Saturday, April 19, 2014

வலி!! (நிமிடக்கதை)







   “என்னங்க நாளுநாளா இந்த கழுத்து வலி இருந்து உயிரை வாங்குது. எந்தத் தைலம் போட்டாலும் சரியாகலை. நான் இன்னைக்கு ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்திடுறேன்“ காவேரி அம்மாள் கழுத்தைத் தேய்த்து விட்டவாரே சொன்னாள்.

   “மூனுநாளா நான் சொல்லிக்கினே தான் இருக்கிறேன். நீ கேட்டியா? இப்பவாவது டாக்டரைப் பாக்கனும்ன்னு தோணுச்சே ஒனக்கு. சரி இரு நானும் வர்றென்.“ கணவர் நாதன் சொல்லவும்..

   “வேண்டாங்க. ரொம்ப வெயிலா இருக்கு. நான் போயிட்டு வந்திடுறேன்.“ சொல்லிக் கொண்டே கிளம்பிவிட்டாள்.



   காலை வெயில், ஸ்ட்ரா இல்லாமல் உடலில் உள்ள இரத்தத்தை வியர்வையாக்கி உரிஞ்சியது. காவேரி அம்மாள் நடைப்பாதையில் நடந்து சென்ற போது சாலையைக் கடந்த பள்ளிச் சிறுமி ஒருவளை ஆட்டோ ஒன்று இடித்துவிட்டு நில்லாமல் சென்றது.

   இடித்த வேகத்தில் அந்தப்பெண் குப்புறவிழுந்தாள். விழுந்தவள் எழுந்திருக்கவில்லை. காவேரி அம்மாள் பதறிபோய் அவசரமாக அந்தப் பெண்ணைத் திருப்பினாள். தலையிலிருந்து இரத்தம் வழிய அந்தப் பத்து வயது மாணவி பேச்சுமூச்சின்றி மயங்கிப் போய் இருந்தாள்.

   காவேரி அம்மாள் அந்தப் பெண்ணை மடியில் கிடத்திச் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லாத தெரு அனாதையைப் போல் இருந்தது. என்ன செய்வது என்று யோசனையில் இருந்த போதே அவளை இடித்துவிட்டுச் சென்ற ஆட்டோ திரும்பி வந்து அவளருகில் நின்றது.

   “என்னம்மா ஆச்சி..?“ என்று கேட்டுக்கொண்டே இறங்கி வந்த  ஆட்டோ ஓட்டுனர் இரத்தத்தைப் பார்த்ததும், “ஐயோ.... லேசா தானே ஒராஞ்சது. ஒன்னும் ஆயிருக்காதுன்னு நெனச்சேன். ஐயோ இப்படி ஆயிடுச்சே.... நான் வேற ஸ்கூல் சவாரிக்கு போவனும். சரி. வாங்க பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரியில விட்டுடறேன்.“ என்று சொல்லியபடியே இருவரையும் ஒரு தனியார் மருத்துவமனையில் விட்டுவிட்டு சென்றுவிட்டான்.



    மதியம் உணவுநேரம் கடந்து வந்தவளின் சேலையில் இரத்தக் கரையைப் பார்த்ததும் அதிர்ச்சியுடன் “என்னாச்சி?“ என்று கேட்டார் நாதன்.

   “அது ஒன்னுமில்லைங்க. நான் காலையில போறப்போ ஒரு ஸ்கூல் பொண்ணை ஆட்டோக்காரன் இடிச்சிட்டான். பாவம் அந்த பொண்ணு அங்கேயே மயக்கமாயிட்டா. அப்புறம் நான் தான் அவளை ஆஸ்பத்திரிக்கு கோண்டு போயி சேர்த்திட்டு அவளோட அப்பா அம்மா வர்ற வரைக்கும் காத்திருந்து விட்டுட்டு வந்தேன். அதான் நேரமாயிடுச்சி“ என்றாள்.

   “அப்போ... உன் கழுத்து வலிக்கு டாக்டரைப் பாக்கலையா...?“ கேட்டார்.

   அப்பொழுது தான் ஞாபகம் வந்தவளாக தன் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே.. “இது கிடக்குது. பாவம் அந்த பொண்ணு. தையல் வேற போட்டிருக்கு. எப்படி வலிக்குமோ....“ சொல்லியபடி தன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள் காவேரி அம்மாள்.

   அடுத்தவரின் வலியைத் தணிக்க நினைத்தால் தன் வலி காணாமல் போய்விடுகிறது.

நன்றி
அருணா செல்வம்

No comments: