Saturday, May 27, 2017

ஆன்ராய்டு போனில் வளைதளம் உருவாக்குதல்...

ஸ்மார்ட்போன் வழியாக இலவசமாக ஒரு வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி.?

ஸ்மார்ட்போன் வழியாக இலவசமாக ஒரு வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி.?

உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ஒரு முழுமையான வலைத்தளத்தை உருவாக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா.? ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு என இரண்டு இயங்குதளங்களுக்குமே ஒரு குறிப்பிட்ட ஆப் பயன்படுத்தி15 நிமிடங்களுக்கும் குறுகிய நேர இடைவெளியில் இதை செய்ய முடியும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா.?
அக்ட்மின் வெப்சைட் பில்டர் ஆப் (Akmin Website Builder app) ஆனது உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கக்கூடிய ஒரு இலவசப் பயன்பாடாகும். நீங்கள் இந்த பயன்பாட்டைப் கொண்டு ஒரு தொழில்முறை தேடு வலைத்தளத்தை உருவாக்க முடியும். இந்த பயன்பாடானது, நீங்கள் உருவாக்கிய இணையதளத்திற்கு வடிவங்கள், புகைப்பட ஆல்பம், ஷாப்பிங் கார்ட் போன்றவை போன்ற பயனுள்ள அம்சங்களைச் சேர்ப்பதற்கான சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது.

குறிப்பாக, இந்த தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சகாப்தத்தில், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஹோபோன் அல்லது ஐபோன் பயன்படுத்தி ஒரு முழுமையான செயல்பாட்டு வலைத்தளம் உருவாக்குவது என்பது சாத்தியமாகவே உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த இலவச பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து வலைத்தளத்தை உருவாக்கம் செய்ய வேண்டியது மட்டும் தான்.

இந்த அக்மின் வலைத்தள பில்டர் பயன்பாட்டைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்கும் வலைத்தளம் எந்த சாதனத்திலும் நன்றாக வேலை செய்யும், அதாவது இது ஒரு மடிக்கணினி, டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போன் என எதிலும் சிறப்பாக வேலை செய்யும்.

அக்மின் வலைத்தள பில்டர் பயன்பாடானது மிகவும் எளிமையான ஒரு ஆப் ஆகும். இதன் மூலம் சிறிய வியாபார உரிமையாளர்கள் தங்கள் வியாபாரத்திற்கான ஒரு வலைத்தளத்தை அனைத்து பயனுள்ள அம்சங்களுடனும் உருவாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்க முடியும்.

மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த தளத்தில் ஒரு ஷாப்பிங் கார்ட் வண்டியைச் சேர்ப்பதும் சாத்தியம் தான். இந்த அம்சம் குறிப்பாக சிறிய அல்லது வீட்டு வணிக உரிமையாளர்களுக்கு எந்த இணைய வடிவமைப்பாளர் அல்லது ஒரு நிறுவனத்தின் உதவும் இல்லாமல் சொந்த வலைத்தளம் கிடைக்கும் வாய்ப்பு அதிகப்படுத்தும்.

இந்த பயன்பாட்டின் சிறப்பம்சமாக எந்தவொரு குறியீடும் இல்லாமல் ஒரு வலைத்தளம் உருவாக்க முடியும் என்பது தான். நீங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும், டெம்ப்ளேட்டைத் தேர்ந்தெடுக்கவும், அதேபோல தனிப்பயனாக்கவும், வலைப்பக்கத்திற்கான உள்ளடக்கத்தையும் படங்களையும் சேர்க்கலாம், பின்னர் நிமிடங்களில் உங்கள் வலைத்தளத்தை வெளியிடவும்.

இந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஐட்யூன்ஸ் ஸ்டோர் மூலம் முறையே உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் இதைwww.akmin.net என்ற வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்குவதன் மூலம் நீங்கள் உங்கள் பிசி அல்லது லேப்டாப்பில் இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்

நன்றி.....
Dr.Sathish Ph.D at 14:59

Sunday, May 14, 2017

ஆல மரம்....கதை. சொல்லுது...

"ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு.

ரொம்ப தூரத்தில இருந்து பறந்து வந்த குருவி ஒண்ணு, முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து, 'ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிச்சி கிடட்டுமா?' ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு.

ஆனா அந்த மரம், 'அதெல்லாம் முடியாது'னு கண்டிஷனா சொல்லிருச்சு.

சரினு அடுத்த மரத்துக்கிட்டே போச்சு அந்தக்குருவி. 'இடம்தானே.... தாராளமா இருந்துக்கோ!'னு
பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம்.

ஒரே மாசம்தான்...... ஆத்துல வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது.அந்த வெள்ளத்த
தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு
போக ஆரம்பிச்சது. ஆனா,குருவிக்கு இடம் கொடுத்த ரெண்டாவது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது.

முதல் ஆலமரத்தைப்பார்த்த குருவி,'அடுத்தவங்களுக்கு
உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார்'னு
எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது.

ஆனா,வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப்போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா.....

'என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு
எனக்குத்தெரியும்..... நீயும் என்னோட சேர்ந்து சாக
வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்... ஏ குருவியே!நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட
சந்தோஷமா நல்லா இருக்கணும்!'

இப்படித்தான் உண்மையான தியாகிகள் வெளி
உலகத்துக்குத் தங்களை காட்டிக்கறது இல்லை!"

நமக்காக தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு;
நம் மகிழ்ச்சிக்காக நம்மையே தியாகம் செய்யும்
   உறவுகளும் உண்டு!

மகன் மகிழ்ச்சிக்காக தனிக்குடித்தனம் அனுப்பும்
பெற்றோர்களும்;
மகள் மகிழ்ச்சியாக வாழ கடன்பட்டும்கூட
சீர்செனத்தி செய்யும் பெற்றோர்களும்,
சகோதரர்களும்கூட தியாகிகள் தான்!

சிலசமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது போலத்
தோன்றினாலும் அது நம் நன்மைக்காகவே இருக்கும்!
ஆனால் கண்டிப்பாகத் தீமைக்காக இருக்காது!!!!

Tuesday, May 09, 2017

பச்சை தண்ணி பத்மநாபன்...வாழ்க்கை

நேர்மைக்கு_என்றுமே_அழிவில்லை!        

பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன்.

ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர், தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார்.

“இறைவா… என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன். நீ தான் அவர்களை காக்கவேண்டும்” என்று பிரார்த்தித்தவர் பிள்ளைகளிடம் “நான் எப்படி வாழ்ந்தேன் என்று உங்களுக்கு தெரியும்.

நீங்களும் எந்த சூழலிலும் நீதி தவறாமல் தேவைகளை சுருக்கிக்கொண்டு நேர்மையாய் வாழ்ந்து என் பெயரைக் காப்பாற்றவேண்டும்…” என்று நா தழு தழுக்க சொன்னார்.

இரண்டு மகன்களும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருக்க, கடைசி மகள் ப்ரியா மட்டும் கோபத்தில் வெடித்தாள். ப்ரியா கல்லூரி முதலாமாண்டு படித்துவருகிறாள். அவள் விரும்பிய கல்லூரியில் கூட அவளை சேர்க்க வழியின்றி ஏதோ அரசு உதவி பெறும் கல்லூரியில் தான் பத்மநாபனால் சேர்க்க முடிந்தது. அதுவே அவளுக்கு கோபம்.

