Sunday, April 06, 2014

முகலாயர்கள் கால ஓவியங்கள் ....



ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தில்லியின் Indira Gandhi National Centre for Arts ஒரு அருமையான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன் தலைப்பு “MIGHTY MUGHALS”.  அந்த கண்காட்சியினை இங்கிலாந்து தூதரகத்துடன் இணைந்து நடத்திய IGNCA, இங்கிலாந்து நாட்டிற்கு எடுத்துப் போன முகலாயர் கால ஓவியங்கள், புத்தகங்கள் என அனைத்துப் பொருட்களின் கண்காட்சியாக மக்களின் பார்வைக்கு வைத்திருந்தார்கள்.  அங்கே இருந்த பெரும்பாலான ஓவியங்களின் புகைப்படங்களும், சில புத்தகங்களும் நம்மை முகலாயர் காலத்திற்கு அழைத்துச் சென்ற உணர்வு. 
அந்த கண்காட்சியில் இருந்த ஓவியங்களை/ஓவியங்களின் புகைப்படங்களை நான் எனது காமெராவில் படம் பிடித்து வந்தேன். அத்தனை படங்களையும் ஒரே நாளில் இங்கே பதிவேற்றுவது என்பது முடியாத காரியம். அதனால் ஒரு சில படங்களை மட்டும் இங்கே இன்று வெளியிடுகிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் மற்ற புகைப்படங்களையும் வரும் ஞாயிறுகளில் வெளியிடுகிறேன்.
இந்த ஞாயிறில் சில புகைப்படங்களைப் பார்க்கலாம்!

மத்திய ஆசியாவின் பேரரசரான தைமூர் வழி வந்தவர்கள் என்பதில் முகலாயப் மன்னர்களுக்கு நிறைந்த பெருமை. 1398-ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த தைமூரின் ராணுவத்தின் பெருமையை தொடர்ந்து தக்க வைக்கவும், அதை விட அதிகம் புகழ்பெறவும் விரும்பினார்கள். அவர்களுக்கு எப்போதும் தைமூர் மீது ஒரு மரியாதை உண்டு. இந்த படத்தில் தைமூர் உடன் முகலாயப் பேரரசை உருவாக்கிய பாபர், ஹுமாயூன், ஜெஹாங்கீர் போன்றவர்கள் இருப்பது போன்ற ஓவியம் வரைந்திருக்கிறார் ஹஷிம் எனும் ஓவியர். வரைந்த ஆண்டு 1620.

தனது பதினோறாவது வயதில் மத்திய ஆசியாவில் இருந்த Fergana Valley எனும் இடத்திற்கு அரசராக முடிசூட்டப்பட்ட பாபர் [1483-ஆம் வருடம் பிறந்தவர்] அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு காபூல் நகரில் புதிய ராஜாங்கத்தினை ஏற்படுத்தினார். 1526-ஆம் ஆண்டு நடந்த பானிபத் போரில் வெற்றி பெற்ற பாபர் மற்ற சிறிய ராஜயங்களையும் கைப்பற்றி முகலாயப் பேரரசினை உருவாக்கினார். இந்த ஓவியம் வரையப்பட்ட ஆண்டோ, அல்லது வரைந்தவர் பெயரோ இதில் குறிப்பிடப்படவில்லை.

வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஓய்வெடுக்கும் ஹூமாயூன். மாடிப்படிகளிலிருந்து கீழே விழுந்து இறந்த ஐம்பது வருடங்களுக்கு பின்னர் வரைந்த ஓவியம் இது. வரைந்தவர் பெயர் இல்லை. வரையப்பட்ட காலம் 1600-10 ஆக இருக்கலாம்.

ஓய்வெடுக்கும் ஜஹாங்கீர். வரையப்பட்ட ஆண்டு 1620. ஓவியர் பெயர் இல்லை.

சிங்கத்தினைக் கொல்லும் யானை. முகலாயர்களுக்கு யானைகள் மேல் அதிக பிரியம் உண்டு. மலையைப் போன்ற அதன் பலத்தில் அவர்களுக்கு அதிக நம்பிக்கை. இந்த ஓவியம் வரையப்பட்ட ஆண்டு 1770.

தில்லியில் உள்ள செங்கோட்டையை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆங்கிலத்தில் Bird’s eye view என்று சொல்லப்படும் கோணத்தில் பார்த்ததுண்டா? ஒரு ஓவியர் தனது கற்பனையில் வரைந்திருக்கிறார் இந்த செங்கோட்டையை. வரைந்த ஆண்டு 1780-90 க்குள் இருக்கலாம்.

செங்கோட்டையின் அருகே ஷாஜஹான் குதிரையில் பயணம் செய்வது போன்ற இந்த ஓவியம் வரையப்பட்டது 1815-ஆம் வருடம். முகம்மது சலி கன்பூ எனும் ஆசிரியரால் எழுதப்பட்ட “ஷாஜஹானின் வரலாறுபுத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த ஓவியம் இரண்டாம் அக்பரால் J.T. Roberdean எனும் ஆங்கிலேயருக்கு பரிசாக தரப்பட்டது.

ஆக்ரா கோட்டை – 1573-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கோட்டையின் ஓவியம் வரையப்பட்ட ஆண்டு 1730. யமுனா நதி ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஓவியம், ஆக்ரா கோட்டையினை கிழக்குப் பகுதியில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்பதைக் காட்சிப்படுத்துகிறது.
என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட ஓவியங்களை ரசித்தீர்களா? இந்த கண்காட்சியில் பார்த்த இன்னும் நிறைய ஓவியங்கள் உண்டு. உங்களுக்கு விருப்பமிருந்தால் மற்றவற்றையும் பகிர்ந்து கொள்கிறேன்!
மீண்டும் சந்திப்போம்......

No comments: