Tuesday, April 29, 2014

தமிழரின் பெயர்கள்

 சங்க காலத்துக்குப் பின்பு, தமிழர்கள் வடமொழிப் பெயர்களைச் சூட்டிக்கொள்வது வழக்கமாயிற்று. பங்கஜம்,  லக்ஷ்மி,  ஹேமா,  ஷண்முகம், ராஜகோபாலன்,  ஹரிஹரன் என வட எழுத்துள்ள பெயர்களைக்கூட வைத்துக்கொண்டனர்.

 நவநீதம் என்னும் பெயர் கொண்ட ஒருவரை,  "வாய்யா,  நவநீதம்" என்று அழைத்தால்,  வருவார்; "வாய்யா,  வெண்ணெய்" என்போமானால், பயங்கர கோபத்தோடு நம்மைத் திட்டக்கூடும்; ஆனால் இரண்டும் ஒன்று தான். நவநீதக் கிருஷ்ணன் = வெண்ணெய் (உண்ணும்) கிருஷ்ணன். "நந்த குமாரா,  நவநீதச் சோரா" என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள்; நவநீதச் சோரா என்பதற்கு என்ன பொருள்?  "வெண்ணெய்த் திருடனே" என்பது.



 ஒரு பெண்ணை அவளது பெயரைச் சொல்லி, “சியாமளா" என விளிக்கலாம்; பிரச்சினை எழாது; "கருப்பி" என்று கூப்பிட்டால்?  வெகுண்டு எழுவாள். சியாமளா,  வடசொல்; கருப்பி,  தமிழ். நீல மேகச் சியாமள வண்ணன் என்று கண்ணனைச் சொல்வார்கள்;  கருப்பு நிறம் உடையவன் என்பது அர்த்தம். அவனைச் சிலப்பதிகாரம், ‘கரியவன்’   என்கிறது: "கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே?" ( ஆய்ச்சியர் குரவை)

 ராமனும் கருப்பன்தான். விசுவாமித்திரர் தசரதனிடம் சென்று,   தம் வேள்வியைக் காப்பதற்கு,  'இராமனை என்னுடன் அனுப்பு' என்று சொன்னார்:

  ".....  நின் செல்வர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி" (கம்ப ராமாயணம்). உன் புதல்வர்கள் நால்வருள்ளும் கருப்பாக இருப்பவனைத் தா என்பது பொருள்.



 அந்தக் கரு நிறக் கடவுள்களை பக்தி சிரத்தையோடு தொழுபவர்களுள்  பலர்,  கருப்பாக இருக்கிற மனிதர்களைத் தாழ்வாகக் கருதுகிறார்களே!  இது முரண்பாடு என்பதை அவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும்.

 மறைமலையடிகள் தனித் தமிழைப் பரப்பியபோது,  தமிழ் உணர்வாளர்கள் தத்தம் பெயர்களை இளவழகன்,  மணிமொழி,  பூங்குழலி,  தாமரைக்கண்ணி, நாவுக்கரசு என்றெல்லாம் மாற்றிக்கொண்டனர். பெரியார் கட்சிக்காரர்களும் நெடுஞ்செழியன்,  சிற்றரசு,  வெற்றிச்செல்வி,  அன்பழகன், வில்லாளன்  என்று பெயர் சூட்டிக்கொண்டார்கள்; பொதுவுடைமை ஜீவானந்தம்கூட,  சுயமரியாதை இயக்கத்தில் இணைந்திருந்தபோது,  "உயிரின்பன்" ஆனார்.

 வரவரத் தமிழர்களுக்கு மொழிப் பற்று குன்றியமையால்,  தமிழ்ப் பெயர்கள் அருகி,    மீண்டும் வடமொழிப் பெயர்களே கோலோச்சத் தொடங்கின. அண்மைக் காலத்தில் திருமாவளவன்,  தொல்காப்பியன், தென்னவன் முதலான தமிழ்ப் பெயர்களை விடுதலைச் சிறுத்தைகள்  வைத்துக் கொண்டார்கள்.

  மற்றவற்களும்  மாற வேண்டும்  பெரும்பாலரின் போக்கு மாறவில்லை.

நன்றி 
அன்புன் 
சிவா...


No comments: