Thursday, September 24, 2015

சமூக வலைதளங்களில் பிரபலமானதால் வருமானத்தை இழந்துவிட்டேன்

: டைப்ரைட்டர் உடைக்கப்பட்ட முதியவர் வருத்தம்

COMMENT (3)   ·   PRINT   ·   T+  
புதிய டைப்ரைட்டருடன் முதியவர் கிருஷ்ணகுமார்
புதிய டைப்ரைட்டருடன் முதியவர் கிருஷ்ணகுமார்
உத்தரப்பிரதேசத்தில் முதியவர் ஒருவரின் டைப்ரைட்டரை காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் உடைத்த சம்பவம் சமூக இணையதளங்களில் வேகமாக பரவி, பெரும் பிரபலமடைந்தது. அந்த காவல் துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அந்த முதியவருக்கு புதிய டைப்ரைட்டர் வழங்கிய மாவட்ட நிர்வாகம், ரூ.1 லட்சம் இழப்பீடு அளிப்பதாகவும் உறுதி அளித்தது.
இந்நிலையில், இந்த சம்பவத்தால் பிரபலமடைந்ததால் தனது வருமானத்தை இழந்து விட்டதாக அந்த முதியவர் கிருஷ்ண குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
“அஞ்சலகம் முன்பு தட்டச்சு செய்து கொடுத்ததால் கொஞ்சம் வருவாய் கிடைத்து வந்தது. என் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவியதால் நான் தேவையற்ற வகையில் பிரபலமாகியுள்ளேன்.
என்னைச் சுற்றி ஏராளமானவர்கள் சேர்ந்து விடுவதால் என்னால் வேலை செய்ய முடியவில்லை. கடந்த இரு நாட்களாக ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை. நான் சம்பாதிக்கவில்லை என்றால், என் குடும்பத்துக்கு எப்படி சோறு போடுவது. நான் வேலை செய்யவே வந்திருக்கிறேன்; ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க அல்ல.
உதவி செய்வதாகக் கூறி பலர் என்னிடம் வங்கிக் கணக்கு கேட்டனர். ஆனால், இதுவரை ஒரு ரூபாய்கூட கிடைக்கவில்லை. அடையாளம் தெரியாதவர்கள் தொலைபேசி மூலம் மிரட்டுகின்றனர்” என கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.


நன்றி தமிழ் இந்து நாளிதழ்

சமூக அக்கறையுடன்  அன்புடன்  சிவா....

