Wednesday, July 15, 2026

எப்படித்தான் கழிந்தது என் காலங்கள்?

எப்படித்தான் கழிந்தது என் காலங்கள்?
இந்த நீண்ட பயணம், 
எனக்குத் தெரியவே இல்லை ! 
என்ன பெற்றேன் ?
என்ன இழந்தேன் ?
ஏன் இழந்தேன் ?
எனக்குத் தெரியவே இல்லை ! 
கடந்தது சிறு பிராயம், 
போயே போனது இளமை.
முதுமை எப்போது வந்து சேர்ந்தது 
எனக்குத் தெரியவே இல்லை ! 
நேற்று வரை மகனாக இருந்தேன்,
எப்போது மாமனார் ஆனேன் ?
எனக்குத் தெரியவே இல்லை ! 
தகப்பனாய் இருந்த நான் 
எப்போது தாத்தாவாகவும், பாட்டனாகவும் மாறினேன் ?
எனக்குத் தெரியவே இல்லை ! 
ஒருவர் சொல்கிறார்,
'அவருக்கு வயசாகிடுச்சு' என்று,
இன்னொருவர் சொல்கிறார், 
' அவர் இன்னும் கெத்துதான்' என்று !
இதில் எதுதான் உண்மை ?
எனக்குத் தெரியவே இல்லை ! 
முதலில் பெற்றோர் பேச்சைக் கேட்டேன்,
அப்புறம் மனைவி பேச்சைக் கேட்டேன்,
அப்புறம் பிள்ளைகள் பேச்சைக் கேட்டேன்,
என் பேச்சை நான் எப்போதுதான் பேசினேன் ?
எனக்குத் தெரியவே இல்லை ! 
மனைவி சொல்கிறாள், 
'இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் ' என்று.
என்ன புரிந்து கொள்வது ?
என்ன புரியாமல் போனது ?
ஏனோ தெரியவில்லை,
எனக்குத் தெரியவே இல்லை! 
நெஞ்சம் சொல்கிறது, 
' நான் இன்னும் வாலிபன் ' என்று,
வயதோ சொல்கிறது, ' நீ ஒரு ஏமாளி ' என்று,
இந்தக் குழப்பத்திலேயே 
எப்போது என் முட்டிகள் தேய்ந்து போயின ?
எனக்குத் தெரியவே இல்லை ! 
நரைத்துப்போன தலைமுடி, 
தொங்கிப் போன கன்னங்கள்,
மூக்கின் மேல் கண்ணாடி ...
எப்போது மாறியது என் முகம் ?
எனக்குத் தெரியவே இல்லை ! 
காலம் மாறியது, 
நானும் மாறினேன்,
மாறிப்போனது 
என் நண்பர்கள் கூட்டமும் !
எத்தனை பேர் விடுபட்டனர் ?
எத்தனை பேர் மிச்சமிருக்கின்றனர் ?
எனக்குத் தெரியவே இல்லை! 
நேற்று வரை 
நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தேன் !
எப்போது  'முதியோர்' வரிசையில் வந்து நின்றேன்?
எனக்குத் தெரியவே இல்லை ! 
மருமகள், மருமகன், 
பேரன், பேத்திகள்
என மகிழ்ச்சி பொங்கியது.
ஆனால் இந்த ஏழை வாழ்க்கையின் 
உதடுகள் எப்போது புன்னகைத்தன ?
எனக்குத் தெரியவே இல்லை 
மனம் குளிர வாழுங்கள் 
அன்பு நண்பர்களே ;
அப்புறம் வருத்தப்பட்டுச் 
சொல்லாதீர்கள்.
முழு வாழ்க்கையும் 
எப்போது கடந்து போனது ? என்று.
' எனக்குத் தெரியவே இல்லையே ! ' என்று.

நன்றி பகிர்வு பதிவு

Wednesday, June 10, 2026

Gen z என்ற மாயை...

இவ்வாரம் ஆனந்த விகடன் 'Bro... கொஞ்சம் கேளுங்க' பகுதியில், Gen Z மத்தியில் பரவிக் கிடக்கும் வன்முறை குறித்து எழுதி இருந்தேன். சென்ற அத்தியாயங்களைவிட இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதிலிருந்து சில வரிகள்...

* வண்ண மயமான லன்ச் பாக்ஸ் மற்றும் அழகாக ஒழுங்குபடுத்தப்பட்ட பென்சில்களுடன் பள்ளிப் பையை சுமந்து செல்லும் மாணவர்களை இனி நாம் பார்க்க மாட்டோமா என்கிற அச்சத்தை உண்டுபண்ணுகிறது ஆங்காங்கே நடக்கும் சம்பவங்கள்.

* திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஓடிடி தொடர்கள், குறும்படங்கள், ரீல்ஸ்கள், வீடியோ கேம்கள் என பார்க்கும் எல்லா இடங்களிலும் வன்முறை நிறைந்திருப்பதால் மூளையின் அடுக்குகளில் எளிதாக சேர்ந்துவிடுகிறது வன்முறை.

* வன்முறை நிறைந்த மாணவனைக் கையாள்வது என்பது, இரு பக்கமும் கூர்மையான கத்தியை பிடிப்பது போன்று ஆபத்தானது. இருவரில் யார் உணர்ச்சிவசப்பட்டாலும் ஒருவருடைய கையை அது கிழித்துவிடும். எனவே இதுபோன்ற மாணவர்களை கவனமாகக் கையாளுதல் அவசியம்.

* நான் புதுக்கோட்டையில் சிலகாலம் பணியாற்றினேன். ஒருமுறை சிறைவாசிகளுக்கு மனநலம் தொடர்பான பயிற்சி வகுப்பு எடுக்க, புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலைக்குச் சென்றிருந்தேன். வெவ்வேறு வயது கொண்ட சிறைவாசிகள் அங்கே வரிசையாக அமர்ந்திருந்தனர். அதில் சுமார் பதினெட்டு வயதான மாணவன் ஒருவன் என் கவனத்தை ஈர்த்தான். காரணம், அவனுடைய கையில் இருந்த புத்தகம். 

அது, ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவஸ்கியின் 'குற்றமும் தண்டனையும் (Crime and Punishment)'.

'ஏன் இந்தப் புத்தகத்த படிக்க தேர்வு செஞ்சீங்க தம்பி?' என்றேன்.

'நான் செலக்ட் பண்ணல சார். நான் ஆர்வமா புத்தகம் வாசிக்கிறதப் பாத்துட்டு இங்க இருக்கற போலீஸ் ஒருத்தரு படிக்கச் சொல்லி கொடுத்தாரு. எங்களுக்கு லைப்ரரி இருக்கு. அங்க எல்லா புத்தகங்களும் இருக்கு...' என்றான்.

மேலும் இப்படிச் சொல்லி முடித்தான்.

'ஆறுமாசத்துக்கு முன்ன அவசரப்பட்டு ஒரு கொலை பண்ணிட்டேன் சார். இந்த புக்க அதுக்கு முன்னாடியே படிச்சு இருந்தா, சத்தியமா அத பண்ணிருக்க மாட்டேன்...' 

அந்த மாணவன் சிறையினுள் வரும்போது என்ன மனநிலையுடன் இருந்தான் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், வெளியே போகும்போது முற்றிலும்‌ பக்குவப்பட்ட மனிதனாக செல்வான் என்பதில் சந்தேகமில்லை.

* ஒரு நூலகம் திறக்கப்படும் போது, ஆயிரக்கணக்கான சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்றார் விக்டர் ஹியூகோ. அதை உண்மையில் நான் உணர்ந்த தருணம் அது.

* நாளைய பொழுதை ஆளப்போகும் பிஞ்சு கைகளிடமிருந்து கத்தியைப் பிடுங்கி புத்தகத்தைக் கொடுங்கள். ஏனெனில், புத்தகம் வெறும் காகிதம் மட்டுமல்ல; வன்முறையை ஒழிக்கும் மந்திரக் கோல்.

அடுத்தவாரம் (நாளை) வெளியாகும் தொடரில் Gen Z பயன்படுத்தும் சொற்கள் பற்றி எழுதியிருக்கிறேன்.

பகிர்வு பதிவு