Saturday, January 31, 2015

வெற்றிக்கு 7 படிகள்.....



படி 1 . சரியான விசயங்களை செய்வது.....

படி 2. முதல் படியில் நாம் பார்த்த சரியான விஷயங்களை  சரியாக செய்து முடிப்பது.

படி 3.அடுத்தவர்கள் சொல்வதை அப்படியே நன்றாக செய்து முடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை இன்னும்  சிறப்பாக செய்வது எப்படி என்று யோசிக்க தொடங்க வேண்டும்.

படி.4. களையெடுப்பது .  அதாவது தேவையில்லாத சமாச்சாரங்களை வெட்டி வீசி எறிவது.

படி.5.காப்பி.  காப்பி என்றதும் தப்பாக நினைக்காதீர்கள். அடுத்தவர்கள் செய்யும் நல்ல விசயங்களை  கற்றுக் கொள்வது.

படி.6.காப்பியடிப்பதற்கு நேர் எதிர் .  இது வரை யாரும் செய்யாத புது விஷயங்களை  யோசித்து செய்வது.

படி.7. சிரமமான  விசயம். யாராலும் செய்ய முடியாத விஷயங்களை செய்வது.


வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்தும்.....

அன்புடன் சிவா....

Wednesday, January 21, 2015

ஜேம்ஸ் வாட் - 10

பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி ஐரோப்பாவின் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட ஜேம்ஸ் வாட் பிறந்தநாள் இன்று (ஜனவரி 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :
# ஸ்காட்லாந்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதில் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். காகிதம் வாங்க காசு இருக்காது என்பதால், வீட்டுத் தரையிலேயே வரைவார். இவரது ஓவியங்களில் வட்டம், சதுரம், முக்கோணம் என கணித சம்பந்தமானவை அதிகம் இடம்பெறும்.
# பிறவியிலேயே சற்று பலவீனமானவர். உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும். தொடர்ந்து பள்ளிக்குச் செல்லமுடியாததால் அம்மாவிடம் வீட்டிலேயே கற்றார்.
# உறங்கும்போதும், விழித்திருக்கும்போதும் இயந்திரங்களைப் பற்றியே கனவு காண்பார். 18 வயதில் லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றார். ஊர் திரும்பிய அவருக்கு கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இயந்திரங்கள் தயாரிக்கும் வேலை கிடைத்தது.
# தாமஸ் நியூகாமன் என்பவரின் நீராவி இயந்திரத்தைப் பழுது பார்க்கும் வாய்ப்பு 1764-ல் கிடைத்தது. அதில் அதிக சக்தி வீணாவதைக் கண்டார். உடல்நிலை அனுமதிக்காதபோதும் மனம் தளராமல் கடுமையாக உழைத்தார். இயந்திரத்தில் சக்கரம் பொருத்தும் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி அதை மாற்றம் செய்தார்.
# இந்த மாற்றங்களால் இயந்திரத்தின் சக்தி பல மடங்கு பெருகியது. இதற்கு காப்புரிமை பெற்றார். இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் சென்ட்ரிஃபியூகல் கவர்னர் கருவி, அழுத்தமானி, பொருள் அளவு, விசை, வேகம், தொலைவு ஆகியவற்றை பதிவு செய்யும் கருவி, நீராவியைக் கட்டுப்படுத்தும் த்ராட்டில்-வால்வு ஆகியவற்றையும் கண்டுபிடித்தார்.
# 1775-ல் பொறியாளர் மேத்யூ போல்டன் என்பவருடன் கூட்டு சேர்ந்தார். அடுத்த 25 ஆண்டுகளில், இருவரும் இணைந்து பல்வேறு நீராவி இயந்திரங்களைத் தயாரித்து பெரும் செல்வந்தர்களாயினர். இவரது கண்டுபிடிப்புகள் மனிதகுலத்துக்கு வரப்பிரசாதமாக விளங்கின.
# அதுவரை மனித, விலங்கு ஆற்றல்களையே நம்பியிருந்த தொழில் உலகம் புதிதாக நீராவி என்ற இயற்கை சக்தியை பயன்படுத்தத் தொடங்கியது. உற்பத்தி பல மடங்கு பெருகியது. தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நாயகர் என்று உலகம் இவரைப் போற்றியது.
# மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு ‘வாட்’ என இவரது பெயரே சூட்டப்பட்டது. இவரது கண்டுபிடிப்புகள் பல துறைகளுக்கும் பரவின. துணி காய வைக்கும் இயந்திரம், விஷக் காற்றைப் பிரித்தெடுக்கும் கருவி, சிற்பங்கள் மறு உருவாக்கம் செய்யும் கருவி என்று இவரது கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீள்கிறது.
# ஹார்ஸ் பவர் (குதிரைத் திறன்) என்ற அளவு முறையை உலகுக்குத் தந்தவரும் இவரே. வாழ்நாள் முழுவதும் ஏறக்குறைய நோயாளியாகவே வாழ்ந்த இவர் மனிதகுலத்துக்கு வழங்கிய மகத்தான பங்களிப்புகள் ஏராளம்.
# இயற்கையான நீராவி சக்தியை மகத்தான சக்தியாக மனிதகுலத்துக்கு மடைமாற்றிய வரலாற்று நாயகர் ஜேம்ஸ் வாட் 83 வயதில் மறைந்தார். 


அன்புடன்  சிவா..
நன்றி   தமிழ் இந்து.

கல்விமுறை செல்ல வேண்டிய திசை எது?


  
‘அடிப்படைக் கல்வி மறுக்கப்படுவதுதான் மக்களிடையே பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது’ என்று பொருளியல் அறிஞர் அமர்த்திய சென் கூறுவது சாதாரணமான விஷயமல்ல.
2014-ம் ஆண்டுக்கான இந்தியக் கல்வித் தரத்தின் ஆய்வறிக்கையை (ஏ.எஸ்.ஈ.ஆர்.) அந்தப் பின்னணியில் பொருத்திப் பார்த்தால் பல உண்மைகள் புரியவரும். கல்வி கற்றுத்தருவது தொடர்பான கருதுகோள்களும் நடைமுறைகளும் எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பதை அறிக்கை உணர்த்துகிறது.
மாணவர்கள் எளிதில் மதிப்பெண்களைப் பெற வேண்டும், அதிக மாணவர்கள் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்திலான பாடத்திட்டம்தான் மாணவர்களின் திறன் குறைவுக்கு முக்கியமான காரணம். பாடத்தைப் புரிந்துகொண்டு படிப்பது, கணிதத்தின் நான்கு முக்கிய அம்சங்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றை எளிதாகக் கற்றுக்கொள்வது ஆகிய வற்றைவிட, தேர்ச்சி விகிதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஐந்தாம் வகுப்பு மாணவரால் இரண்டாம் வகுப்பு மாணவரின் பாடங் களை எளிதாகப் படிக்க முடியவில்லை. ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் முக்கால்வாசிப் பேருக்குச் சாதாரண கழித்தல் கணக்கு தெரியவில்லை. இந்த மாணவர்கள் மேல் வகுப்புகளுக்குப் போன பிறகு இந்தத் திறன் அதிகரிப்பது ஓரளவுக்குத்தான் நடைமுறை சாத்தியமாக இருக்கிறது என்பது நமது கல்வி முறையின் தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது.
577 மாவட்டங்களில் 5,70,000 மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்று ஏ.எஸ்.ஈ.ஆரின் அறிக்கை தயாரிக்கப்பட்டி ருக்கிறது. 6 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியரைப் பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதில் 96% வளர்ச்சி ஏற்பட்டிருப்பது மட்டுமே இதில் ஆறுதலான விஷயம்.
மாணவர்களின் திறன் குறைவுக்குப் பாடத்திட்டங்களும் பயிற்று விப்பு முறைகளுமே முக்கியமான காரணங்கள். அன்றாட வாழ்வில் மக்களுக்குத் தேவைப்படும் கணிதம் என்பது எண்களைப் பற்றியதும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களும்தான். அது இப்போது 9, 10-வது வகுப்பு பாடங்களிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கப்போகும் மாணவர்களுக்காக இதர மாணவர் களுக்குக் கணிதப் பாடங்களைக் கடினமாக்குவதால் மாணவர்களுக்குத் தேவையற்ற கல்விச்சுமைதான் கூடும்.
ஒரு ஆசிரியர் 30 மாணவர்களுக்கு மட்டுமே பாடம் சொல்லித் தரும் வகையில் ஆசிரியர், மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் இருக்க வேண்டும். அதை அடைவதற்கு வகுப்பறைகளும் ஆசிரியர் களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட வேண்டும். பள்ளிக் கூடத்துக்குப் பிள்ளைகளை அனுப்புவது வீண் என்று பெற்றோர்கள் நினைத்த காலம் போய், தான் எந்த வகையில் துயரப்பட்டாலும் சரி, தன்னுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்ற உணர்வு பெற்றோருக்கு ஏற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், பாடங்களும் கற்பித்தல் முறைகளும் எளிமையாகவும் பயனுள்ளவையாகவும் இருப்பதே கல்வியின் அடிப்படை நோக்கத்தைப் பூர்த்திசெய்யும்.
மதிப்பெண்ணுக்காகப் படிப்பதைவிடப் பல கலைகளைக் கற்கவும் உலகைத் தெரிந்துகொள்ளவும் உதவும் கல்வியே வாழ்க்கைக்கு உதவும்.
தேர்ச்சியும் தேர்ச்சி விகிதமும் கல்வித் துறையின் சாதனைக்கு வெறும் புள்ளிவிவரங்களாக மட்டுமே இருக்க முடியும். தத்தமது வகுப்புக்குரிய பாடங்களைத் தாங்களே படிக்கவும் எழுதவும் புரிந்துகொள்ளவும் முடிவதுதான் கல்வித்தரத்துக்கு உண்மையான உரைகல். அரசும் கல்வித் துறையும் அதை நோக்கிப் பயணிப்பது நல்லது. 


அன்புடன் சிவா...
இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி......
 

Saturday, January 17, 2015

பெஞ்சமின் பிராங்க்ளின் 10

 பெஞ்சமின் பிராங்க்ளின்
பெஞ்சமின் பிராங்க்ளின்
ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 1706-ல் பிறந்தவர். தந்தை சோப்பு, மெழுகுவர்த்தி தயாரித்து விற்பவர். 17 குழந்தை கள் இருந்ததால் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. ஒரு ஆண்டுகூட முழுமையாக இவர் பள்ளி சென்றதில்லை. ஆனால் தானாக முயன்று கல்வி கற்றார். 7 வயதிலேயே கவிதைகள் எழுதுவார்.
 தொழிலில் அப்பாவுக்கு உதவியவாறே ஓய்வு நேரத்தில் 4 மொழிகளைக் கற்றார். நூல்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அண்ணனின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் படித்துவிடுவார்.
 அண்ணனுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் ஊரைவிட்டு வெளியேறி, பிலடெல்பியா சென்றார். அங்கு கஷ்டப்பட்டு ஒரு அச்சகத்தை நிறுவினார். பத்திரிகைகளில் எழுதினார். சீக்கிரமே பிரபலமானார். பென்சில்வேனியா கெஸட் இதழை 1720-ல் வாங்கி நடத்தினார்.
 அச்சுத் தொழில், பத்திரிகை மூலம் 40 வயதுக்குள் செல்வந்தரானவர். ‘Poor Richard’s Almanack’ என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்கு அளித்தவர். இது இவருக்கு பெரும் செல்வம், புகழ், கவுரவத்தைப் பெற்றுத் தந்தது.
 குறைந்த எரிபொருளில் நிறைய வெப்பம் தரும் அடுப்பைத் தயாரித்து விற்றார். செயற்கை உரங்களைக் கண்டறிந்தார். மின்னலில் மின் சக்தி இருப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்தார். மின்னல், இடியில் இருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். கிட்டப் பார்வை, தூரப்பார்வை ஆகிய இரண்டு பாதிப்புகளுக்கும் உள்ளான முதியவர்களுக்கான பைஃபோகல் லென்ஸை கண்டுபிடித்தார். அவற்றுக்கு இவர் காப்புரிமை பெறவில்லை. மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் பலன்பெறும் நான், பிறருக்கும் எனது பங்களிப்பை வழங்கவேண்டும் என்பார்.
 காகிதத்தில் கரன்சி நோட்டு அச்சடிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார். சந்தா முறையில் நூல்களை வாங்கிப் படிக்கும் முறை, நடமாடும் நூலக முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் இவரே.
 தீ விபத்துக்கான காப்பீட்டு நிறுவனத்தை முதன்முதலாக உருவாக்கினார். உலகப் புகழ்பெற்ற பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை நிறுவினார். அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தவரும் இவர்தான்.
 1783-ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்தார். இதுதான் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது.
 1789-ல் அமெரிக்காவின் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை இவரது வழிகாட்டுதலில் செயல்படும் குழுவிடம் ஒப்படைத்தார். இவரது மேற்பார்வையில் அரசியலமைப்புச் சட்டம் உருவானது. அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பிறகு பெஞ்சமின் பிராங்க்ளின் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் படத்துடன் 2 அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
 அறிவியல், அரசியல், படைப்பாற்றல், இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம் பதித்த பெஞ்சமின் பிராங்க்ளின் 84 வயதில் மறைந்தார்.

நன்றியுடன்   சிவா..

2014 பூமியின் அதிவெப்பமான ஆண்டு:

 அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவிப்பு

வானிலை மாற்றத்திற்கான ஐ.நா. குழு, அதிக வெப்பநிலைக்கு மனித நடவடிக்கைகளே 95% காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளது. | கோப்புப் படம்: ஏ.பி.
வானிலை மாற்றத்திற்கான ஐ.நா. குழு, அதிக வெப்பநிலைக்கு மனித நடவடிக்கைகளே 95% காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளது. | கோப்புப் படம்: ஏ.பி.
உலகம் முழுவதும் மக்கள் நிலத்தடி எரிபொருட்களைப் பயன்படுத்தி கிரீன்ஹவுஸ் வாயுக்களை காற்றில் கலக்கச் செய்து சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்ததால் 2014ஆம் ஆண்டு பூமியின் அதிகமான வெப்பமடைந்த ஆண்டாக அமெரிக்க அரசின் இரு அறிவியல் அமைப்புகள் கூறியுள்ளன.

இதுகுறித்து நாஸா விண்வெளி ஆய்வுக்கழகம் மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA) ) நடத்திய ஆய்வின் அடிப்படையில் தட்பவெப்ப சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு உலக அளவில் பசுமை இல்ல வாயுக்களினால் ஏற்படுத்தும் மாசுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. 19ஆம் நூற்றாண்டு முழுவதும் 1997லிருந்து 10 வருடங்கள் மிகவும் வெப்பமாக வருடங்களாக இருந்தன என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2010க்கு மேல் உலக வெப்பமயமாதல் குறித்த சில சந்தேகங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் கூற்றுகள் சமீப வருடங்களாக நிறுத்தப்பட்டன.

2014ல் வெப்பநிலை, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உள்ளிட்டு வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரை நீண்டிருந்தது. மேற்கு அலாஸ்கா தீவுகளிலிருந்து ரஷ்யாவின் கிழக்கு வரை தென் அமெரிக்காவின் உள்ளார்ந்த பகுதிகளிலும் கிழக்கு மற்றும் மேற்கு கடலோர ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியாவின் இன்னும் சில இடங்களிலும் உலகம் முழுவதும் பதிவானதாக நாசாவும் நோயாவும் தெரிவித்துள்ளன. குழப்பமான வானிலை நிலைமைகளால் வருடத்திற்கு வரும் பாதிப்படையும் புவிவெப்பமாதலுககான காரண கர்த்தாக்களால் மனிதர்களால் உருவாக்கப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களால் உருவாக்கப்படும் மாசு, மிகப்பெரும் இடர்களை பூமிக்கு ஏற்படுத்திவருவதாக நியூயார்க்கில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆய்வுக் கழக இயக்குநர் காவின் ஸ்மித் தெரிவித்தார்.

பெரும் சுற்றுச்சூழல் கேட்டை விளைவிப்பதில் கிரீன்ஹவுஸ் வாயுக்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளதாகத் தெரிவிக்கும் இந்தப் புள்ளிவிவரம் மிகவும் தெளிவானது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐக்கியநாடுகள் நடத்திய ஆய்வு ஏற்கெனவே வெப்பமும் மழையும் மிதமிஞ்சிய அளவில் இருந்ததைத் தெரிவித்ததால் உணவுக்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அண்டார்டிகா கண்டத்தில் உள்ள கிரீண்லேண்ட்டில் பிரமாண்ட ஐஸ்கட்டிகள் உருகிக்கொண்டிருப்பதால் கடல் மட்டம் உயர்ந்துவருகிறது. இதனால் கடலோர மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.

டிசம்பரில் பாரீசில் சந்திப்பு

அடுத்த டிசம்பரில், 200 உலக நாடுகள் பாரீஸில் சந்தித்து புவிவெப்பமாதலைத் தடுப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மாற்றிக்கொள்வது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். கிரீன்ஹவுஸ் வாயுக்களை அதிகம் பயன்படுத்தும் சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐ.நாவின் இத்தகைய முயற்சிக்கு உச்சபட்ச ஒத்துழைப்பை நல்கும் என்றார்.

புதிய புள்ளிவிவரம் ஒன்றின்படி, ''வரும்காலத்தில் தட்பவெப்பநிலை மாற்றம் ஒரு பிரச்சனையாக இருக்காது எனும் இன்னொரு நினைவூட்டலாக - இங்கு இதற்காக நாம் நடவடிக்கை எடுப்பதற்காக இனிமேல் காலம்கடந்து காத்திருக்க முடியாதாகவும் அது நிகழ்கிறது'' என்றார் வெள்ளைமாளிகை அதிகாரி.

பைப்லைன் புதைக்க எதிர்ப்பு

கனடா நாட்டின் கச்சா எண்ணை, கீஸ்டோன் xL பைப்லைன் பூமிக்குள் புதைக்கப்பட்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வழியாக எடுத்துச்செல்லப்படுவதை எதிர்ப்பவர்கள் பைப்லைன் கட்டுமானப் பணிகளை எதிர்த்துவருகின்றனர்.

அமெரிக்க அரசின் நடவடிக்கைகள்

அமெரிக்க செனட் உறுப்பினர் ஜேம்ஸ் இன்ஹோஃபே கூறுகையில், 2010க்கும் 2014க்கும் இடையில் உள்ள வெப்பநிலை வித்தியாசம் இன்றியமையாதது என நிரூபணமாகியுள்ளதை அடுத்து அமெரிக்க அரசு நம்பிக்கையான வகையில் சிறந்த காலநிலை மாற்றத்திற்கான முயற்சிகளை முன்னெடுத்துவருதால், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கழகம் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது தேவையில்லாதது என்றார்.

மனிதர்களின் செயல்களே புவிவெப்பமாதலுக்கு காரணம் என்பது தெளிவானது. நாம் வாழும் இந்த பூமியை பேரழிவின் விளிம்புக்கு கொண்டுசெல்லக்கூடாது என்ற கவலைப்படுபவர்கள் எங்களை நம்ப வேண்டும் என்றார். அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு இடையிலான பருவநிலை மாற்றத்திற்கான அமைப்பு (IPCC) கூறுகையில் 95 சதவீத மனிதகுல நடவடிக்கைகளே இதற்கு காரணங்களாகின்றன. மாறாக காலநிலையின் இயற்கை வேறுபாடுகளுக்கு சூரியனில் ஏற்படும் புள்ளிகள் காரணிகளாக உள்ளன. அதற்கும் காரணம் நாம் புவிவெப்பநிலையை உயர்த்திக்கொண்டிருப்பதுதான்.

சூரிய சக்திகளுக்கு பரிந்துரை

பாரீசில், உலக நாடுகளில் இன்னும் அறிமுகமாகாத படிம எரிபொருட்களுக்கு இப்பொழுதே தடை விதிப்பதுகுறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். எண்ணை விலை குறைப்பை ஊக்குவிக்காமல், அதற்கு மாற்றாக காற்று மற்றும் சூரிய சக்திகளைப் பயன்படுத்த சிபாரிசு செய்யப்படும்.

அமெரிக்காவின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான வெளியுறவுத்துறை அதிகாரி மிச்செல் லெவி ராய்டரிடம் கூறுகையில், அரசியல் மாற்றங்கள் நிகழும் பொறுப்புமிக்க நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

நகைச்சுவை

இங்கிலாந்து தேசிய காலநிலை மாற்றத்திற்கான வளிமண்டல அறிவியல் மையப் பல்கலைக்கழக இயக்குநர் ரோவான் சூட்டான், ஒரு குறிப்பிட்ட வருடம் சூடானதாக இருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது, நகைச்சுவையானது. ஆனால் கடந்த 14, 15 ஆண்டுகள் மிகவும் வெப்பமான ஆண்டுகளாகப் பதிவாகியிருந்தது என்பதுதான் உண்மை. நூற்றாண்டின் திருப்பத்தில் வெப்பம் பெருகத் தொடங்கியது தெளிவான விஷயம் என்றார். 1980கள் அல்லது 1990களில் கூட வெப்பம் வேகமாக உயரவில்லை. அசாதாரணமான வெப்பமாற்றம் 1998லிருந்துதான் தனது முதல் அடியை எடுத்துவைத்தது. IPCC தெரிவித்திருப்பது அது வெப்பமயமாதலின் காலஇடைவெளியைத்தான் என்றார்.

எல்நினோ காரணிகள்

1880களிலிருந்து பூமிமேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.4 டிகிரி பாரன்ஹீட் (0.8.டிகிரி செல்சியஸ்) இருந்தது. நாசா மற்றும் நோயா மேற்கொண்ட ஆய்வு கடந்த ஆண்டு நிலத்தில் ஏற்பட்டுவரும் மிதமான வெப்பநிலை அதிகமானதன் காரணமாக உலகின் அனைத்துப் பெருங்கடல்களும் நெருக்கடிக்குள்ளாகின என்று கூறுகிறது.

20ஆம் நூற்றாண்டிற்குப் பிறகான சராசரி வெப்பநிலையாக, உலகம் முழுவதும் நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல்களின் மேல்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.25 டிகிரி பாரன்ஹீட் (0.69 டிகிரி செல்சியஸ்) உயர்ந்திருப்பதாக NOAA தெரிவிக்கிறது. பதிவாகியுள்ள இந்த வெப்பஅளவு என்பது எல்நினோவினால் ஏற்படும் காலநிலைமாற்றம் அல்ல என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். வளிமண்டலத்தை வெப்பமயமாக்கி எல்நினோவின் பெரும்பாதிப்பாக 1998 உள்ளிட்ட கடந்த சில ஆண்டுகள் வரை காணப்பட்டது.

ஐ.நா.நடவடிக்கை

பாரீஸ் ஒப்பந்தத்தின்மூலம் உலக நாடுகளிடையே மாசுக்கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதாக ஐநா தெரிவித்துள்ளது. புவிவெப்பமாதல் 3.6 டிகிரி ஃபாரன்ஹீட் (2 டிகிரி செல்சியஸ்) குறைய வழிவகை செய்யும் வகையில் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளில் புவிவெப்பமாதலுக்கு பெரும் காரணமாகத் திகழும் நிலக்கரி உபயோகத்தை தணிக்கும் வகையில் நடவடிக்கைகள் இதன்மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது. 

நன்றியுடன் 
சிவா..

செ ய் தி  தமிழ் இந்து

Thursday, January 15, 2015

இந்தியா கொண்டாடும் விவசாயிகள் திருவிழா!

ஆர்.ஷபிமுன்னா
1
கோப்புப் படம்: ஜி.என்.ராவ்
ஜனவரி 15 எனக் குறிப்பிட்ட தேதியில் வரும் ஒரே தமிழர் பண்டிகை - பொங்கல் திருநாள். இது, தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதிக்கு சூரியனின் இடப்பெயர்ச்சியை மையமாக வைத்து அமைந்தது. இதனால், வருடந்தோறும் வரும் இந்துப் பண்டிகைகளின் தேதிகளில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும். ஆனால், சூரியன் பெயரில் கொண்டாடப்படும் பண்டிகையான பொங்கல் தேதியில் மட்டும் பெரும்பாலும் மாற்றம் இன்றி, அது சரியாக ஜனவரி 15 அன்றே வருகிறது. இதற்கு, இது, இந்தியாவில் அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது.
இது, அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பொங்கலை, வட மற்றும் மத்திய இந்தியாவில் 'மகர சங்ராந்தி' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்திக் காலண்டரின் மாக் மாதத்தின் முதல்நாளில் வருவதாலும் இதை மகர சங்ராந்தி என்றழைக்கிறார்கள். ஆனால், இந்தப் பண்டிகையில் பெரும்பாலான மாநிலங்களில் அரசு விடுமுறை கிடையாது. இதை வைத்தே மகர சங்ராந்தி அம் மாநிலங்களில் கொண்டாடப்படும் விதத்தை நாம் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.
இது, தென் மாநிலங்களில் ஓரளவுக்கு தமிழகத்தை போல் இருப்பினும், மற்ற மாநிலங்களில் சுற்றுச்சூழல், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் விளைச்சல்களைப் பொறுத்து அங்கு கொண்டாடப்படும் முறைகளிலும் நிறைய வேறுபாடு உண்டு. இதற்காகக் கூறப்படும் பெயர்களும் வேறாக இருக்கும் இந்தப் பண்டிகை நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் எப்படி எப்படி கொண்டாடப்படுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
உபி, பீகார் மற்றும் ராஜஸ்தான்
உபி, பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. இந்நாளில் தம் பாவங்கள் தீர்ந்து மோட்சம் கிடைக்கும் என அருகிலுள்ள கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் குளித்து முடிப்பதே தலையாய கடமையாகக் கருதுகிறார்கள். இதனால், மகர சங்ராந்தியின் குதூகலம் மற்றும் கொண்டாட்டங்கள் நதிக்கரைகளில்தான் பார்க்கமுடியும். இங்கு ஊஞ்சல்களை அமைத்தும் ஆடி மகிழ்கிறார்கள். குளித்த பின் தானியங்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கிவிட்டு, இனிப்புகளை செய்து சாப்பிடுகிறார்கள். இவற்றில் உடலுக்குச் சூட்டைத் தரும் வெல்லம் மற்றும் எள் தவறாமல் இடம்பெறும். இது குளிர்காலம் என்பதே இதன் முக்கியக் காரணம்.
இத்துடன் கேழ்வரகுக் கிச்சடியும் செய்து சாப்பிடுகிறார்கள். ஒரே நாளில் முடிந்துவிடும் இவர்களுடைய இந்தப் பண்டிகையில் புத்தாடைகள் அணியப்படுவது இல்லை. கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் உண்டு. அதில், அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை பூஜையில் படைக்கிறார்கள். சூரியன் தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் துவங்கும் நாள் இது. எனவே, பெரும்பாலான கும்பமேளாக்கள் இந்த நாளில்தான் தொடங்குகின்றன. குறிப்பாக இந்த நாளில் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உறவு வலுக்கும் என்றும், குடும்பப் பொறுப்பை மகன் ஏற்று நடத்தும் நாளாகவும் இது அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பண்டிகையில் செய்யப்படும் இனிப்புகளின் பெயர் சிக்கி (வேர்க்கடலை மற்றும் வெல்லம்), கஜக் (வெள்ளை எள் மற்றும் வெல்லம்), தில்கா லட்டு (வெள்ளை எள், கோவா மற்றும் வெல்லம்). பீகாரில் மட்டும் அவலுடன் தயிர் மற்றும் வெல்லம் கலந்து ஒரு பலகாரம் செய்து சாப்பிடுகிறார்கள்.
ஒரிசா மற்றும் சத்தீஸ்கர்
ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மட்டும் ஆட்டம், பாட்டம் என இதை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் என்பதால், தம் அறுவடைகளை முடித்த லாபம், ஒவ்வொரு குடும்பத்தினரின் கைகளிலும் கண்டிப்பாக இருக்கும். எனவே, இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஆண், பெண் இருபாலருமே மது அருந்தி மயங்கி இருப்பதும் பண்டிகையின் ஒரு அங்கமாகக் கருதுகிறார்கள். இந்த நாளுக்காக ஒரிசாவின் பூரி ஜெகநாத் கோயிலில் இரண்டுமுறை அலங்காரங்கள் செய்து சிறப்புப் பூஜைகள் செய்கிறார்கள். சத்தீஸ்கர் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவது உண்டு.
மகராஷ்டிரா
மகராஷ்டிராவில் இந்தப் பண்டிகையின் போது கருப்பு எள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். கருப்பு எள்ளை மராத்தியர்கள் மிகவும் புனிதமாகக் கருதுவதால், அன்றைய நாளில் சில பழமைவாதிகள் கருப்புநிற உடைகளை அணிவதையும் ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சாதாரண புத்தாடை உடுத்துவார்கள். சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கரும்பு, வெல்லம் மற்றும் எள்ளை பானையில் வைத்து பூஜை செய்வார்கள். நகரவாசிகள் மாலையில் பூஜை செய்து வெல்லம், எள்ளு மற்றும் கரும்புத் துண்டுகளை ஒரு சிறிய பானையில் போட்டு பூஜை செய்வார்கள். இதற்கு அருகிலுள்ள பெண்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் அழைத்து, அவர்களுக்கும் சிறுசிறு பானைகளில் வெல்லம், கரும்பு மற்றும் எள் ஆகியவற்றைப் போட்டுக் கொடுக்கிறார்கள். இந்த நாள் முதல் நல்ல காற்று இங்கு வீசத் தொடங்குவதால், பல்வேறு நிறங்களில் விதவிதமானப் பட்டங்களை செய்து மாலையில் பறக்கவிட்டு விளையாடும் பழக்கம் அவர்களிடம் உள்ளது.
குஜராத்
இந்த மாநிலத்திலும் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடினாலும், பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை என்றுதான் அதைக் கூற வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் நபருக்கு ஒரு பட்டம் எனக் காலை முதல் மாலை வரை பறக்க விட்டபடியே இருக்கிறார்கள். பட்டங்களுக்காகவே மகர சங்ராந்தி அன்று அகில உலக அளவில் பட்டங்கள் பறக்கவிடும் போட்டிகளை அகமதாபாத், ராஜ்கோட், பரோடா மற்றும் சூரத் ஆகிய நகரங்களில் அரசே ஏற்று நடத்திவருகிறது. ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் பார்வையாளர்களாக வரும் வெளிநாட்டவர்களும் பட்டம் விடுவதற்காகப் பெரும்பாலான எண்ணிக்கையில் பங்கேற்பது உண்டு. இந்த நாளில் விதவிதமான டிசைன்களில், பலவர்ண நிறங்களில் பறக்க விடப்படும் பட்டங்களைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அன்றைய தினம் அரசு விடுமுறை என்றாலும், புத்தாடைகள் அணிவது கிடையாது. இங்குள்ளவர்களுக்கு பலவகைகளான காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படும் 'உண்டியா' எனும் பதார்த்தத்தை பூரியுடன் சேர்த்து சாப்பிடுவதென்றால் கொள்ளைப் பிரியம். இவற்றை செய்து விற்பதற்கென்றே சாலையோர, தெருவோர திடீர் கடைகள் உருவாகி விடும்.
பஞ்சாப், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா
பஞ்சாப்பில் 'லொஹரி' என்றழைக்கிறார்கள். இந்த மாநிலத்தில் இருந்து பிரிந்த இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா, பஞ்சாபிகள் அதிகம் வாழும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இதை லொஹரி என்றே கொண்டாடுகிறார்கள். ஆனால், இது பஞ்சாபிகளின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை முன்நிறுத்தும் பண்டிகையாக இருப்பதால், அங்குள்ள அனைத்து மதத்தவர்களும் இதைக் கொண்டாடுகிறார்கள். இந்த லொஹரி 13ஆம் தேதி இரவு துவங்கி மறுநாள் வரை நீடிக்கும். குறிப்பாக 13.ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குடும்பத்தார் அனைவரும் வந்து, தீயை மூட்டி அதைச் சுற்றிலும் அமர்ந்து கொள்வார்கள். தெருவாசிகள், இப்படி பொது இடங்களில் தீமூட்டி அமர்ந்துகொண்டு கொண்டாடுவது உண்டு. இதற்கேற்றபடி இந்தக் காலங்களில் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. அப்போது பாரம்பரிய பாடல்களுடன் நடனமாடி மகிழ்கிறார்கள். இங்கும் எள் மற்றும் வெல்லம் கலந்து செய்த இனிப்பு வகைகள் பரிமாறப்படும். அந்த வருடம் ஆண் பிள்ளைகள் பிறந்த பஞ்சாபிகளின் வீடுகளில் லொஹரி சிறப்புத் திருவிழாவாக இருக்கும். இந்த நாளில் வேண்டுதல் செய்துகொள்வதும் உண்டு. எள், வெல்லம் மற்றும் பால் கலந்த இனிப்புகள் அதிகம் செய்வார்கள்.
அசாம்
இம் மாநிலத்தில் 'போஹாலி பிஹு' (உணவுப் பண்டிகை) என்ற பெயரில் அசாமிய காலண்டரின் 'மாக்' மாதத்தின் முதல் நாளாக ஜனவரி 15-ல் கொண்டாடுகிறார்கள். இதன் முதல் நாள் விசேஷம் மாலையில் உருக்கா என்ற பெயரில் தொடங்குகிறது. அந்த நாளில் சொந்தபந்தங்கள் அனைவரும் அல்லது குடும்பத்துடன் ஒரே இடத்தில் கூடி இரவு விருந்தை அசைவ உணவுடன் உண்டு மகிழ்வார்கள். இரண்டாவது நாள், விடியலில் குளித்து மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு 'மேஜி' என்றழைக்கப்படும் ஒன்றை பிரமிடுகள் வடிவில் செய்வார்கள். இதை அறுவடை செய்த நிலங்களில் அமைத்து பூஜை செய்து நாம் போகியில் எரிப்பதுபோல் எரித்து விடுவார்கள். ஆனால், இதில் அவர்கள் பழைய சாமான்கள் எதையும் போடுவதில்லை. பிறகு பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறார்கள். அன்றைய தினம், அவலில் தயிர் கலந்து ஒரு உணவுப்பண்டம் மற்றும் எள்ளில் வெல்லம் கலந்து ஒரு இனிப்பு சாப்பிடுவார்கள். சிம்பிளாக சாப்பிடுவார்கள். இந்தப் பண்டிகையில் அக்கம், பக்கம் உள்ளவர்கள் ஒருவொருக்கொருவர் அழைத்துக்கொள்வார்கள். அசாம் மாநில அரசு இரண்டு நாள் அரசு விடுமுறை அளிக்கிறது. இங்கு இப்பண்டிகைக்குப் புத்தாடைகள் அணிவது உண்டு.
ஆந்திரா
இந்தப் பண்டிகையில் முக்கியமாக முன்னிறுத்தப்படுவது பலவர்ணக் கோலங்கள். இங்கும் மகர சங்ராந்தி என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், பெரும்பாலும் அது நம் பொங்கல் திருநாளைப் போல்தான். முதல் நாள் போகி, மறுநாள் மகர சங்ராந்தி மற்றும் மூன்றாவது நாள் கன்னுமா என மூன்று நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள். போகியில் பழையனவற்றை எரித்து, மாலையில் கொலு வைக்கிறார்கள். மகர சங்ராந்தி அன்று காலையில் குளித்து பூஜை செய்து, பானையில் சூரியப் பொங்கல் வைத்து உண்டு மகிழ்கிறார்கள். இவர்களின் கன்னுமா என்பது மாட்டுப் பொங்கலாகும். முதல் இருநாள் மட்டும் அரசு விடுமுறை என்றாலும், கிராமங்களில் கன்னுமாதான் மிகவும் விசேஷம். இந்த நாளில் மாடுகளின் ரேஸ், கோழி சண்டை போன்ற கிராம விளையாட்டுக்கள் உண்டு. மகர சங்ராந்தி வரை இதற்கு முன்பாக வரும் மாதம் முழுவதும் விடியற்காலை பூம்பூம் மாட்டுடன் வருபவர்களுக்கு தானியங்களை பிச்சையாக அளிப்பார்கள்.
கர்நாடகா
மகர சங்ராந்தி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் பொங்கல் இங்கு ஒரேஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறையும் கிடைக்கும் இது விவசாயிகள் இடையே மிகவும் பிரபலம். அன்றைய தினத்தில் விவசாயிகள் குளித்துவிட்டு அறுவடை தானியங்களுடன் தங்கள் வேளாண்மைக் கருவிகளையும் வைத்து பூஜை செய்வார்கள். இந்தப் பூஜையில் வைக்கப்பட்ட இளநீர்களை எடுத்துச்சென்று அருகிலுள்ள மலைகள் மீதுஏறிநின்று வேகமாக கீழே தூக்கி வீசுவார்கள். அது விழும் தூரத்திற்கு தங்கள் கிராம எல்லைகள் விரிந்து வளரும் என்பது நம்பிக்கை. மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகளில் மட்டும் மாட்டு ரேஸ் நடக்கிறது. இதுபோல், வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான சடங்குகள் உண்டு. இதை நகரங்களில் பிராமணர்கள் மட்டும் புத்தாடை அணிந்து சற்று விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். மற்றபடி பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம் இல்லை. கோயில்களில் சிறப்புப் பூஜைகள் உண்டு. வெல்லம், கரும்பு, வேர்க்கடலை மற்றும் எள் ஆகியவற்றை ஒரு சிறிய பாக்கெட்டுகளில் ஒன்றாகப் போட்டு உற்றார், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்கிறார்கள்.
கேரளா
கேரளாவில் பொங்கல் தமிழக எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் கொண்டாடப்படுகிறது. மற்ற இடங்களின் கோயில்களில் அன்றைய தினத்தில் சிறப்பு ஆரத்திகள் எடுக்கப்படும். மற்றபடி புத்தாடை, புது உற்சாகம் மற்றும் அரசு விடுமுறை என எதுவும் கிடையாது. ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு அனுசரிக்கப்படும் தினம் மட்டும் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் விசேஷம். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றங்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் விசேஷத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் கூடி பொங்கல் வைக்கிறார்கள். பெருமளவில் தமிழர்களும் கலந்துகொள்ளும் அது மற்றொரு தினத்தில் கொண்டாடப்படும் பொங்கல் தவிர வேறு ஒன்றல்ல.

 மிக்க நன்றியுடன்
சிவா....

மேலே உள்ள இடுக்கை  இந்து  தமிழ் நாளிதழில்  பதிவிரக்கம் செய்யப்பட்டது.

Wednesday, January 14, 2015

பொங்கல் நல்வாழ்த்துக்கள்



 
மாந்தர் தம் வாழ்வில்
வெற்றி கொடி பறக்க

அவர் தம் சுற்றம் 
சிறக்க

இல்லங்கள் தோறும்
ஆனந்தம் பொங்க

கதிரவனின் கதிர்களை ப்போல்
ஒளி பொங்க

என்றும் இனிமையுடன் 
வாழ 

என் நண்பர்களுக்கும் 
என் வளையை வாசிப்பவர்களுக்கும்
என் வளர்ச்சியில் அக்கறைக்
கொண்ட அனைத்து 
நல்ல உள்ளங்களுக்கும்
என் உறவுகளுக்கும்......

எனது தைத் திரு நாள்(பொங்கல் நல்வாழ்த்துக்கள்)
வாழ்த்துக்கள்.........

மிக்க அன்புடன்
சிவா....


Tuesday, January 13, 2015

பிடித்த வழியில் படிக்கலாமே!


எளிதில் யூகிக்க முடியாதது காட்சி ரீதியான அறிவுத்திறன் என்பதைத் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறோம். அந்தத் திறன் கொண்டவர்கள் நேர நிர்வாகத்தில் பின்தங்கி இருப்பார்கள். ஆனால், அபாரமான கற்பனைத் திறன் கொண்டிருப்பார்கள். எழுதத் தொடங்கினால் எக்கச்சக்கமாக எழுத்துப் பிழைகள் ஏற்படும்.
ஆனால், அனைவரையும் அசத்தும் விதத்தில் புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பார்கள். இந்தத் திறன் கொண்டவர்களின் பலம், பலவீனம் உள்ளிட்ட பல அம்சங்களைப் பார்த்தோம். அந்த வரிசையில், ஒருவர் தன்னிடம் இருப்பது காட்சி ரீதியான அறிவுத்திறன்தானா என்பதை தீர்க்கமாகக் கண்டறிய என்ன செய்ய வேண்டும்? ஊர்ஜிதப்படுத்திய பின் அத்திறனை செழுமைப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ஆகியவற்றை விவாதிப்போமா?
சவாலே சமாளி
வெறும் கண்ணால் காண்பவற்றை அப்படியே நகல் எடுப்பது காட்சி ரீதியான அறிவுத்திறன் அல்ல. மனக்கண்ணால் பார்த்து, ஆராய்ந்து ஒரு புதிய படைப்பை உருவாக்குவதே உண்மையான திறன். அத்தகைய திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதை நீங்களே சோதித்துப் பார்க்கலாம்.
ஆடையை புதுவிதமாக வடிவமைக்க முயலுங்கள்.
உங்கள் வீட்டில் ஒரு புதிய அறையைக் கட்ட நூதனமாகக் கட்டுமானத் திட்டத்தைத் தீட்டிப் பாருங்கள்.
ஒரு வணிகப் பொருளுக்குப் புதுமையான லோகோ (logo) அமைக்க முயற்சியுங்கள்.
முழுவதுமாக ஒரு கட்டிடத்தை வடிவமைக்க முயலுங்கள்.
ஒரு ஓவியத்தை பலவிதங்களில் வர்ணிக்கப் பாருங்கள்.
இவையெல்லாம் மிகவும் கஷ்டம் என்று நீங்கள் கருதினால், பெரிதாக ஒன்றும் வேண்டாம். பயணத்துக்குத் தயாராகும்போது உங்கள் பெட்டி, படுக்கை மற்றும் இதர பொருட்களை வைக்க காலி இடத்தை முழுமையாகப் பயன்படுத்தி அத்தனை பொருள்களையும் அடுக்கிவையுங்கள்.
இவை மூலம் நீங்கள் அடிப்படையில் யார் என்பதை நீங்களே கண்டறிந்து கொள்ள முடியும். உங்களுக்குள் அசைக்க முடியாத அஸ்திவாரம் போட்டு உட்கார்ந்திருப்பவர் காட்சி ரீதியான அறிவுத்திறனாளிதான் என்றால், தாமதிக்க வேண்டாம். உங்களுக்குள் இருக்கும் அந்தப் படைப்பாளியைப் உளவியல் நிபுணர் கார்டனரின் வழிகாட்டலில் பட்டைத் தீட்டத் தொடங்குங்கள்.
பிடித்த வழியில் படி
வெள்ளை தாளில் அசைவற்று இருக்கும் கருப்பு எழுத்துகளைப் பக்கம் பக்கமாகப் படிக்கும் போது மனச் சோர்வு ஏற்படும். கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களில் படிப்படியாகச் சமன்பாடு எழுதும்போது, ஒவ்வொரு எண்ணையும் பிரித்துக் காட்ட வெவ்வேறு வண்ணப் பேனாவால் எழுதலாம். பல வண்ணங்கள் உங்களுக்கு உற்சாகமூட்டிக் கவனச் சிதறலைத் தடுக்கும்.
படித்த பாடத்தின் உட்கருத்து மனதில் நின்றாலும் முக்கியச் சொல்லாடல்கள் மறந்து போவதால் திண்டாடுகிறீர்களா? அடுத்து எழுத்துப்பிழை வருகிறதா? எத்தனை முறை படித்தாலும் தவறைத் திருத்த முடியவில்லையா?
இந்த மாதிரியான நேரங்களில், எந்தக் குறிப்பிட்ட எழுத்துகளில் தடுமாறுவீர்களோ அவற்றை மார்கர் பேனாவால் ஹைலைட் செய்து மீண்டும் மீண்டும் எழுதிப் பயிற்சி எடுங்கள். அல்லது, உங்கள் கவனத்தை நீங்களே ஈர்க்க, தவறு ஏற்படும் எழுத்துகளை அளவில் பெரிதாக எழுதிப் படியுங்கள்.
நீங்கள் அன்றாடம் செய்யும் செயல்கள், அடிக்கடி மறந்து போகும் காரியங்கள் எதுவென நினைத்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, ஐ டி கார்டு, பரிட்சை அனுமதிச் சீட்டு, புத்தகம், பேனா ஆகியவற்றை மறந்துவிடுவோம். இவற்றை வரிசையாக எடுத்துவைக்க எளிய வழி, அட்டவணையின்படி ஒரு ஃபுளோ சார்டாக வரைந்து கொள்ளுவது.
ஒவ்வொரு பெட்டியிலும் நீங்கள் செய்ய வேண்டிய செயல், அதற்குக் கீழே அம்பு குறி போட்டு அடுத்த பெட்டியில் அடுத்த செயலை எழுதுங்கள். ஆரம்ப நாட்களில் அதைப் பார்த்துப் பார்த்து ஒன்றின் பின் ஒன்றாக அடுக்கி வையுங்கள். நாளடைவில் அந்த ஃபுளோ சார்ட் அப்படியே படமாக உங்கள் மனதில் பதிந்துவிடும். அதற்குப் பின் உங்களை யாரும் ஒழுங்கற்றவர் எனச் சொல்லவே மாட்டார்கள்.
சூத்திரங்கள், கடினமான பகுதிகளைப் படிக்கும் போது மரம் போல வரைந்து படிக்கும் முறையான கருத்து வரைபடம் வரைதல் (கான்சப்ட் மேப்பிங்) பெரிதும் கை கொடுக்கும். அதாவது, முக்கியக் கருத்தைத் தலைப்பாக மேல் பாகத்திலும், அதனுடன் தொடர்புடைய கருத்துக்களைக் கிளைகளாக வரைந்து தொடர்புபடுத்தி வாசிக்கலாம்.
இதனோடு ஒட்டி வரக்கூடிய இன்னொரு முறை மூளை வரைபடம் வரைதல் (மைன்ட் மேப்பிங்). இந்த முறையில் மையக் கருத்து நடுவில் வரைய வேண்டும். அக்கருத்தின் முக்கிய அம்சங்கள் மூளையின் நரம்புகள் பிரிந்து செல்வதுபோலப் பல திசைகளில் பிரித்து வரைய வேண்டும்.
இப்படிப் படம், ஃபுளோ சார்ட், கான்சப்ட் மேப்பிங், மைன்ட் மேப்பிங் போன்ற முறைகளில் நீங்களே கைப்பட எழுதிப் படிக்கும் போது மறதி என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்கள் தனித்திறனின் மூலமே வழக்கமானப் பாடங்களை ரசித்துப் படித்து வெற்றி பெறலாம்.
எல்லாம் சரி தான், ஆனால் ஒவ்வொருவருக்கும் ஏற்றார் போலப் பாடத் திட்டத்தை, படிப்பிக்கும் முறையை மாற்ற முடியுமா? இவ்வளவு திறமை உடையவர்கள் ஏன் இன்னும் கடினமாக முயற்சி செய்து அனைவரும் கற்கும் முறையிலேயே கல்வி பயிலக்கூடாது எனும் கேள்வி எழலாம்.
அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் இந்தக் கேள்விக்கு இப்படி பதில் சொன்னார், “எல்லோரும் மேதைகள்தான். ஆனால் மீனுக்கு மரம் ஏறும் பரிட்சை வைத்துத் தேர்வு முடிவு அறிவித்தால், தான் ஒரு முட்டாள் என்று நம்பிகொண்டே தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்கும்.” அதாவது, தன் வாழ்நாள் முழுவதும் வருந்திக் கொண்டேயிருக்கும். 

ம.சுசித்ரா 

thanks   to  the hindu ( tamil)


Friday, January 09, 2015

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் 10

 

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்
ஐன்ஸ்டீனுக்கு அடுத்தபடியாக அறிவாற்றல் கொண்டவர் என புகழப்படும் இயற்பியல் அறிஞரான இவருடைய பிறந்தநாள் இன்று (ஜனவரி 8). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 இங்கிலாந்தின் ஆக்ஸ் போர்டில் பிறந்தவர். குடும்பத்தில் அனைவருமே அறிவுஜீவிகள். அப்பா மருத்துவ ஆராய்ச்சியாளர். சிறு வயதிலேயே ஆராய்ச்சித் திறன் கொண்டிருந்தார்.
 16 வயதில் நண்பர்களுடன் சேர்ந்து, மறுசுழற்சி செய்யப்பட்ட பாகங்களைக் கொண்டு கணித கோட்பாடுகளை தீர்ப்பதற்கான ஒரு கணினியை உருவாக்கினார். 1962-ல் இளங்கலைப்பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்டவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகள் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார்.
 ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கவுரவ பட்டங்களைப் பெற்றுள்ளார். ராயல் சொசைட்டியின் உறுப்பினர். அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
 அறிவியல்பூர்வமான பிரபஞ்ச தரிசனத்தின் குரலாக அறியப்படுகிறார். ஆம்யோட்ராஃபிக் லேடெரல் ஸ்கிலிராசிஸ் (Amyotrophic Lateral Sclerosis - ALS) என்ற தசை உருக்கி நோய் அவரைத் தாக்கி இருப்பது அவருடைய 21-ஆம் வயதில் கண்டறியப்பட்டது. மெல்ல மெல்ல உடலியக்கத்தையும், பேசும் திறனையும் பறிகொடுத்தார்.
 மரணம் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். ஆனாலும், சக்கர நாற்காலியில் வலம் வந்தவாறு ஆய்வுகளைத் தொடர்கிறார். கணினி பேச்சுத் தொகுப்பி மூலம் (Speech generating device) மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார்.
 இந்த நோய் அவரது உடலியக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக செயலிக்கச் செய்து வந்தாலும், ஆராய்ச்சிகள், எழுத்துப் பணிகள், பொதுவாழ்வு ஆகிய எதையுமே அவர் நிறுத்தவில்லை.
 ‘இறைவன் உலகைப் படைத்தான் என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. சுவர்க்கம், நரகம் என்பதெல்லாம் தேவதைக் கதைகளில் வரும் கற்பனைகள்தான்’ என்ற இவரது இறையியல் கோட்பாடுகள் குறித்த கருத்துகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.
 அண்டவெளித் தோற்றத்தையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து மகத்தான கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர். அண்டவியலும், குவான்டம் ஈர்ப்பும் (quantum gravity) இவரது முக்கியமான ஆய்வுத்துறைகள். கருங்குழிகளுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
 கருங்குழிகளிலிருந்து துகள்கள் வெளியேறுகின்றன என்பதைக் கண்டறிந்தார். இவ்வாறு வெளியேறும் துகள்களுக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப்பட்டது. இவரது ஏ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் மற்றும் தி யுனிவர்சல் இன் ஏ நட்ஷெல் ஆகிய இரண்டு புத்தகங்களும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
 ஐன்ஸ்டீனுக்கு அடுத்த ஆற்றல் மிக்க அறிவியலாளர் என்று போற்றப்படும் இவர், தொடர்ந்து தன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

thanks  to   THE HINDU ( TAMIL )

மாணவர்களுக்கான இணைய தளங்கள்

 
 
 
தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.
பொதுத்தளங்கள்
அனைத்துப்பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர்பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக்கின்றன .
தமிழ்
இவ்வலைப்பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம்பெறு கிறது. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.
Maths
இத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது.
Science
இத்தளத்தில் அறிவியல் பாடக்குறிப்புகள் கிடைக்கும்.
தொகுப்பு: ரா.தாமோதரன்,
தமிழாசிரியர், தஞ்சாவூர்

Monday, January 05, 2015

வாட்ஸ் அப்..

கணனியில்....



ஸ்மார்ட் போன் பயனாளிகள் மத்தியில் வாட்ஸ் அப் மேசேஜிங் சேவை பிரலமாகவே அது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

அது வாட்ஸ் அப்பை டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்த முடியுமா? என்பதுதான். இந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில் வாட்ஸ் அப் , டெஸ்க்டாப்பில் செயல்படக்கூடிய வடிவத்தை உருவாக்கி வருவதாகச் செய்தி வெளியாகி உள்ளது. வாட்ஸ் அப் இது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் கூறாவிட்டாலும் கூட, வாட்ஸ் அப் அப்டேட்டில் , இதற்கான அறிகுறி இருப்பதாக ஆண்ட்ராய்டு வேர்ல்டு இணையதளம் தெரிவித்துள்ளது.

அந்த அப்டேட்டில் வாட்ஸ் அப் வெப் எனும் தொடர் வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போட்டியாளர்களான வைபர், டெலிகிராம் ,வீசாட் மற்றும் லைன் ஆகியவை ஏற்கனவே டெஸ்க்டாப்பில் பயன்படுத்தக்கூடிய இணைய வடிவத்தையும் பெற்றிருப்பதால் வாட்ஸ் அப்பும் இந்த வசதியை அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நன்றி

ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசு துவக்கியது

மதன்மோகன் மாளவியா பெயரில் புதிய திட்டம்:           

 

 பள்ளி, கல்லூரிகளுக்கு தேவைப்படும் திறன் மிகுந்த ஆசிரியர்களை உருவாக்க, மதன் மோகன் மாளவியா தேசிய ஆசிரியர்கள், கற்பித்தல் திட்டத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது. இத்திட்டத்திற்கு, 12வது ஐந்தாண்டு திட்டத்தில், 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
  • ஆசிரியர்கள்: பள்ளி, கல்லூரி வகுப்பறையில் அவர்கள் பணியாற்றும் சூழல்; பணி மேம்பாடு ஆகியவற்றை, இத்திட்டம் கண்காணிக்கும்.
  • பாடத்திட்டத்தை உருவாக்குதல்: மதிப்பிடுதல், திறனாய்வு முறைகளை, வரையறுத்தல்; ஆசிரியர் பணி குறித்த ஆய்வு உள்ளிட்டவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
  • கல்லூரி, பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டறிந்து, திறன் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கி அளித்தல், பணியில் இருக்கும் ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி வழங்குதல் உள்ளிட்டவையும் இத்திட்டத்தில் அடங்கும். இத்திட்டத்திற்காக, 30 மத்திய பல்கலைகளில், பள்ளி கல்விக்கான மையங்கள்; பாடத்திட்டம், ஆசிரியர் பணி தொடர்பான, 50 மையங்கள்; ஆசிரியர் கல்விக்கான, இரண்டு பல்கலை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
  •  
  • நன்றி
  • பாடசாலை....
  •  

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு: தமிழக அரசு புதிய உத்தரவு

           அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு கிடைப்பதில் புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

             ஆண்டு ஊதிய உயர்வு பெறத் தகுதியான நாளுக்கு முந்தைய தினம் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு அந்த ஊதிய உயர்வை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

             தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியில் இணைந்த நாளைக் கணக்கிட்டு, ஆண்டு ஊதிய உயர்வு 3 சதவீதம் அளவுக்கு (அடிப்படை ஊதியம்- தர ஊதியம் ஆகியவற்றை கணக்கிட்டு) அளிக்கப்படுகிறது. ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 என நான்கு காலாண்டுகளாகப் பிரிக்கப்பட்டு இந்த ஊதிய உயர்வு கொடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் தங்களது பணியை டிசம்பர் 31, மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 ஆகிய தேதிகளில் ஓய்வு பெற்றால் அவர்களுக்கான அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வு அளிக்கப்படாமல் இருந்தது. அவர்கள் ஊதிய உயர்வை பெறாமலேயே ஓய்வு பெற்று வந்தனர்.

இந்த உத்தரவை மாற்றி ஊதிய உயர்வு பெறத் தகுதியான நாளுக்கு முந்தைய நாள் ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்களுக்கு அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வை அளிக்க வேண்டுமென தலைமைச் செயலக சங்கம் போன்ற ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

சம்பள குறைதீர் பிரிவிடம் மனு: ஆண்டு ஊதிய உயர்வு விவகாரம் தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சம்பள குறைதீர் பிரிவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த குறைதீர் பிரிவு, ஊதிய உயர்வு பெறத் தகுதியான நாளுக்கு முந்தைய தினம் ஓய்வு பெற்றாலும் அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வை அளிக்க வேண்டும் என அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக நிதித் துறை செயலாளர் க.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவு வெளியான நாளில் இருந்து (டிச.31) அது நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு மூலமாக, ஆயிரக்கணக்கான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பயன் கிடைக்கும் எனவும், அவர்கள் பெறும் ஓய்வூதியத்தில் கூடுதலான தொகையைப் பெற வாய்ப்பு இருப்பதாகவும் நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி
பாடசாலை....