மனதைப் பூரணமாக்கி முழுவதும் அடக்குவது கல்வி

 - விவேகானந்தர்

First Published : 08 August 2015 01:08 PM IST
கல்வி என்பது என்ன, அது புத்தகப் படிப்பா, இல்லை. பலவகைப்பட்ட அறிவைத் தேடிக் கொள்வதா, அதுவும் இல்லை. சங்கல்பத்தின் போக்கையும், வெளிப்பாட்டையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பயனளிக்குமாறு செய்கின்ற பயிற்சியே கல்வி.
கல்வி என்பது ஏராளமான உண்மைகளை மனதில் நிறைப்பதல்ல. மனதைப் பூரணமாக்கி முழுவதுமாக அதை அடக்குவதே கல்வியின் நோக்கம்.
என்னைப் பொருத்தவரையில் கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பதல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால், ஒருபோதும் தகவல்களைச் சேகரிக்க மாட்டேன். முதலில் மன ஒருமைப்பாட்டையும் பற்றின்மையையும் வளர்த்துக்கொண்டு, பின் அந்தப் பரிபூரணமான கருவியால் நான் விரும்பும்போது தகவல்களைச் சேகரித்துக் கொள்வேன். குழந்தையை வளர்க்கும்போது இந்த இரண்டு ஆற்றல்களையும் அவர்களிடம் வளர்க்க வேண்டும்.
வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பதல்ல கல்வி. வாழ்க்கையை வளப்படுத்துகின்ற, மனிதனை உருவாக்குகின்ற, குணத்தை மேம்படுத்துகின்ற, கருத்துகளை ஜீரணம் செய்யத்தக்க கல்வியே நாம் வேண்டுவது.
நீங்கள் ஐந்தே ஐந்து கருத்துகளை நன்கு கிரகித்து, அவை உங்கள் வாழ்க்கையாக, நடத்தையாகப் பரிணமித்து நிற்கச் செய்ய முடியுமானால், ஒரு புத்தகச் சாலை முழுவதையும் மனப்பாடம் செய்தவனைவிட நீங்கள் அதிகமான கல்வி பெற்றவர். செய்திகளைச் சேகரிப்பதுதான் கல்வி என்றால், நூல் நிலையங்கள் அல்லவா மாபெரும் மகான்கள்; கலைக் களஞ்சியங்கள் அல்லவா ரிஷிகள்!
சிறந்த குணத்தை உருவாக்குகின்ற, மன வலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற, ஒருவனைச் சொந்தக் கால்களில் நிற்கச் செய்கிற கல்வியே தேவை.
சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்துக்குத் தயார் செய்யாத கல்வி, ஒழுக்க வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத கல்வி, சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்காத கல்வி, அதைக் கல்வி என்று சொல்ல முடியுமா? ஒருவனைத் தன் சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்வதே உண்மையான கல்வி.
தொழிற்கல்வி வேண்டும். தொழில்வளம் பெருகுவதற்கான எல்லாவற்றையும் செய்ய வேண்டும். மக்கள் வேலை தேடி அலைவதை விட்டுவிட்டு கைத்தொழிலில் ஈடுபட்டு நாலு காசு சம்பாதிக்கத் தகுதி உடையவர்களாக வேண்டும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயற்சிக்காதீர்கள், முடிந்தால் அதைவிடச் சிறந்த ஒன்றை அவனுக்குக் கொடுங்கள். முடிந்தால் ஒருவன் எங்கு நிற்கிறானோ, அங்கிருந்து அவனை முன்னுக்குத் தள்ளுங்கள். அதைச் செய்யுங்கள். மாறாக, அவனிடம் இருப்பதையும் கெடுக்காதீர்கள்.
ஒரு நொடியில் தம்மை ஆயிரம் பேராக மாற்றிக்கொள்ள யாரால் முடியுமோ, அவர்தான் உண்மையான ஆசிரியர். யாரால் மாணவனின் நிலைக்கு உடனே இறங்கி வர முடியுமோ, தன் மனதை மாணவனின் மனதுக்கு மாற்ற முடியுமோ, யாரால் மாணவனின் கண்களால் பார்க்கவும் அவனது காதுகளால் கேட்கவும் அவனது மனதின் மூலம் புரிந்து கொள்ளவும் முடியுமோ அவர்தான் உண்மையான ஆசிரியர். இத்தகைய ஆசிரியரால்தான் கற்றுத் தர முடியும், மற்ற யாராலும் முடியாது.
உங்கள் பல்கலைக்கழகங்களைப் பாருங்கள். ஐம்பது ஆண்டுகளாக இருந்து அவை என்ன செய்துவிட்டன? சுய ஆக்கம் (ர்ழ்ண்ஞ்ண்ய்ஹப்ண்ற்ஹ்) உடைய ஒருவனைக்கூட அவை படைக்கவில்லை. அவை வெறும் தேர்வு நடத்தும் குழு, அவ்வளவுதான்.
உண்மையான கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல; அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது

நன்றி தின மணி
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலம் கருதி ஆ.சிவ....

ஆசிரியப் பணி சுமையா? சுவையா?


First Published : 18 September 2015 01:03 AM IST
கல்வியே சிறந்த செல்வம் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அது கொடுக்கக் கொடுக்கக் குறைவுபடாதது; நெருப்பாலும், நீராலும் அழியாதது; திருடரால் களவாடப்பட முடியாதது. "கல்வியா? செல்வமா? வீரமா?' என்ற கேள்விகளில் முதலில் நிற்பது கல்வியே.
 இந்தக் கல்வி நெடுங்காலமாக மக்களுக்கு மறுக்கப்பட்டே வந்தது. ஆட்சியாளர்களும், ஆதிக்க வெறியர்களும் அனைவருக்கும் கல்வியளிக்க விரும்பவில்லை. கல்வியினால் மக்கள் விழிப்புணர்வு பெற்றால் அது தங்களுக்கே ஆபத்தாகும் என்ற அச்சமே அதற்குக் காரணம்.
 
இந்த நிலைமையிலிருந்து விடுபட்டுக் கல்வியைப் பெற அனைவருக்கும் உரிமை உண்டு என்ற நிலைமை வர இவ்வளவு காலமாகிவிட்டது. அறியாமை இருளை ஓட்டுகிற கல்வி வெளிச்சத்தை அனைவரும் பெற வேண்டியதன் அவசியத்தைக் காலம் உணர்த்தியது. எண்ணும், எழுத்தும் இரண்டு கண்களாகும் என்று ஆத்திசூடி, திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்கள் அறிவுறுத்தின. 
 இந்தக் கல்வியைப் போதிக்க ஆசிரியர் பணி அவசியமானது. அதனால்தான், "மாதா, பிதா, குரு, தெய்வம்' என்று ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டு வருகிறது. அக்காலத்து "குருகுல வாசம்' அப்படி வந்ததுதான். ஆங்கிலேயரின் வருகையால் கல்விச் சாலைகளின் புதிய அமைப்பு முறை உருவானது.
 நன்னூல் என்னும் இலக்கண நூல் ஆசிரியர்கள், மாணவர்களின் இலக்கணத்தை வகுத்துரைக்கிறது. உயர்குடிப் பிறப்பும், அருளும், இறைவழிபாடும், மேன்மையும், பல நூல்களைக் கற்ற தேர்ச்சியும், மாணவர் விரும்பும்படி கற்பிக்கும் சொல்வன்மையும், பூமி, மலை, தராசு, மலர் போன்ற பிற உயர்ந்த குணங்களும் பொருந்தியிருக்கப் பெற்றவரே நூல்களைக் கற்பிக்கும் ஆசிரியராவார் என்று கூறுகிறது.
 கல்வியே மனிதனை மனிதனாக மாற்றுகிறது என்பதால் அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள் ஆகிறார்கள். "எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்' என்பதும் இதனால்தான். அவர்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது. அப்படி இல்லாதபோது, அதுவே ஒரு சமுதாயத்தின் சீரழிவுக்கு ஆரம்பமாகிறது.
 சமுதாய முன்னேற்றத்துக்கும், கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்கள் நலனுக்கும் ஆசிரியர்களே கடமைப்பட்டிருக்கிறார்கள். மற்ற தொழில்கள் ஊதியத்துக்காகவே செய்யப்படுகின்றன. 
 ஆசிரியப் பணி தொழில் மட்டுமல்ல, தொண்டாகவும் பார்க்கப்படுகிறது. அதனால்தான், சிறு சிறு தவறுகள் நிகழ்ந்தாலும் பெரிதாகப் பேசப்படுகிறது. வெள்ளைத் துணியில் சிறு கறை ஏற்பட்டாலும் பெரிதாகத் தெரியும் அல்லவா!
 சின்னஞ்சிறு தவறுகள்கூட ஏற்படாமல் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறது. ஒருசிலர் செய்கிற தவறுகளால் ஆசிரியர் சமுதாயமே வெட்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஆசிரியர்களுக்கு மரியாதை குறையும்போது கல்வியின் மரியாதையும் குறைந்து போகிறது.
 "கல்விச் சாலை ஒன்று திறப்பவன், சிறைச் சாலை ஒன்றை மூடுகிறான்' என்றார் அறிஞர் விக்டர் ஹியூகோ. குற்றங்களையும், குறைகளையும் போக்குகிற கல்வியைப் போதிப்பவர் குற்றவாளிகளாக இருக்கலாமா? அழுக்குகளைப் போக்கும் தண்ணீரே அழுக்காக இருந்தால் அதில் நீராடி என்ன பயன்?
 "ஆசிரியப் பணியே அறப் பணி, அதற்கே உன்னை அர்ப்பணி' என்று வாழ்ந்தவர்கள் அக்காலத்து ஆசிரியர்கள் என்றும், இக்காலத்தில் ஆசிரியர்கள் ஊதியத்துக்காக மட்டும் போராடுகிறார்களேதவிர, கல்வியைப் பற்றியோ, மாணவர்கள் பற்றியோ கவலைப்படுவது இல்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி ஆசிரியர்களும், ஆசிரியர் இயக்கங்களும் பரிசீலனை செய்வது காலத்தின் கட்டாயமாகும்.
 காலம் மாறுகிறபோது எல்லாமே மாறுகிறது; கல்வியும் மாற வேண்டாமா? கல்வியை மாற்றியமைக்க வேண்டிய கடமை கல்வியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. அரசும், கல்வித் துறையும் அவர்களுக்கு ஆவன செய்து ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும். சுதந்திரத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட கல்விக் குழுக்களின் அறிக்கைகள் பரிசீலிக்கப்படவே இல்லை.
 அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆம் பிரிவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், இந்தியச் சட்டங்கள் அனைவருக்கும் சமப் பாதுகாப்பு அளிக்கும் என்றும் குறிப்பிடுகிறது. 
 அத்துடன் அதே அரசமைப்புச் சட்டம், 1960-ஆம் ஆண்டுக்குள் 14 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வியை வழங்கும் என்றும் உறுதி செய்தது. ஆனால், 1960-க்குப் பின்னரும் அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பது எட்ட முடியாத இலக்காகவே இருக்கிறது.
 இந்நிலையில்தான், "குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009' - 2010 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் 25 விழுக்காடு இடங்களை நலிந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்; பள்ளியில் சேர்க்கைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது; பெற்றோரையோ, குழந்தைகளையோ நுழைவுத் தேர்வுக்கோ, நேர்காணலுக்கோ உள்படுத்தக் கூடாது.
 எந்தக் குழந்தையையும் உடல்ரீதியான தண்டனைக்கோ, மன உளைச்சலுக்கோ ஆளாக்கக் கூடாது; அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை ஏற்படுத்தி, அதில் நான்கில் மூன்று பங்கு இடங்களில் பெற்றோர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை அந்தச் சட்டத்தில் உள்ளன.
 இவை இன்னும் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, இந்தச் சட்டத்தையாவது ஒழுங்காக நடைமுறைப்படுத்தி அதன் பலன்கள் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மறுபடியும், மறுபடியும் எழுப்பப்படுகிறது.
 கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும் தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இங்குள்ளவர்கள் போதாதென்று வட மாநிலத்தவர்களும் இங்கே வந்து குவிகிறார்கள். இப்போது நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படும் "குழந்தைத் தொழில் (தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986', குழந்தைத் தொழிலை ஒழிக்கத் தவறிவிட்டது.
 குழந்தை உழைப்பு என்பது ஒரு மிகப் பெரிய குழந்தை உரிமை மீறலாகும். இதனால், குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்படுவதோடு அவர்களின் குழந்தைப் பருவத்தையும், நல வாழ்வையும் அழிக்கிறது. அவர்கள் பாகுபடுத்தப்படவும், ஒதுக்கிவைக்கப்படவும் வழிவகுக்கிறது.
 வறுமையின் காரணமாக மட்டுமே குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவது இல்லை. மாறாக, அவர்களது உழைப்பைச் சுரண்டும் நோக்கத்தோடு அதிக லாபம் அடையவே அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
 எனவே, இச்சட்டம் திரும்பப் பெறப்பட்டு, 18 வயதுக்குள்பட்ட அனைவரும் ஆபத்தான, ஆபத்து இல்லாத என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விதமான தொழில்களிலும் பணிபுரிவதைத் தடை செய்யும் வகையில் குழந்தைத் தொழில் ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
 "ஒரு அரசின் கடமை அனைவருக்கும் கல்வி அளிப்பதாகவே இருக்க வேண்டும்' என்றே பல காலமாகக் கல்வியாளர்களும், சட்ட வல்லுநர்களும், சிந்தனையாளர்களும் கூறி வருகின்றனர். ஆனால், இதனை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்வதே இல்லை.
 "சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்று சொல்கிறபோது கல்வியின் முன் அனைவரும் சமமாக இருக்க வேண்டாமா? "சமச்சீர் கல்வி வேண்டும்' என்பதற்காகப் போராட்டங்கள் நடத்தி, நீதிமன்றப் படிகள் ஏறி, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே வேண்டா வெறுப்பாக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்பிறகும் இப்போது அரசுப் பள்ளிகள் என்றும், தனியார் பள்ளிகள் என்றும் பிளவுபட்டுக் கிடக்கின்றன.
 அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் கொண்டு போய் சேர்க்கிறார்கள் என்ற ஆதங்கம் பொதுமக்களிடம் இருக்கிறது. இந்நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க எப்படி முன்வருவார்கள்?
 அண்மையில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் இதுபற்றி அறிவுறுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை உறுதிபடுத்துமாறு அரசுத் தலைமைச் செயலரிடம் 2015 ஆகஸ்ட் 18-இல் கேட்டுக் கொண்டுள்ளது.
 அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை அவர்கள் சேர்த்து படிக்க வைத்தால், அந்தப் பள்ளிகள் நன்றாக இயங்குவதை உறுதிப்படுத்த முடியும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இது நாடெங்கும் பேசப்படும் பேச்சாக இருக்கிறது.
 மத்திய கல்வி ஆலோசனை வாரியம் கடந்த 19.8.2015-இல் அனைத்து மாநிலக் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. இதில் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களைக் "கட்டாயத் தேர்ச்சி' தரும் நடைமுறையை ரத்து செய்வது பற்றி பரிசீலித்து வருவதாகவும், இதற்கு 19 மாநிலங்கள் ஆதரவளித்துள்ளதாகவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
 இவ்வாறு கல்வி பற்றிய பரிந்துரைகளையெல்லாம் நிறைவேற்ற 
வேண்டிய பெருஞ்சுமை ஆசிரியர்களின் தோள்களிலேயே வைக்கப்படுகின்றன. கல்வியையும், மாணவர்களையும் நேசிக்கிற ஆசிரியர்களுக்கு இவை சுமையல்ல, சுவையேயாகும்.
 கல்வி என்பது ஒரு மனிதனை உருவாக்குவதாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய கல்வி அவ்வாறு இல்லாமல் போனதற்குக் காரணம் அது வணிகமாகிப் போனதுதான். அதிலிருந்து அதனை மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் கல்விக்கும் மரியாதை, அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மரியாதை ஏற்படும்.

நன்றி தின மணி 
நன்றி உதயை மு. வீரையன்
ஆசிரியர் நலம் கருதி ஆ.சிவ.....