Wednesday, December 28, 2016

ஆசிரியர் என்பவர் யார்?

#ஆசிரியர் என்பவர் யார்?
ஆசிரியர் என்பது ஒரு தகுதி அல்ல. அது ஒரு தன்மை. (It is not a qualification, 
but a quality).
சிறந்த ஆசிரியருக்கான மூன்று இலக்கணங்களை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை 
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
சொலல் வல்லன் – ஆசிரியருக்கு சொல்வன்மை வேண்டும். நினைத்ததை சரியான முறையில் திறம்பட எடுத்துக்கூறுபவன் தான் சொலல் வல்லன்.
சோர்விலன் – பலதரப்பட்ட மாணவர்கள் இருப்பார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியாகப் புரியாது. எல்லோருக்கும் புரிகிற மாதிரி திரும்ப திரும்ப சொல்ல வேண்டும். சோர்வடையக் கூடாது.

அஞ்சான் – ஆசிரியர் அச்சம் இல்லாமல் விசயங்களை கூறவேண்டும்.
ஆசிரியர் என்பவர், மாணவர்களுக்கு வரலாறு, இயற்பியல், வேதியியல் ….பற்றிய தகவல்களை கொடுப்பவரா?வரலாறு, இயற்பியல், வேதியியல் ….எந்த விசயமானாலும்,ஒரு ஆசிரியர் அந்த விசயங்களை மாணவர்களாகவே புரிந்து கொள்வதற்கான அறிவுத்திறனுக்காக உதவ வேண்டும்.   ஒரு ஆசிரியர், முதலில் அவரை புரிந்து கொண்டவராகவும், ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட எண்ணங்களிலிருந்து விடுபட்டவராகவும் இருக்க வேண்டும். அந்த ஆசிரியர் அவருடைய அறிவுத்திறனையோ அல்லது அவருடைய ஆறாவது அறிவையோ வெளிக்கொணராத கல்வியை அவருடைய பருவத்தில் பெற்றவர் எனில், அவரால் கட்டமைக்கப்பட்ட எண்ணங்களின் (mechanical knowledge) அறிவையே மாணவர்களுக்கு கொடுக்க முடியும்.

ஓர் அசிரியரின் இலக்கணம் என்னவெனில், கற்பதை முதலில் அவர் புரிந்து கொள்வது மற்றும் விசயத்தை உள்வாங்கிக்கொள்வதுமாகும். எப்படி ஒரு முத்துச்சிப்பிக்குள் ஒரு துளி தண்ணீர் விழுந்தால், அது முத்தாக மாறுகிறதோ, அது போல் தனக்கு கிடைத்த கல்வியை, தகவலை, முதிரச்செய்து முத்தாக்கித்தருகிறவர்கள் தான் சிறந்த ஆசிரியர்களாக விளங்குகிறார்கள்.

ஆக தவறு மாணவர்களிடத்தில் இல்லை. ஒரு ஆசிரியர், முழுமையான ஆசிரியராக உருவாக்கப்படாத பட்சத்தில், இந்த சமுதயாத்திற்கு சிறந்த மாணவர்களை கொடுக்க முடியாது. சுய அறிவு தூண்டப்படாத ஒரு மாணவனால், அவனுக்கு என்ன லாபம். அவன் வளர்ந்து தனி மனிதனாக குடும்ப வாழ்க்கையில் குழ்ந்தைகளுடன் பயணிக்கும் போது அவனுடைய தலைமுறைக்கு என்ன லாபம்.

இங்கு ஒரு தனி மனிதனின் அறிவுத்திறன் உற்று நோக்கப்படுகிறது. தனி மனிதனின் அறிவுத்திறன், அவனுக்கும் அவனை சார்ந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அறிவுத்திறன் என்பது தனி மனித ஒழுக்கத்தோடும், பண்புகளோடும், செயல்களோடும் பிணைந்துள்ளது.  அடுத்து இந்த அறிவுத்திறன் மேம்பட சிறந்த கல்வி அவசியம். சிறந்த கல்வி என்று இங்கே குறிப்பிடப்படுவது, அம்மனிதனின் சுயசிந்தனையை தூண்டுவதாக இருக்க வேண்டும். ஒருவன் பெற்ற அறிவை, அவனது திறமையை, கல்வியை சமுதாயத்திற்கு தருகிறபோதுதான் ஓர் அறிவாளியாக, ஞானியாக, மேதையாக சான்றோர்களால் அவன் மதிக்கப்படுகிறான்.

Saturday, December 17, 2016

மகா கவி பாரதி(தீ)

மகா கவி பாரதி(தீ)

தமிழ்த் தாயின்
செல்லப் பிள்ளை
புரட்சி என்ற
அணு
புதைந்த கவி...

தமிழையும்
தமிழகத்தையும்
தலை நிமிர
வைத்த கவி...

பாட்டுக்கொரு புலவன்
எளியோரையும்
வழியோரையும்
தன் தோல்
சுமந்து மகிழ்ந்தவன்...

ஆங்கிலேயர்க்கு
பாட்டால்
பாடம்
புகட்டிய மாமேதை...

இவன் பாடல்கள்
அனைத்தும்
தமிழ் தாயின்
உடலில் அணியும்
மின்னும் அணிகளன்கள்...

பெண்ணினத்தின்
மறுபக்கத்தை
உலகரிய செய்த
மகா கவி பாரதி...

பெண் விடுதலை
என்ற விதைக்கு
உயிர் கொடுத்த
சூரியன்...

பாரதியின் திறனை
கண்டுஅஞ்சிய
காலன்
அவனை இளமையிலேயே
பறித்து கொண்டானோ...?

பாரதி(தீ)
நீ
மீண்டும்
பிறப்பாய்
என
நம்பி
காத்திருக்கிறோம்....
உன்
வரவை நோக்கி...

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿😫🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா..
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

சலங்கை ஒலி

👏சலங்கை ஒலி👏

பாரம்பரிய
நடனம்
பரதநாட்டி
கதக்கலி
குச்சுபுடி
மண்ணின்
மணம் கமரும்
கரகாட்டம்
ஒயிலாட்டம்
தப்பாட்டம்
சிறக்க
செய்வது
சலங்கை ஒலி...

சலங்கை
இல்லா ஆட்டம்
சுவர் இருந்தும்
சித்திரம்
இல்லாமையே....

இது
மகிழ்ச்சி
ஆனந்தம்
சிங்க நடை
ஏறு நடை
தாண்டவம்
ஆகியவற்றை
வெளிகாட்டும்
கால கண்ணாடி...

நாமும்
மகிழ்வாய்
ஆனந்தமாய்
வாழ்ந்து
சலங்கையின்
ஒசையை
ரசிப்போம்
உறவோடும்
நட்போடும்....
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா...
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

பாரம்பரிய
நடனம்
பரதநாட்டி
கதக்கலி
குச்சுபுடி
மண்ணின்
மணம் கமரும்
கரகாட்டம்
ஒயிலாட்டம்
தப்பாட்டம்
சிறக்க
செய்வது
சலங்கை ஒலி...

சலங்கை
இல்லா ஆட்டம்
சுவர் இருந்தும்
சித்திரம்
இல்லாமையே....

இது
மகிழ்ச்சி
ஆனந்தம்
சிங்க நடை
ஏறு நடை
தாண்டவம்
ஆகியவற்றை
வெளிகாட்டும்
கால கண்ணாடி...

நாமும்
மகிழ்வாய்
ஆனந்தமாய்
வாழ்ந்து
சலங்கையின்
ஒசையை
ரசிப்போம்
உறவோடும்
நட்போடும்....
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா...
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

Tuesday, October 18, 2016

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

▪ நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

🔹 (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972)

தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.

🔹வாழ்க்கைக் குறிப்பு

இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.
‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.
கவிஞரின் நாட்டுப்பற்று
முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.
’கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’
என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.
புகழ்பெற்ற மேற்கோள்கள்
'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'
தமிழன் என்றோர் இனமுன்று
தனியே அதற்கோர் குணமுண்டு'
'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'
'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

🔹மொழிப்பற்று

தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ் அன்னைக்குத் திருப்பணி செய்வோமே
தரணிக்கே ஓரணி செய்வோமே
அமிழிதம் தமிழ் மொழி என்றாரே
அப்பெயர் குறைவது நன்றாமோ

🔹நாமக்கல்லாரின் படைப்புகள்

இசை நாவல்கள் - 3
கட்டுரைகள் - 12
தன் வரலாறு - 3
புதினங்கள் - 5
இலக்கிய திறனாய்வுகள் - 7
கவிதை தொகுப்புகள் - 10
சிறுகாப்பியங்கள் - 5
மொழிபெயர்ப்புகள் - 4

🔹 எழுதிய நூல்கள்
மலைக்கள்ளன் (நாவல்)
காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
பிரார்த்தனை (கவிதை)
நாமக்கல் கவிஞர் பாடல்கள்
திருக்குறளும் பரிமேலழகரும்
திருவள்ளுவர் திடுக்கிடுவார்
திருக்குறள் புது உரை
கம்பனும் வால்மீகியும்
கம்பன் கவிதை இன்பக் குவியல்
என்கதை (சுயசரிதம்)
அவனும் அவளும் (கவிதை)
சங்கொலி (கவிதை)
மாமன் மகள் (நாடகம்)
அரவணை சுந்தரம் (நாடகம்)

🔹மத்திய அரசும் , மாநில அரசும் செய்த சிறப்பு
கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு  அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.
______________________________

🎉🔹🎉🔹🎉🔹🎉🔹🎉

Wednesday, August 31, 2016

எஸ். எஸ். பிள்ளை நினைவு நாள்

ஆகஸ்ட் 31: எஸ். எஸ். பிள்ளை நினைவு நாள்

கணிதத்தில் அளப்பரிய சாதனைகள் புரிந்த ராமானுஜனுக்குப் பிறகு இந்தியாவின் கணிதப் புகழை உலகறியச் செய்த மேதைகளில் முக்கியமானவர் சுப்பைய சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ். எஸ். பிள்ளை). திருநெல்வேலி மாவட்டத்தில் வல்லம் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த எஸ்.எஸ்.பிள்ளை சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார்.

படிப்பில் படு சுட்டியாக இருந்தாலும் வாழ்க்கைச் சூழல் இடம் கொடுக்கவில்லை. இருப்பினும் பல ஆசிரியர்களின் உதவியால் செங்கோட்டை எஸ். எம். எஸ், எஸ். அரசு உயர்நிலைப் பள்ளி, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் கணிதத்தில் பி. ஏ. பட்டப் படிப்பு எனப் படிப்படியாக முன்னேறினார். (அந்நாளில் கணிதத்தில் வழங்கப்படும் பட்டத்தைப் பி. ஏ. பட்டம் என்றே குறிப்பிடுவர்.)

போராடிப் பெற்றப் பட்டம்

பி.ஏ. கணிதத்தில் இரண்டாம் வகுப்பில் எஸ்.எஸ்.பிள்ளை தேர்ச்சி பெற்றதால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புக்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு இராமானுஜன் இதே போன்ற சூழலில் சிக்கித் தவித்தபோது சென்னை பச்சையப்பன் கல்லூரியின் அன்றைய முதல்வர் சின்னதம்பிப்பிள்ளை உட்படப் பலரின் பரிந்துரையால் சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்காக விதிகளைத் தளர்த்தியது. இம்முறை எஸ். எஸ். பிள்ளைக்கும் யாரேனும் உதவ முன்வருவார்களா?

எஸ்.எஸ். பிள்ளையின் கணித அறிவைக் கண்டுணர்ந்து மீண்டும் சின்னதம்பிப்பிள்ளையே சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் “சாதாரண மாணவர்களுக்கென உருவாக்கிய விதிமுறைகளை மேதைகளின் மீது திணிக்காதீர்கள்” என வாதிட்டார். ஒரு வழியாக, எஸ். எஸ். பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1927-ல் ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

நூற்றாண்டுப் புதிருக்கான விடை

இங்கிலாந்தில் கிங்க்ஸ் கல்லூரியில் ராமானுஜனருடன் ஆய்வு புரிந்த ஆனந்த ராவ்விடம் இப்போது எஸ். எஸ். பிள்ளை ஆய்வு மாணவரானார். எண்ணியலில் நான்கு ஆண்டுகள் சிறப்பான ஆய்வு மேற்கொண்டு எம். எஸ். சி. பட்டம் பெற்றார். 1929-ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஆனார். பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தவர் கணிதத்தில் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளைச் செய்தார்.

அவருடைய அரிய கண்டுபிடிப்புகளுக்காக முனைவர் பட்டதுக்கும் மேலான D.Sc. (Doctor of Science) கவுரவத்தைச் சென்னை பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கியது. சென்னைப் பல்கலைக்கழகக் கணிதத் துறையின் முதல் ஆய்வு மாணவர் இராமானுஜன் என்றால், அதன் ஆகச் சிறந்த கணித ஆய்வு பட்டத்தை முதலில் பெற்றவர் எஸ். எஸ். பிள்ளை.

1770-ல் இங்கிலாந்து கணித அறிஞர் எட்வார்ட் வேரிங் யாரும் விடை கண்டுபிடிக்க முடியாத “வேரிங்ஸ் புதிர்” எண் கணிதப் புதிரை உருவாக்கினார். பல்வேறு ஐரோப்பியக் கணித மேதைகளே தடுமாறிய அந்தப் புதிருக்கு எஸ். எஸ். பிள்ளை பொதுவான தீர்வு கண்டார்.

குறிப்பாக ஒர் இயல் எண்ணை அதிகப் பட்சமாக எவ்வளவு எண்களைக் கொண்டு இருபடி, முப்படி, நாற்படி, ஐந்து படி, ஆறு படி, போன்ற படிகளின் கூடுதலாக எழுதலாம் என்ற கேள்விக்கு, எஸ். எஸ். பிள்ளை எனும் பொழுது எண்ணிக்கையில் உள்ளபடி எண்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தி எழுதலாம் என 1935-ல் நிரூபித்தார்.

இதன்மூலம் 165 ஆண்டுகள் நீடித்த புதிருக்கு விடை கிடைத்தது. இதற்காக அவருக்குப் பிரெஞ்சு குடியரசின் மகத்தான கவுரவ விருது 2003-ல் வழங்கப்பட்டது.

எண்ணியலில் 76 அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய எஸ். எஸ். பிள்ளையை அமெரிக்காவில் புகழ் பெற்று விளங்கும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு புரிய ஐன்ஸ்டைன், ஓபன்ஹைமர் உள்ளிட்ட மாமேதைகள் அழைப்பு விடுத்தனர். இதற்கு எஸ். எஸ். பிள்ளை, “எனது கணித ஆய்வுக்கு என் தாய்நாடே போதும்” எனப் பதிலளித்தார்.

பின்னர்த் தொடர் கோரிக்கைக்கு இணங்கி 1950-ல் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேசக் கணித மாநாட்டில் (ICM) சிறப்புரை ஆற்ற ஆகஸ்ட் 30, 1950 ‘Star of Maryland’ விமானத்தில் சென்னையிலிருந்து புறப்பட்டார். ஆனால் அடுத்த நாள் படுகோரமான விமான விபத்தில் காலமானார்.

இராமானுஜன் கணிதக் கழகம் சார்பில் 2009-ல் எஸ். எஸ். பிள்ளையின் கணித ஆய்வுகள், கடிதங்கள் போன்றவற்றை இரு புத்தகங்களாகத் தொகுத்து ஆர். பாலசுப்ரமணியன் மற்றும் ஆர். தங்கதுரை வெளியிட்டுள்ளனர்.

இராமானுஜன், எஸ். எஸ். பிள்ளை போன்ற தலைசிறந்த கணித மேதைகளை உலகுக்கு வழங்கிய தமிழகத்திலிருந்து மேலும் பல கணித மேதைகள் உருவாக வேண்டும். அதற்கு முதல்படியாக, கணிதத்தின் மீது, நம் முன்னோர்களுக்கு இருந்த ஆளுமையை இக்கால மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி, ஒரு பெருமித உணர்வை வளர்க்க வேண்டும்.

Tuesday, August 30, 2016

ஆர்கானிக் காய்கறிகளை கண்டறிவது எப்படி?*

*ஆர்கானிக் காய்கறிகளை கண்டறிவது எப்படி?*

நேர்த்தியான, அழகான காய்கறிகளாக கண்களைக் கவர்ந்தால், அவற்றை சந்தேகப்பட்டுப் பரிசோதிப்பது நல்லது. புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை இதற்கே உரிய தனித்துவமான வாசம் வருகிறதா என முகர்ந்து பார்க்கலாம்.

மற்ற கீரைகளில் ‘பச்சையம்’ வாசம் வரவேண்டுமே தவிர, மருந்து வாசனை வரக் கூடாது. காய், கனிகளில் அதற்கென வரும் வாசம் வருகிறதா எனப் பரிசோதியுங்கள். மிகவும் தளதளவென, பளபளப்பாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

தக்காளி ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டும் சுருங்கினால், அது ஆர்கானிக். அதுபோல வெண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் சரிபார்த்து வாங்கவும்.

கோணலாகவும் சுருக்கமாகவும் இருந்தாலும் முகர்ந்து பார்த்துத் தேர்ந்தெடுப்பது நல்லது.

சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக். அளவில் பெரிதாக அதிகமான எடையில் நிற்பது ஆர்கானிக் அல்ல.
கொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. சாம்பார், கூட்டிலோ பருப்பு கரைந்து மாவாகிவிடக் கூடாது. ஆர்கானிக் பருப்புகள் நன்கு வெந்து வெடித்திருப்பது போல காணப்படும். ஆனால், கரைந்துபோகாது.

அரிசியைக் கைவிட்டு அள்ளும்போது மாவு போல கைகளில் பட்டால், அவை தீட்டப்பட்ட அரிசி அல்ல. மில்களில் அரிசி தீட்டும்போது எண்ணெய் சேர்ப்பதால், மாவு போல கைகளில் ஒட்டாமல் இருக்கும். இதுவே தீட்டப்படாத அரிசி கைகளில் வெள்ளை மாவாக ஒட்டிக்கொள்ளும்.

அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்களில் ஓரிரண்டு வண்டுகள் இருந்தால், அந்த உணவைத் தாராளமாக வாங்கலாம். அதை சுத்தப்படுத்தி நம் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.

சிறுதானியம் ‘பளீர் வெள்ளை’யில் இருக்கக் கூடாது. ஏனெனில், அதில் பச்சரிசி, ஜவ்வரிசி குருணை கலக்கப்பட்டிருந்தால், பளிச்சென இருக்கும். சிறிது பழுப்பு நிறத்தில் இருக்கும் சிறுதானியங்களைத் தேர்ந்தெடுங்கள்.

அருகில் இருக்கும் மார்க்கெட்டோ, ஆர்கானிக் கடையோ, எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்று கேள்விகளை கேட்கும் பழக்கத்தை தொடங்குங்கள். எங்கிருந்து வருகிறது என தெரியாது என சொல்பவரிடம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, சிறிய வியாபாரிகளிடம் காய், கனிகளைப் பரிசோதித்து வாங்குவதே சரி. சீசன் பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். மார்ச் முதல் ஜூன் வரைதான் மாம்பழ சீசன். செப்டம்பர், அக்டோபரில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கக் கூடாது.

அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்குங்கள். சீசன் அல்லாத காலங்களில் விளையக்கூடிய காய், கனிகள் அனைத்து சீசன்களிலும் விற்கப்பட்டால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதே சரி. வாழை மட்டுமே அனைத்து சீசன்களில் கிடைக்கும்.

தேனை வாயில் வைத்தால், சிறு துவர்ப்புச் சுவை வரவேண்டும் அதுதான் ஆர்கானிக். தேனுக்கு காலாவதி தேதியே கிடையாது. ஆனால், தற்போது கடைகளில் வேகவைத்த தேனை அனுப்புகின்றனர். அதாவது சர்க்கரை, வெல்ல பாகைச் சேர்க்கின்றனர்.
நாட்டு சர்க்கரை அடர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அடிநாக்கும், நடுநாக்கும் நாட்டு சர்க்கரையைச் சாப்பிட்ட பின் எரியக் கூடாது.

கருப்பட்டி, கருப்பாக இருக்க வேண்டும். பளபளப்புடன் மின்னக் கூடாது. மின்னுவதால் அதனுள் சர்க்கரையோ, கற்கண்டோ சேர்ந்து இருக்கலாம். கருப்பட்டி எளிதில் உடையக் கூடாது. சிறுகசப்புச் சுவை இருக்கும். அதிகமாக இனிக்காது.

ஆசிரியர் - மாணவர், பெற்றோர் - குழந்தைகள் உறவுகள் மேம்பட...

ஆசிரியர் - மாணவர், பெற்றோர் - குழந்தைகள் உறவுகள் மேம்பட...
முனைவர், சி. சேதுராமன்

நல்ல சமூகம் உருவாக அடிப்படைக் காரணமாக இருப்பவர்கள் ஆசிரியரும், பெற்றோரும் ஆவர். ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள்தான் நிர்ணயிக்கப்படுகிறது. என்கிறது கோத்தாரிக் கல்விக் குழு...

ஒரு நல்ல ஞானாசிரிய னால்தான் நல்ல சமூதாயத்தை உருவாக்க முடியும் என்பார் சுவாமி விவேகானந்தர், நிறைமொழி மாந்தராக ஆசிரியர்கள் விளங்குதல் வேண்டும்.