“அப்பா…. உங்க பேங்க் அக்கவுண்ட்டில் நையா பைசா கூட இல்லாமல் நீங்கள் எங்களைவிட்டு போவது எங்கள் துரதிர்ஷ்டம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. உங்கள் அறிவுரைகளையும் கேட்க முடியாது. ஊழல் பேர்வழிகள், ஊழல் பெருச்சாளிகள என்று நீங்கள் கூறியவர்கள் எல்லாரும் அவர்கள் குழந்தைகளுக்கு பல தலைமுறைகள் சொத்து சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.  ஆனால் நாம் இருக்கும் இந்த வீடு கூட வாடகை வீடு தான். ஸாரி…. நேர்மையாயிருந்து நாங்கள் பட்டதெல்லாம், உங்களை என்னால் பின்பற்றமுடியாது. நாங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொள்கிறோம்….” என்றாள்.

அவளை உற்றுநோக்கியபடி பரிதாபமாக பார்த்த அந்த ஜீவனின் உயிர் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்தது.

காலங்கள் உருண்டன.

கல்லூரி படிப்பை எப்படியோ தட்டுத் தடுமாறி முடித்த ப்ரியா ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனதப் பணிக்கு அப்ளை செய்து நேர்முகத் தேர்வுக்கு சென்றாள். அந்த பணிக்கு தேவையான தகுதியுடைய நபரை ஏற்கனவே பேனல் உறுப்பினர்கள் தேர்தெடுத்துவிட்டாலும், ஒரு ஃபார்மாலிட்டிக்காக இண்டர்வ்யூவை நடத்திக்கொண்டிருந்தனர். பேனல் மெம்பர்களுக்கு மத்தியில் அந்நிறுவனத்தின் எம்.டி.யும் அமர்ந்திருந்தார்.

ப்ரியாவின் முறை வந்ததும் உள்ளே அழைக்கப்பட்டாள்.

அவளது ரெஸ்யூமை பார்த்த பேனல் மெம்பர் ஒருவர் “உன் அப்பா மிஸ்டர்.பத்மநாபன் பொதுப் பணித்துறையிலிருந்து ஒய்வு பெற்றவரா?” என்றார்.

“ஆமாம்… சார்…”

உடனே எம்.டி. நிமிர்ந்து உட்கார்ந்தார். ப்ரியாவை நோக்கி கேள்வியை வீசினார் ….. “உங்கப்பாவுக்கு ‘பச்சைத் தண்ணி பத்மநாபன்’ங்குற பேர் உண்டா?”

“ஆமாம்… சார்…” என்றாள் சற்று நெளிந்தபடி.

“ஒ… நீங்க அவரோட டாட்டரா? இந்தக் காலத்துல அவரை மாதிரி மனுஷங்களை பார்க்க முடியாதும்மா… இந்த கம்பெனி இன்னைக்கு இந்தளவு வளர்ந்திருக்குதுன்னா, அதுக்கு அவரும் ஒரு காரணம். கடலூர்ல இருக்கும்போது நான் 15 வருஷத்துக்கு முன்ன கவர்மென்ட் காண்ட்ராக்ட் ஒன்னுக்கு டெண்டர் அப்ளை பண்ணியிருந்தேன். என்னைவிட அதிகமா கோட் பண்ணின நிறைய பேர் எவ்வளவோ லஞ்சம் தர்றதா சொன்னாலும் உங்கப்பா அதுக்கெல்லாம் ஆசைப்படாம, அவங்க மிரட்டலுக்கெல்லாம் மசியாம அந்த காண்ட்ராக்ட்டை முறைப்படி எனக்கு ஒதுக்கினார். அன்னைக்கு மட்டும் அவர் அந்த காண்ட்ராக்ட்டை எனக்கு ஒதுக்கலேன்னா இன்னைக்கு நான் இல்லை. இந்த கம்பெனியும் இல்லை. ஏன்னா… என் சொத்தையெல்லாம் அடமானம் வெச்சு கம்பெனி ஆரம்பிச்ச நேரம் அது. அந்த ஒரு காண்ட்ராக்ட் மூலமாத் தான் எனக்கு நல்ல பேர் கிடைச்சி, இந்த துறையில ஒரு பெரிய என்ட்ரி கிடைச்சது. ஆனால் அதுக்கு பிறகு உங்கப்பா வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆயி போய்ட்டார்….”

“அவருக்கு என்னோட நன்றிக்கடனை செலுத்த, இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்காதும்மா… யூ ஆர் செலக்டட். நாளைக்கே நீ டூட்டியில் ஜாய்ன் பண்ணிக்கலாம்….” என்றார்.

அந்நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவில் தலைமை அதிகாரியாக ப்ரியாவுக்கு வேலை கிடைத்தது.  அலுவலகம் வந்து செல்ல ஒரு டூ-வீலர் வாங்கித் தந்தார்கள். பி.எப்., இன்சென்டிவ், ரெண்ட் அலவன்ஸ் என பலப் பல சலுகைகள். கனவிலும் ப்ரியா எதிர்பார்க்காத ஒரு வேலை.

இரண்டு ஆண்டுகள் சென்றன… ப்ரியா பணியிடத்தில் நல்ல பெயர் எடுத்தாள்.

இதற்கிடையே அவர்கள் சிங்கப்பூர் கிளை அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர் வேலையை ராஜினாமா செய்துவிட, அங்கு தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆள் தேவைப்பட்டார். BOARD OF DIRECTORS ஒன்று கூடி விவாதித்து ப்ரியாவையே சிங்கப்பூர் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பில் நியமிப்பது என முடிவானது.

மாதம் பத்து லட்ச ரூபாய் சம்பளம். கம்பெனி சார்பாக ஒரு கார், அப்பார்ட்மென்ட் என அத்தனை வசதிகளும் அவளுக்கு கிடைத்தன. கடுமையாக உழைத்து சிங்கபூர் நிறுவனத்தின் லாபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தாள் ப்ரியா.

அவளை லோக்கல் பிஸ்னஸ் பத்திரிக்கை ஒன்று பேட்டி கண்டது.

“உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்?”

கேள்வி கேட்க்கப்பட்டதுமே ப்ரியா உடைந்து அழலானாள்.

“இது எல்லாம் என் அப்பா எனக்கு போட்ட பிச்சை. அவர் மறைந்த பிறகு தான் நான் உணர்ந்தேன்… பொருளாதார ரீதியாக அவர் ஏழையாக மறைந்தாலும் ஒழுக்கத்திலும், நேர்மையிலும் நாணயத்திலும் அவர் கோடீஸ்வரராக மறைந்தார்….”

“அதுக்கு ஏன் இப்போ இவ்வளவு நாள் கழிச்சு அழுறீங்க?”

“என் அப்பா இறக்கும் தருவாயில் அவரது நேர்மைக்காக அவரை நான் அவமதித்தேன். என் அப்பாவின் ஆன்மா என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன். இன்று நானிருக்கும் நிலைக்கு வர நான் எதுவும் செய்யவில்லை. அவர் கஷ்டப்பட்டு அல்லும் பகலும் பலவித தியாகங்களுக்கு இடையே போட்ட பாதையில் நான் சுலபமாக நடந்து வந்துவிட்டேன்.”

நீங்கள் எப்படி பத்மநாபனை போலவா?

உண்மையான நல்லபெயரை சம்பாதிப்பது என்பது மிக மிகக் கடினம். அதன் வெகுமதி உடனே வருவதில்லை, ஆனால் அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ
அந்தளவு நீடித்து நிலைத்து நிற்கும்.

நேர்மை, நாணயம், ஒழுக்கம்,
சுய-கட்டுப்பாடு, தீயவற்றுக்கு அஞ்சுவது, கடவுளின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை – இவையெல்லாம் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன.
கோடீஸ்வரனாகவும் ஆக்குகின்றன.
வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அல்ல.

உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை விட்டுச் செல்லுங்கள். இதைத் தான் அக்காலங்களில் சொன்னார்கள்…

*“பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதைவிட      புண்ணியத்தை சேர்க்கவேண்டும்”* என்று.

*  நிறைய உண்மை கலந்த கதை இது!   *   நேர்மையாக இருப்பதால் கண்ணீர் தான்   பரிசு என்று மனம் கலங்காதீர்கள்!
*உங்கள் நேர்மை தான் உங்கள் குடும்பத்தை    நிஜமாகக் காப்பாற்றும்*   
*நமது நாட்டையும் நேர்மைதான் காப்பாற்ற   வேண்டும்.
ஆகவே   மகிழ்ச்சியாக, நேர்மையாக    சமுதாயப்பணியாற்றுவோம்.

நன்றி...

Sunday, May 07, 2017

அழகு.. கவிதை

அழகு
@@@
இறைவன் படைப்பில்
அதிசயம் நீ..
கவலையை களையும்
களைக்கொல்லி நீ
உறவின் அச்சயபாத்திரம்
அப்பாக்களின் தேவதை
அம்மாக்களின் மாமியார்
உன் பாவடையால்
பட்டு பூச்சிகள்
மோட்சம் பெற்றன
உன் சிரிப்பை
பார்க்க தவமிருக்கும்
வண்ணத்து பூச்சிகள்
உன் நடையை
பார்த்து பழகின
மயில்...புலிகள்.

₹₹₹₹₹₹₹₹₹₹
நட்புடன் ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்

₹₹₹₹₹₹₹₹%%


Saturday, May 06, 2017

அரசு பள்ளி ஆசிரியர்....

அரசுப்பள்ளி ஆசிரியரின் அருமை....

கண்டிக்கும் அன்னையாக இருப்பேன். ஆனால் உன் கண்கலங்கினால் அதை துடைக்கும் உன் கரமாக இருப்பேன்.

தவறு செய்யும் போது அதை தண்டிக்கும் தந்தையாக இருப்பேன்.

தூக்கத்திலும் உன்னை தண்டித்துவிட்டோமே என்று கலங்கும் மனதுடனே விழித்திருப்பேன்.

கற்றுக்கொள்ளவில்லையே என்று கத்திடுவேன்.

கஷ்டபடுத்திவிட்டேனா என்று உன்னை அழைத்து கொஞ்சிடுவேன்.

வீட்டுப்பாடம் செய்யவில்லையா எனில் எரிந்துவிழுவேன்.

குழந்தைக்கு வீட்டில் என்ன குறையோ என எண்ணிப்பார்ப்பேன்.

அதிகாரிகள் வரும்போது உன்னை மறைக்க பார்ப்பேன்.

நான் மறைத்தாலும் மறைக்க முடியா சூரியனாய் நீ எழும் போது எனக்குள் நகைப்பேன்.

அளவுகோலால் உனை அடிப்பேந். அந்த வலியால் நீ அழதாலும் அடுத்த நொடி எனை நோக்கி அன்போடு வரும் போது உன் வலியை நான் சுமப்பேன்.

குழுவில் அமராமல் உன் குசும்பை காட்டும்போது என்னை அறியாமல் என் வேதனையை மறந்து சிரிப்பேன்.

நாளைய வீட்டுப்பாடத்தை தரும்போது நன்றாக அதை குறித்துக்கொண்டு மறுநாள் நீ குறித்த குறிப்பேடு கூட இல்லாமல் வந்தாலும் அதற்கு நீ சொல்லும் காரணத்தை இரசிக்கும் இரசிகனாக இருப்பேன்.

என் வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு நீ சென்ற பிறகு என்னை கடக்கும் போதெல்லாம் என்னை பார்க்க மாட்டாயா என்று தவிக்கும் அப்பாவி ஆசிரியராக நான் இருப்பேன்....

அணைத்தாலும் அடித்தாலும் என்னை ஹீரோவாக பார்க்கும் என் குழந்தையாக நீ இருப்பாய்.

இதுதான் நம் அரசு பள்ளி.