எப்படித்தான் கழிந்தது என் காலங்கள்?
இந்த நீண்ட பயணம்,
எனக்குத் தெரியவே இல்லை !
என்ன பெற்றேன் ?
என்ன இழந்தேன் ?
ஏன் இழந்தேன் ?
எனக்குத் தெரியவே இல்லை !
கடந்தது சிறு பிராயம்,
போயே போனது இளமை.
முதுமை எப்போது வந்து சேர்ந்தது
எனக்குத் தெரியவே இல்லை !
நேற்று வரை மகனாக இருந்தேன்,
எப்போது மாமனார் ஆனேன் ?
எனக்குத் தெரியவே இல்லை !
தகப்பனாய் இருந்த நான்
எப்போது தாத்தாவாகவும், பாட்டனாகவும் மாறினேன் ?
எனக்குத் தெரியவே இல்லை !
ஒருவர் சொல்கிறார்,
'அவருக்கு வயசாகிடுச்சு' என்று,
இன்னொருவர் சொல்கிறார்,
' அவர் இன்னும் கெத்துதான்' என்று !
இதில் எதுதான் உண்மை ?
எனக்குத் தெரியவே இல்லை !
முதலில் பெற்றோர் பேச்சைக் கேட்டேன்,
அப்புறம் மனைவி பேச்சைக் கேட்டேன்,
அப்புறம் பிள்ளைகள் பேச்சைக் கேட்டேன்,
என் பேச்சை நான் எப்போதுதான் பேசினேன் ?
எனக்குத் தெரியவே இல்லை !
மனைவி சொல்கிறாள்,
'இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் ' என்று.
என்ன புரிந்து கொள்வது ?
என்ன புரியாமல் போனது ?
ஏனோ தெரியவில்லை,
எனக்குத் தெரியவே இல்லை!
நெஞ்சம் சொல்கிறது,
' நான் இன்னும் வாலிபன் ' என்று,
வயதோ சொல்கிறது, ' நீ ஒரு ஏமாளி ' என்று,
இந்தக் குழப்பத்திலேயே
எப்போது என் முட்டிகள் தேய்ந்து போயின ?
எனக்குத் தெரியவே இல்லை !
நரைத்துப்போன தலைமுடி,
தொங்கிப் போன கன்னங்கள்,
மூக்கின் மேல் கண்ணாடி ...
எப்போது மாறியது என் முகம் ?
எனக்குத் தெரியவே இல்லை !
காலம் மாறியது,
நானும் மாறினேன்,
மாறிப்போனது
என் நண்பர்கள் கூட்டமும் !
எத்தனை பேர் விடுபட்டனர் ?
எத்தனை பேர் மிச்சமிருக்கின்றனர் ?
எனக்குத் தெரியவே இல்லை!
நேற்று வரை
நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தேன் !
எப்போது 'முதியோர்' வரிசையில் வந்து நின்றேன்?
எனக்குத் தெரியவே இல்லை !
மருமகள், மருமகன்,
பேரன், பேத்திகள்
என மகிழ்ச்சி பொங்கியது.
ஆனால் இந்த ஏழை வாழ்க்கையின்
உதடுகள் எப்போது புன்னகைத்தன ?
எனக்குத் தெரியவே இல்லை
மனம் குளிர வாழுங்கள்
அன்பு நண்பர்களே ;
அப்புறம் வருத்தப்பட்டுச்
சொல்லாதீர்கள்.
முழு வாழ்க்கையும்
எப்போது கடந்து போனது ? என்று.
' எனக்குத் தெரியவே இல்லையே ! ' என்று.