நன்னூலார் கூறும் நல்லாசிரியர்க்குரிய பண்புகள் எக்காலத்துக்கும் பொருந்துவனவாக அமைந்திலங்குகின்றன.

கற்கும் சூழல்

வளர்ச்சியும் நடத்தையும் புறம்பேயிருந்து கட்டுப்படுத்தும் பலவித காரணிகளே சூழ்நிலை என்படும். நமது பண்பாட்டின் மீது பலவகைத் தாக்கங்கள் நிகழ்வதால் பள்ளிச் சூழலும் குடும்பச் சூழலும் நலிவடைந்து வருகின்றன. ஒரு குழந்தைக்கு நற்பண்புகளை வளர்க்கும் பொறுப்பில் குடும்பச் சூழலும், கற்கும் பள்ளச் சூழலும் பெரும் பங்கு வகிக்கின்றன. இச்சூழல்கள் சீர்கெட்டால் குழந்தையின் வளர்ச்சியும் வாய்ப்பும் தடைப்படுகின்றன. அதனால் மாணவர்கள் நற்பண்புகளைப் பெற்று உயர்வடையும் நற்சூழலுகளை பள்ளிகளே அமைத்துத் தரவேண்டும்.

சூழ்நிலைக்களம்

குடும்பம், சுற்றுப்புறம், சமுதாயம், பள்ளி, அரசு முதலியவைகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் வளர்ச்சி நிலைகள் அமைகிறது. மாணவர்களது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் உதவக் கூடிய திட்டமிடப்பட்ட சூழ்நிலைக்களமாகப் பள்ளிகள் செயல்படுகின்றன.

குடும்பம்- பள்ளி

குடும்பமும் பள்ளியும் மாணவர்களுக்குத் தக்க சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும் போதுதான் மாணவர்கள் கல்வியில் நல்ல அடைவினைப் பெற இயலும். இவை இரண்டும் மாணாக்கரது வளர்ச்சிக்கு உதவும் இன்றியமையாத காரணிகளாகும். ஒரு குழந்தையின் பண்பு அதன் குடும்பத்தின் பண்பு. அதன் சமூகத்தின் பண்பு. சமூகம் காலம் காலமாகச் சேகரம் செய்த பண்பை குழந்தைக்கு அளிப்பது குடும்பம், குடும்பம் இல்லாவிட்டால் குழந்தைகள் நற்பண்புகளைப் பெறமுடியாது என்பர் அறிஞர்.

அசிரியர்

ஒருநாட்டின் பெருமை அதன் பரப்பு, மலைகள், காடுகள், கழகங்கள், ஆயுதச் சாலைகள், கட்டடங்கள் ஆகியவற்றைப் பொறுத்ததன்று. ஆனால் அது,

அந்நாட்டின் பள்ளிகளின் நிலையையும் ஆசிரியர்களின் தன்மையையும் பொறுத்ததாகும் என்று ஜே.எப்.பிரெளன் கூறுகிறார்.

ஆசிரியர்- மாணவர் உறவு

ஆசிரியர் திறம்படக் கற்பிக்கவும் மாணவர்கள் செம்மையுறக் கற்றிடவும் வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நிலவும் நல்லிணக்கச் சூழலே ஆசிரியர் மாணவர் உறவு எனப்படும்.

பண்டைக்காலத்தில் கல்வி வாழ்வோடு கற்பிக்கப்பட்டு வந்தது. செய்து கற்றல், செய்யக்கற்றல், வாழ்ந்து கற்றல், வாழக்கற்றல் என்பதற்கிணங்க கல்வி கற்றல் என்பது வாழ்வோடு இரண்டறக் கலந்ததாக இருந்ததே தவிர தனித்துக் காணப்படவில்லை.

குருகுல முறைக்கல்வியில் ஆசிரியரும் மாணாக்கனும் தந்தை மகன் உறவு என்ற நிரைலயில் நடந்து கொண்டனர். மாணவனாக ஒரு சிறுவனை ஏற்றுக் கொண்டபின் அவனை ஆசிரியர் தமது குடும்பத்துள் ஒருவனாகக் கருதி தன்மகனிடம் அன்பு செலுத்துவது போன்று இவனிடமும் அன்பு செலுத்த வேண்டும் இதே போன்று மாணாக்கனும் ஆசிரியருக்குக் கீழ்படிந்து அவருக்கான பணிவிடைகள் பலவற்றைச் செய்ய வேண்டும்.

இன்றையச் சூழலில் ஆசிரியர் மாணவர் உறவு மேம்பட பின்வரும் வழிகளை மேற்கொள்ளலாம்.

1. அன்பு காட்டுக,

அன்பே உலகில் வலிமையானதாகும். இந்திரகதியில் இயங்கும் இன்றையச் சூழலில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உண்மையான அன்புக்காக ஏங்குகின்றனர். தாயும், தந்தையும் பணிபுரிபவர்களாயின் அக்குழந்தைக்கு இருவரது அன்பும் கிட்டாது போய்விட வாய்ப்புள்ளது. பள்ளிக்கு வரும் மாணவனிடத்தில் ஆசிரியர் பாசமுடன் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் தவறுகள் செய்கின்ற போது அவை மனதில் படும் வண்ணம் சுட்டிக்காட்டி அன்பு வழியில் திருத்த வேண்டும். ஆசிரியர் தம்மீது அன்புகாட்டுகிறார் என்று உணரும் மாணவன் நல்வழியில் செல்ல ஆரம்பிக்கின்றான். ஆசிரியர் தாய்போன்று அன்பு காட்டி, தந்தை போன்று அனைத்துப் பேசி மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை கூறுகிறார்.

2. அறிவுத்திறன் குறைந்தவர்களை ஆசிரியர்கள் உற்சாகப்படுத்துதல் வேண்டும்,

அறிவுத் திறன் மிகுந்த மாணவர்களைப் பாராட்டி அவர்கள் மீது மட்டும் தனிக்கவனத்தை செலுத்துதல் கூடாது. அறவுத்திறன் மிகுந்த குழந்தைகளுக்குக் கற்பித்து அவர்களை மேலும் உயர்த்துவது சிறந்ததாகாது. அறிவுத் திறன் குறைந்தவர்களுக்கு அறிவு புகட்டி அவர்களை உயர்வடையச் செய்வதே சாலச்சிறந்தது.

அறிவுத் திறன் குறைந்தவர்களை ஆசிரியர்கள் மற்ற மாணவர்கள் முன்பு தரக்குறைவாக நடத்துதல் கூடாது. அவர்களை அவ்வாறு நடத்தினால் அம்மாணவர்களின் கவனம் கல்வியில் செல்லாது. ஆசிரியர் மாணவர் உறவு பாதிப்படையும். மாறாக அறிவுத்திறன் குறைந்த மாணவர்கள் ஆர்வமுடன் கற்க முயலும் போது அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அம்மாணவர்கள் கற்க ஊக்கமுடன் முயலுவதோடு, ஆசிரியர் மீது மிகுந்த மதிப்புடன் இருப்பர்.

3. மாணவர் இன்பத்திலும் துன்பத்திலும் பங்குபெறல்,

ஆசிரியர் மாணவர் இருவரும் இரட்டை மாட்டுவண்டியில் பூட்டப்பட்ட இரண்டு காளைமாடுகளைப் போன்றவர்களாக இருத்தல் வேண்டும். மாணவர்கள் தோல்வியுறும் போது வருந்துவர். அவர்களுக்கு உடல்சோர்வோ மனச்சோர்வோ ஏற்பட்டு அவர்கள் வருந்தும் போது அதனைத் தன்னுடையதாகக் கருதி அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். அவர்களுடைய வருத்தத்தைத் தம்முடையதாகவும் கொண்டு அவர்களது துன்பத்திற்கு ஓர் ஊன்றுகோலாக அமைந்து அவர்களது நலம் நாடவேண்டும், அவ்வாறு செய்தால் ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு உன்னதநிலையை அடையும்.

மாணவர்கள் வெற்றி பெறும்போது அவர்களது வெற்றியைத் தம்முடைய வெற்றியைப் போல் கருதி மகிழ்ச்சிடையதல் ‘ரிqனிu. மாணவர்களைப் பாராட்ட வேண்டும்.

அவ்வாறு செய்தோமெனில் ஆசிரியர் கூறுகின்றவண்ணம் மாணவர்கள் மனமுவந்து நடப்பர்.

இருவரது உறவும் மேம்பாடடையும். அவர்களது வெற்றியும் அலட்சியப்படுத்துதல் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களது வெற்றியில் பங்கு கொண்டு மகிழவேண்டும்.

