Thursday, March 19, 2015

எஸ்.எஸ்.எல்.சி.- சமூக அறிவியலில் சாதனை மதிப்பெண் பெற

வெற்றிப்பாதை: 

தொகுப்பு: நீதி
COMMENT   ·   PRINT   ·   T+  
சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள். அதேநேரம், அலட்சியத்தால் பலரும் தேர்ச்சி பெறத் தவறுவதும் சமூக அறிவியலில்தான். இரண்டு மூடநம்பிக்கைகளையும் களைந்துவிட்டுப் படித்தால் 100 மதிப்பெண் பெறுவதும், எளிதில் தேர்ச்சி பெறுவதும் சாத்தியம். அது எப்படி?
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறவும், தேர்ச்சி பெறவும் வழிகாட்டுகிறார் கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி அரசு உயர்நிலைப் பள்ளியின் வரலாற்று ஆசிரியர் பே. சீனிவாசன்:
ஒரு மதிப்பெண்
முதல் 14 வினாக்களில் வரலாறு 4, குடிமையியல் - 3, புவியியல் - 4, பொருளியல் - 3 பகுதியில் இருந்து கேட்கப்படும் அனைத்து வினாக்களும் புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் இருந்து மட்டுமே இதுவரை கேட்கப்பட்டுள்ளன.
பொருத்துக பகுதியிலும் புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் இருந்து மட்டுமே இதுவரை நடந்துள்ள தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ளன. அது மட்டுமே படித்தால் போதுமானது.
2 மதிப்பெண்கள்
புவியியலில் 3, 4, 5, 6 பாடங்களும், பொருளியலில் இரண்டாம் பாடமும், குடிமையியலில் முதல் பாடத்திலும் உள்ள பகுதிகளில் எளிமையான வினாக்கள் அமைந்திருப்பதால் அவற்றை மட்டும் படித்தாலே முழு மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது.
வேறுபடுத்துக
புவியியல் பாடப் பகுதியில் 1, 3, 4, 5, 6 ஆகியவற்றிலிருந்து வரும் வினாக்கள் எளிமையாக அமைந்திருப்பதால், அவற்றிலுள்ள அனைத்துத் தலைப்பு வினாக்களையும் படித்தால் முழு மதிப்பெண்கள் பெறலாம்.
தலைப்பு வினா: வரலாறுப் பாடப் பகுதியில் 1, 2, 9, 10 பாடங்களிலிருந்து வினாக்கள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.
5 மதிப்பெண்கள்
ஐந்து மதிப்பெண்கள் பகுதியில் வரலாறுப் பாடத்தில் காரணங்கள், சாதனைகள், விளைவுகள், முக்கியத்துவம் போன்ற குறிப்புகளைக் கொண்டு கேட்கப்படும் வினாக்களைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. குடிமையியல் பகுதியில் முதல் பாடத்தில் உள்ள இரு வினாக்களும், பொருளியல் பாடத்தில் இரண்டாம் பாடமும், புவியியல் பாடத்தில் காடுகள், மழைநீர் சேகரிப்பு, இயற்கை வளப் பாதுகாப்பு, வேளாண்மை பிரச்சினை, இமய மலை, அமில மழை போன்ற பகுதிகளிலிருந்து இருந்து அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.
காலக்கோடு
வரலாறுப் பாடப் பகுதியில் ஐந்து நிகழ்வுகளை ஆண்டுகளுடன் நிகழ்ந்த குறிப்புகளைக் காலக்கோட்டில் குறித்து ஐந்து மதிப்பெண்கள் பெறலாம். 1885-1919, 1900-1920, 1920-1940, 1930-1950, 1910-1930 போன்ற பகுதியில் ஐந்து குறிப்புகளை ஆண்டுகளோடு மீண்டும் மீண்டும் எழுதிப் பார்க்க வேண்டும். இவற்றுக்கு எளிமையான ஏழு குறிப்புகளை நினைவில் கொண்டால் எந்தப் பகுதிக்கும் ஐந்து நிகழ்வுகளை எழுதிவிடலாம். அவை வருமாறு:
1.1905 - வங்கப் பிரிவினை , 1911 வங்கப் பிரிவினை நீக்கம்
2.1914 முதல் உலகப் போர் துவக்கம், 1918 முதல் உலகப் போர் முடிவு
3.1920 ஒத்துழையாமை இயக்கம் தொடக்கம், 1922 ஒத்துழையாமை இயக்கம் கைவிடல்
4.1927 சைமன் குழு அமைத்தல், 1928 சைமன் குழு இந்தியா வருகை
5.1930 முதல் வட்ட மேசை மாநாடு, 1931 - இரண்டாம் வட்ட மேசை மாநாடு, 1932 - மூன்றாம் வட்ட மேசை மாநாடு
6.1939 - இரண்டாம் உலகப் போர் தொடக்கம், 1945 - இரண்டாம் உலகப் போர் முடிவு
7.1947 - இந்தியா விடுதலை, 1950 - இந்தியா குடியரசாதல்
வரலாறு வரைபடம்
ஆசியா மற்றும் இந்தியாவின் வரைபடத்தில் ஏதேனும் ஒரு வினாவைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள ஐந்து இடங்களை உரிய வரைபடத்தில் குறித்தால் ஐந்து மதிப்பெண்களைப் பெறலாம்.
ஆசியா வரைபடத்தில் அரேபியா, பர்மா, ஜப்பான், ஹாங்காங், பசிபிக் பெருங்கடல், பார்மோசா, கொரியா, பெய்ஜிங், மங்கோலியா, செங்கடல், சீனா, காண்டன், சாகலின் தீவுகள், நான்கிங், மஞ்சூரியா, சிங்கப்பூர் பகுதிகளை மட்டும் நன்கு பயிற்சி செய்தால் முழு மதிப்பெண்கள் அள்ளலாம்.
இந்தியா வரைபடத்தில் 1857 புரட்சி நடைபெற்ற இடங்களும், விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களையும் பயிற்சி செய்ய வேண்டும்.
புவியியல் வரைபடம்
இந்தியா வரைபடத்தில் மலைகள், ஆறுகள், பீடபூமிகள், கடற்கரை சமவெளி, வளைகுடா, நீர்ச்சந்தி, காடுகள், மண், வேளாண் பயிர்கள், பணப் பயிர், மென்பொருள் தொழிலகம், இரும்புத் தொழிலகம், துறைமுகம், தீவுகள், காற்று வீசும் திசை, மழை பெறும் பகுதி, பாலைவனம், சிகரம் போன்ற பகுதிகளை நன்கு பயிற்சி செய்தால் முழு மதிப்பெண்கள் கிடைக்கும்.
போக்குவரத்து வினாக்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், உதாரணமாக சென்னை-கொல்கத்தா ரயில் பாதை வினாவில் சென்னை, கொல்கத்தா, ரயில் பாதை ஆகிய மூன்றையும் சரியாகக் குறித்தால்தான் ஒரு மதிப்பெண் பெற முடியும். ஏதேனும் ஒரு இடம் தவறானால்கூட மதிப்பெண்ணை இழக்க நேரிடும். எளிமையான பகுதிகளை மட்டும் பென்சிலில் குறித்தும், அம்பு குறியிட்டும், நிழலிட்டும், பேனாவில் எழுதவும். நன்கு தெரிந்தால் ஒன்று அல்லது இரண்டு பகுதிகளை அதிகமாகக்கூட எழுதினால் மொத்தம் 10 மதிப்பெண் கிடைக்கும்.
100க்கு 100 பெற
சரியான விடை பகுதியில் ஏதேனும் ஒரு விடை பகுதியை மட்டும் எழுதவும்.
பொருத்துக பகுதியில் வினாவும் விடையையும் நேராக எழுதவும்.
இரண்டு மதிப்பெண்கள் வினாவுக்குக் கண்டிப்பாக இரண்டு குறிப்புகளை எழுதவும்.வேறுபாடு பகுதியில் இரண்டு அல்லது மூன்று குறிப்புகளை வேறுபடுத்திக் காட்டவும்.
தலைப்பு வினா பகுதியில் தலைப்பு எழுதி விடை மட்டும் எழுதவும்.
5 மதிப்பெண் பகுதியில் குறைந்தது 5 தலைப்புகளில் பத்தியிடவும்.
விடைகளைப் பக்கம் பக்கமாக எழுதுவது மதிப்பெண் தராது. தெளிவான விடைதான் மதிப்பெண்ணைத் தரும். அரசு வெளியிட்டிருக்கும் பொதுத் தேர்வு விடைக் குறிப்புகள் போதுமானவை. பொதுத் தேர்வுக்காக அரசு தேர்வு இயக்ககம் வெளியிடும் அரசு விடைத்தாள் குறிப்பேட்டின்படிதான் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, 100 மதிப்பெண்கள் பெற எளிய வழி புத்தகத்தைப் பின்பற்றுவதுதான். எளிய வடிவில், தெளிவாக, குறித்த அளவில் எழுதப்படும் விடைக்கே, முழு மதிப்பெண்கள் கிடைக்கும். நன்கு பயிற்சி செய்தால் 100 மதிப்பெண்களை எளிதாகப் பெறலாம்.
தேர்ச்சி அடைய
காலக்கோடு 5 மதிப்பெண்கள், புவியியல் வரைபடம் 10 மதிப்பெண்கள், ஆசியா வரைபடம் 5 மதிப்பெண்கள், குடிமையியல் 7(5+2) மதிப்பெண்கள். பொருளியல் 7 (5+2) மதிப்பெண்கள், வேறுபாடு 8 மதிப்பெண்கள், புவியியல் இரு மதிப்பெண் வினாவில் 8 மதிப்பெண் கேள்விகளுக்குத் தயார் செய்தால் ஏறத்தாழ 50 மதிப்பெண்கள் கிடைத்துவிடும்.
முந்தைய பொதுத்தேர்வு வினாத் தாள்களை சேகரித்து எழுதிப் பயிற்சி எடுத்துப் பாருங்கள். மாணவர்கள் நினைத்து முடியாதது ஒன்று உண்டோ?

நன்றி  தமிழ் இந்து நாளிதல்

மாணவர் நலன் கருதி

அன்புடன் சிவா.......

No comments: