக்கும் போரை நெப்போலியன், இரண்டே வாரத்தில் முடித்துவிட்டான்' என்றால் அதன் மூல காரணம் அவனது உற்சாகம்தான்!

மனிதர்களுக்கு எல்லா வயதிலும், அங்கீகாரமும் பாராட்டுக்களும்தான் உற்சாகத்தை தரக்கூடியதாகவே இருக்கிறது.

அந்த உற்சாகம்தான், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சாதித்து வெற்றி அடைய வேண்டும் என்கிற உத்வேகத்தைத் தருகிறது.

இசை அமைக்க விரும்பிய
ஒரு 12 வயதுச் சிறுவன்,
மேதை மொசார்ட்டை அணுகி,

"ஐயா! இசை அமைக்க விரும்புகிறேன். எப்படி ஆரம்பிப்பது?" என்று கேட்டான்.

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்றார் மொசார்ட்.

"ஆனால் நீங்கள் என்னைவிட இளம் வயதில் ஆரம்பித்து விட்டீர்களே?" என்றான் அந்த சிறுவன்.

"ஆம், உண்மைதான்! ஆனால் உன்னைப் போல் யாரையும் அணுகி எப்படி ஆரம்பிப்பது என்று நான் கேட்க வில்லையே. இசை அமைக்க ஊக்கமும், உற்சாகமும் வந்தவுடன் அமைக்க வேண்டியதுதான்"
என்றார் மொசார்ட்.

வாங்க
நட்பூக்களே...

'உற்சாகத்தை
நினைப்போம்,

உற்சாகம் பற்றி
பேசுவோம்,

உற்சாகமாக
செயல்படுவோம்,

உற்சாக
மனிதராகவே
ஆகிவிட முயற்சிகள்
செய்வோம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

Tuesday, September 24, 2019

பெற்றோர்களே ஒரு நிமிடம்...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*சிறுவர் முன் பெற்றோர் செய்யக்கூடாத 10 விடயங்கள்!*

குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் பெற்றோர்தான். அவர்களிடமிருந்தே தனது பழக்க வழக்கங்களை உருவாக்கிக்கொள்கின்றன குழந்தைகள். அதனால், பெற்றோர் தனதுகுழந்தைகளுக்குக் கூற வேண்டியதை, வாழ்ந்து காட்டினாலே போதும். இது, குழந்தை வளர்ப்பில் முதன்மையான அம்சம்.
பெற்றோர் கடைப்பிடிக்கும் நல்ல விஷயங்களைக் குழந்தை பின்பற்றும் பழக்கம் கெட்டவிஷயங்களிலும் தொடரும். எனவே, குழந்தைகள் முன் செய்யக்கூடாதவை குறித்த முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. ஏனெனில், குழந்தைகளால் நகர்த்த அல்லது தூக்க முடியாத பொருள்களை அவர்கள் முன் நகர்த்த, தூக்க முயலாதீர்கள் என்று கூறுகிறார்கள். எனவே, பெற்றோர் தங்கள் குழந்தையின் முன் செய்யக் கூடாத விஷயங்களில் முக்கியமான 10-ஐ மட்டும் பார்ப்போம்.

*1. சண்டை தவிர்:*

எவ்வளவு தீவிரமான விஷயமாக இருந்தாலும் குழந்தையின் முன் சண்டைப் போடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், சண்டை போடும்போது அதிக உணர்ச்சிவசப்பட்டு, தவறான வார்த்தைகளைக் கூறிவிடலாம். ஒருவர் மற்றவரை அடிக்கும் சூழலும் ஏற்படலாம். இவை எல்லாமே குழந்தையின் மனதில் ஆழப் பதிந்துவிடும். இது ஆரோக்கியமானதல்ல.

*2. பொய் :*

பொய் சொல்லாமல் ஒரு நாளை கடத்துவது என்பது முடியாது என்கிற நிலையில்தான் நாம் இருக்கிறோம். ஆனாலும், இயன்றவரை குழந்தைகளின் முன் பொய் பேசுவதைத் தவிர்க்கவும். நிறைவேற்ற முடிகிற வாக்குறுதிகளை மட்டுமே கொடுங்கள். வீண் ஆசைகளை உருவாக்கும் பொய்களைக் கூற வேண்டும்.

*3. புறம் பேசாதீர்:*

உங்கள் வீட்டிலுள்ளவரையோ உறவினரையோ புறம் பேசாதீர்கள். புறம் பேசினீர்கள் என்றால், அந்த நபர் பற்றிய உங்கள் குழந்தையின் மனநிலை மோசமாக மாறக்கூடும் அல்லது அவர் இல்லாதபோது வேறு விதமாகப் பேசும் உங்களைப் பற்றிய சித்திரம் உடையக்கூடும்.

*4. விதிகளை மீறாதீர்:*

சாலையில் செல்லும்போதோ அலுவலகத்துக்குச் செல்லும்போதோ அங்குள்ள விதிகளை மீறாதீர்கள். இது குழந்தைகளுக்கான அடிப்படைப் பண்புகளை உருவாக்குவதில் பிரதானமான இடம் பிடிப்பவை. எனவே கவனத்துடன் செயல்பட வேண்டும்.

*5. கேலி:*

ஒருவரின் நிறம், உயரம், குள்ளம், தோற்றம் போன்றவற்றைக் கேலி செய்யாதீர்கள். நீங்கள் கேலி செய்யும் குணத்தில் உங்கள் குழந்தைக்கு நண்பர்கள் இருக்கக்கூடும். நீங்கள் செய்யும் கேலிச் சொற்களை, தங்கள் நண்பர் மீதும் பிரயோகிக்கப் பழகிவிடுவர்.

*6. போதை :*

ஒருவேளை சிகரெட் அல்லது மது அருந்தும் பழக்கம் இருக்கும்பட்சத்தில் மறந்தும்கூடக் குழந்தையின் முன் அவற்றைச் செய்துவிடாதீர்கள். ஏன் என்பதை விளக்க வேண்டியதில்லை.

*7. சாதி, மதம்:*

ஒருவரின் தோற்றத்தைக் கேலிச் செய்யாமல் இருப்பதைப் போலவே, அவரின் சாதி, மதம் பார்த்து பிரிவினையோடு பழகாதீர்கள். அவர்களின் சாதி, மத அடையாளங்களை இழிவுப் படுத்தவும் செய்யாதீர்கள். இந்தப் பழக்கம் உங்கள் குழந்தை சமூகத்தில் இயங்குவதற்கு முக்கியமாகத் தேவைப்படும். நீங்கள் விதைக்கும் பாகுபாடு பார்க்காமைதான் பின்னாளில் குழந்தைகளின் குணத்தையே தீர்மானிக்கும்.

*8. உறவுகள் மீதான மதிப்பீடு:*

நாம் மதிக்கும் உறவுகள் மீதான மதிப்பீட்டைக் குலைக்கும் விதத்தில் நடந்துகொள்ளாதீர்கள். வீட்டில் உள்ள முதியவர்களை மதிக்காமல் நடந்துகொள்வதைப் பார்க்கும்போது அந்த முறையையே குழந்தைகளும் பின்பற்றுவார்கள். மேலும், உறவுகள் மீதான அன்பும் ஈர்ப்பும் குறைந்துவிடும்.

*9. டிவி:*

டிவியைப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டால்தான் உணவு உள்ளிறங்கும் நிலையில் பல குழந்தைகள் உள்ளனர். அந்தளவுக்கு டிவி அவர்களை ஈர்த்துவிட்டது. ஆனால், அவர்களோடு நீங்கள் சேர்ந்து டிவி பார்க்கும்போது மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள். குழந்தைகளின் வயதுக்கு மீறிய நிகழ்ச்சிகளை, சேர்ந்து பார்க்காதீர்கள். அது எவ்வளவு முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தாலும்கூட.

*10. ஜங்க் ஃபுட்:*

உடலுக்கு ஒவ்வாத ஜங்க் ஃபுட் சாப்பிடக் கூடாது என்கிற அறிவுரையைக் குழந்தைகளுக்குச் சொல்வதோடு பெற்றோர் கடமை முடிந்துவிடுவதில்லை. நீங்களும் அவற்றைத் தவிர்க்க வேண்டும். அதுவும் குழந்தைகளின் முன் சாப்பிடவே கூடாது. ஒருநாள் தானே என்று நீங்கள் நினைக்கலாம். அந்த விதி தளர்த்தலையே குழந்தைகள் அடிக்கடி செய்ய வலியுறுத்துவர்.

🙎🏼‍♂🙎🏼‍♂🙎🏼‍♂🙎🏼‍♂🙎🏼‍♂🙎🏼‍♂🙎🏼‍♂🙎🏼‍♂

Sunday, September 22, 2019

எம் பள்ளி மாணவனின் படைப்பு இன்றைய (23-9-19) தினகரன் நாளிதழில் வெளி வந்துள்ளது. 

புதிய பார்வை...புதிய கோணம்...

நிகோலோ பகாநினி என்பவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய வயலின் மேதை.

ஒருநாள் ஒரு முக்கிய கச்சேரியில் அவர் வயலின்
வாசித்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு கம்பி அறுந்து  அபஸ்வரமேற்பட்டது.

மீதியிருந்த கம்பிகளிலேயே மிக அழகாக வாசிக்க ஆரம்பித்தார் அவர்.

சற்று நேரத்துக்கெல்லாம், இரண்டாவது கம்பியும் அறுந்தது!

அப்போதும் அவர்
தொடர்ந்து வாசித்தார்.

பின்னர் சொல்லிவைத்ததுபோல மூன்றாவது கம்பியும்
அறுந்து தொங்கியது.

ஆனாலும் அவர்
மனம் தளரவில்லை.

வாசிக்க வந்த
இசையை, ஒரே கம்பியில்
அழகாக வாசித்து,
முடித்துவிட்டுத்தான்
அவர் இறங்கினார்.

இத்தனைக்கும் அப்போது அவர் மிக பெரிய
இசை மேதை இல்லை...

ஆனால் பிரச்னையை
எதிர்கொள்வதில்
உறுதியாக,
சவால்களை ஏற்றுக்கொள்வதில்
நாட்டமுடையவராக
இருந்ததால் 
இது சாத்தியமாயிற்று.

வாங்க...

தினசரி வாழ்வில் நமக்கும் பல்வேறு பிரச்சினைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன...

அந்த நேரங்களில், உள்ளத்தில்   உறுதியுடன் நாம் செயல்படும் வேளையில்,வெற்றி நிச்சயம் நம்மை தேடி வந்தே தீரும்.

அன்புடன்
காலை
வணக்கம்.

Saturday, September 14, 2019

புதிய பார்வை....புதிய கோணம்...

ஒரு பாரசீக பேரரசனுக்கு திடீரென்று ஒரு பெரும் நோய் பீடித்தது.

அது
என்ன நோய்?

நம் எல்லோருக்கும் தெரிந்த, நம்
எல்லோரையும் பீடிக்கும் நோய்தான்.

அந்த நோயின் பெயர் 'கவலை'

ஆமாம்.

வானத்தை மேகம்
சூழ்ந்துகொண்ட மாதிரி பேரரசனை கவலை சூழ்ந்துகொண்டது.

கடைசியில் ஒரு ஞானியிடம் விஷயம் சொல்லப்பட்டது.

"இன்ன ஊரில்,
இன்ன இடத்தில்
ஒரு சந்தோஷமான
மனிதன் வாழ்கிறான்,

அவனது சட்டையை வாங்கிக்கொண்டுவந்து பேரரசருக்கு அணிவித்தால் அவர் குணமடைவார்" என்று அந்த ஞானி சொன்னார்.

உடனே அந்த சந்தோஷமான மனிதனின் சட்டையை வாங்கிவர படையொன்று புறப்பட்டது.

அந்தமனிதனையும் பார்த்துவிட்டார்கள்.

அவன் சந்தோஷமாக பாடிக்கொண்டும், தன்னை மறந்து ஆடிக்கொண்டும் இருந்தான்.

அவனை நிறுத்தி பேரரசரின் பிரச்னையும் அதற்கான தீர்வையும் சொன்னார்கள்.

"அப்படியா, என்னிடம்
சட்டை எதுவும் கிடையாதே" என்று சிரித்துக்கொண்டே கூறி, அவன் மீண்டும்
நடனமாட தொடங்கினான்.

உண்மைதான்...

அவனை பார்த்தபோது அவன் இடுப்புக்கு கீழ் ஒரு துண்டு மட்டும்தான் கட்டியிருந்தான்.

விஷயம் பேரரசரிடம் சொல்லப்பட்டது.

அவர் யோசித்தார்.

’ஆஹா, சட்டைகூட இல்லாமல் உள்ள ஒரு மனிதன் இவ்வளவு சந்தோஷமாக இருக்கும்போது...

சக்கரவர்த்தியாகஇருக்கும் நான், மகிழ்ச்சியில்லாமல் தேவையில்லாத கவலையுடன் இருப்பது முட்டாள்தனமல்லவா’ என்று அவருக்கு அப்போதுதான் உரைத்தது.

அன்றிலிருந்து
அவரும்
சந்தோஷமானார்.

அன்புடன்
காலை
வணக்கம்.

நன்றி..
முனைவர்.சுத்தரமூர்த்தி

Friday, September 13, 2019

புதிய பார்வை...புதிய கோணம்..

*கோபர்நிகஸ்* தன் ஆராய்ச்சி நூலை எழுதி முடிப்பதற்கு முப்பதாண்டுகள்
ஆயின.

*கிப்பன்*
'த டிக்லைன் அன்ட் 
ஃபால் ஆஃப் த ரோமன்
எம்பையர்' என்ற எட்டு பாகங்கள் கொண்ட நூலை எழுதி முடிப்பதற்கு இருபது ஆண்டுகள் ஆயின.

*ஆடம் ஸ்மித்* தன் 'வெல்த் ஆஃப் நேஷன்ஸ்' என்ற நூலை எழுத பதினேழு ஆண்டுகள் ஆயின.

*கார்ல்மார்க்ஸ்*
உலகப்புகழ் பெற்ற தன் 'மூலதனம்' நூலை எழுதி முடிப்பதற்கு பதினேழு ஆண்டுகள் ஆயின.

*டால்ஸ்டாய்*
'போரும் அமைதியும்' நாவலை எழுதி முடிப்பதற்கு ஏழு ஆண்டுகள் ஆயின.

*டாக்டர் ஜான்சன்* தனி ஆளாக உலகின் முதல் 'ஆங்கில அகராதி'யை
தயாரிக்க ஒன்பது ஆண்டுகள் ஆயின.

*சார்லஸ் டார்வின்* உலகையே மாற்றவல்ல தன் 'கோட்பாடு'களை வெளியிட பதினைந்து ஆண்டுகள் ஆயின.

மாபெரும் சாதனைகள்
நிகழ்த்த
*நாட்கள்,மாதங்கள்*,
*ஆண்டுகள்* ஆகலாம்...

ஆனால்...

அதை வெற்றிகரமாக
முடிக்க *நம்பிக்கையும்*,
*பொறுமையும்* அவசியம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

Sunday, September 08, 2019

புதிய பார்வை...புதிய கோணம்...

ஒரு
விமான
பயணம்.

ஒரு அழகிய இளம் பெண்ணிற்கு, வயதான கருப்பு நிறத்தில் இருந்த மனிதரின் பக்கத்து இருக்கை ஒதுக்க பட்டிருந்தது.

அவருக்கு பக்கத்தில்
அமர, விருப்பம் இல்லாத
காரணத்தினால்
அந்த பெண்...

விமான உதவியாளரை அழைத்து, தனக்கு வேறு ஒரு இடத்தில் இருக்கையை, மாற்றி தருமாறு கேட்டார்.

அந்த வகுப்பு பிரிவில்,
காலி இருக்கை ஏதும் அப்போது இல்லை.

இதனை தெரிவித்தார் உதவியாளர்.

கோபமடைந்த அந்த பெண் கேப்டனிடம் சென்று,
"நான் யார் தெரியுமா?
என்னுடைய ஸ்டேட்டஸ்
என்ன என்று தெரியுமா??
எனக்கு இருக்கை
மாற்றி தர முடியாதா???"
என கூச்சல் இட்டார்.

"ஓரிரு நிமிடங்களில் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படும்" என உறுதி அளித்தார் கேப்டன்.

நடந்தவை அத்தனையையும், அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

உதவியாளரை தனியாக அழைத்த கேப்டன், ஒரு ஆலோசனையை கூறி, அதன்படி செய்யும் படி அறிவுறுத்தினார்.

உதவியாளர் அந்த பெண்ணின் அருகில் சென்றார்.

'அவருக்கு வேறு ஒரு இருக்கையை மாற்றி தருகிறார்' என நினைத்து கொண்டிருக்கையில்...

அவர் அந்த பெண்னை விடுத்து, அடுத்து இருந்த வயதானவரை அழைத்து கொண்டு...

இருக்கை வசதிகளிலேயே உயர்ந்த பிரிவான 'பிரிமியம்' வகுப்பில் அவரை அமர வைத்தார்.

அங்கிருந்த அனைத்து பயணர்களும் ஆச்சர்ய பட்டனர்.

கேப்டனின் ஆலோசனையையும், அதன்படி செயல்பட்ட உதவியாளரையும் வெகுவாக பாராட்டினர்.

நீதி :

அழகுடன் பணிவு இருந்தால் அது ஆராதிக்கப்படும்...

மாறாக...

அழகுடன் மமதை
குடியிருப்பின், அது
அதல பாதாளத்தை தான் அடையும்.

அன்புடன்
காலை
வணக்கம்.

குளிர் காலத்தில் கார் ஓட்ட சிரமம் ஏன்?

*குளிர் காலக் காலை நேரங்களில் மோட்டார் கார்களை ஓட்டத்துவக்குவதற்கு சிரமப்பட வேண்டியிருப்பது ஏன் ?*

மோட்டார் கார் போன்ற தானியங்கிகள்(automobiles) ஓடுவதற்கு, உள் எரிப் பொறிகள் (internal combustion engines) இன்றியமையதவை.

இப்பொறியில் உள்ள மூடிய கொள்கலனுள் (chamber) பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருளும் காற்றும் கலந்த கலவையானது மிகுந்த அழுத்தத்தில் வெடிப்பொலியுடன் பற்றவைத்து எரியூட்டப்படுகிறது.

இதனால் உள்ளேயிருக்கும் உந்துதண்டானது (piston) கீழே தள்ளப்படும். இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக பல கொள்கலன்களுள் நடைபெறுகிறது.

இதன் காரணமாக அங்குள்ள சுழல் தண்டானது(shaft) சுழல்வதுடன், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சக்கரங்களும் சுழல ஆரம்பித்து, அதனால் காரும் ஓடத்துவங்குகிறது.

எரிபொருளும் காற்றும் கலந்த கலவையானது எரியூடப்படுவதற்குப் பல காரணங்களிருப்பினும் அவற்றுள் வெப்பநிலை முக்கியமான ஒன்றாகும். குளிர்காலக் காலைப்பொழுதில் காரின் எஞ்சின் பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் உள்ளே எரிபொருளைப் பற்றவைப்பதற்குத் தேவையான வெப்பநிலையை அடையச் சிறிது நேரம் தேவைப்படுகிறது.

இதன் காரணமாக காரை ஓட்டத்துவங்குவதற்குச் சற்று சிரமப் படவேண்டியுள்ளது. இந்நிலை குளிர்ப்பகுதிகளில் மிகச் சாதாரணமாகக் காணக்கூடியதாகும். மிகவும் குளிர்ந்த பகுதிகளில் இந்நிலையைச் சமாளிக்கும் பொருட்டு குறைந்த வெப்பநிலையில் எரியூட்டப்படக்கூடிய ஹைட்ரோகார்பன் சேர்ந்த பெட்ரோலைப் பயன் படுத்தி குறைவான வெப்பநிலையில் காரை ஓடத்துவங்கும்படிச் செய்கின்றனர்.

நன்றி
-Darwin Science Club
   Konganapuram
   Salem