5. மாணவர்களை ஊக்கப்படுத்துதல்;

அகல்விளக்காக இருந்தாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்பவர் பெரியோர். ஒவ்வொரு மாணவர்களுக்குச் சமமான வாய்ப்பைக் கொடுத்து ஊக்கமூட்டினால் அவர்கள் திறன்கள் வெளிப்படும். ஆசிரியர்கள் மாணவர்களின் திறன்கள் வெளிப்படுமாறு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

அவர்களது திறமைகளைக் குறைத்து மதிப்பிடுதல் கூடாது. திறமைகளைக் கண்டறிந்து அதனை வளர்த்தல் வேண்டும். “ஊக்கமே ஆக்கத்திற்குச் சிறந்த வழி” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

திறமைகளை ஊக்குவிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் அதிகம் விரும்புவர்.

6. மாணவர்களின் தவறுகளைக் களைதல்;

தவறு செய்வது மனித இயல்பு பல்வேறு சூழல்களில் இருந்து மாணவர்கள் வருவதால் வகுப்பிலும் பள்ளி வளாகத்திலும் தவறுகள் செய்ய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு தவறுகள் மாணவர்கள் செய்யும்போது அவர்கள் அதை உணரும் வண்ணம் செய்து திருத்துதல் வேண்டும். அதற்கு மாறாக சிறிய குற்றங்களையே பெரிதாகக் காட்டி அதனை விமர்சித்தல் கூடாது. தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்துதல் வேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமல் இருத்தல் கூடாது. அது இருவரது உறவிலும் தீய விளைவுகளை ஏற்படுத்தும். மாணவர்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் அதுபோன்ற தவறுகளைச் செய்யாதவாறு ஆசிரியர்கள் அவர்களைப் பார்த்துக் கொள்ளல் நலம் பயக்கும். அவ்வாறு செய்தால் மாணவர்கள் தங்களை நல்வழிப்படுத்திய ஆசிரியர்களைப் பெரிதும் மதிப்பார்கள்.

மேம்பட்ட கற்பித்தல் திறம்:

நாள்தோறும் புதிய செய்திகளையும் கருத்துக்களையும் கூறும் ஆசிரியர்களை மாணவர்கள் அனைவரும் விரும்புவர், தாம் உணர்ந்ததை மாணவருக்கும் கற்பிக்கும் கற்பித்தல் திறமுடையவராக ஆசிரியர்கள் விளங்குதல் வேண்டும். இவ்வாறான மேம்பட்ட கற்பித்தல் திறம் ஆசிரியர் மாணவர் நல்லுறவுக்கு அடிப்படையாக அமைகிறது. மேலும் ஆசிரியர் மாணவர்களிடையே சாதி, மத, இன, மொழி வேறுபாடு பாராது அனைவரையும் சமமாக நடத்துதல் வேண்டும்.

பெற்றோர் ஆசிரியர் உறவு:

மாணவர்களிடத்தில் நற்பண்புகள் மேலோங்க பெற்றோர். ஆசிரியரிடையேயும் நல்ல உறவு வேண்டும். இவர்களின் நல்லுறவு மாணவர் கல்விச் சூழ்நிலைச் சீர்கேடுகளை அகற்றும் அருமருந்தாக அமைகிறது. மேலும் ஆசிரியர், மாணவரிடையே உள்ள அந்நியத்தன்மை போக்க உதவுகிறது. பெற்றோர் - ஆசிரியர் நல்லுறவு ஆசிரியர்- மாணவர் உறவை மேம்பட வைக்கிறது.

ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள உறவை மேம்படுத்தும் காரணிகள் எவையென செய்யப்பட்ட ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, அவற்றுள் சில:

1. ஆதாரக் கல்வி மாணவருக்கும், ஆசிரியருக்கும் இடையே உறவை மேம்படுத்துகிறது.

2. மாணவர்கள் விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் உறவு மேலோங்கி உள்ளது.

3. எல்லோராலும் விரும்பப்படும் ஆசிரியர்களால் மட்டுமே மாணவர்களிடம் நல்லுறவை ஏற்படுத்த முடிகிறது.

4. ஆசிரியர் மாணவர் விகிதம் குறைந்துள்ள பள்ளிகளில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் உறவு சிறந்து விளங்குகிறது.

பெற்றோரும் குழந்தைகளும்:

ஒரு குழந்தைக்கு சிறந்த முதல் ஆசிரியர்கள் பெற்றோர்களே ஆவர். பெற்றோர்களைப் பார்த்தே குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். இன்றைய சூழலில் பெற்றோர்களுடன் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர்.