Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, October 12, 2021

சேலத்தின் அடையாளம் ....

Dedicated to Salem Citizens by சுஜாதா

என்னுடய டயரியின் இன்றைய பக்கங்கள்.
பேலஸ் தியேட்டர் சேலம்
ஒரு சமயத்தில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான திரையரங்குகளைக் கொண்ட நகரம் என்ற சிறப்பினை பெற்ற நகரம் சேலம். அந்த திரையரங்களில் பேலஸ் ஒரு முக்கியமான திரையரங்கமாக  விளங்கியது.

பேலஸ் தியேட்டர் மதுரை தங்கம் போல ஆசியாவிலேயே அதிகம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவு வசதி கொண்டது அல்ல. சென்னையில் அமைந்திருந்த சபையர், ப்ளூ டைமண்ட், எமரால்ட் போன்ற பிரமாண்டமான நவீன கொட்டகையும் அல்ல. என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த திரையரங்கு.

சென்னையில் இருந்து குடி பெயர்ந்து (1960 ) சேலம் வந்தவுடன் அப்பா சேலம்-ஈரோடு மின்சார வினியோக கம்பெனியில் சேர்ந்ததும் சேலம் சுப்பராயன் தெருவில் ஒரு லைன் வீட்டில் குடியேறியதும் என் சேலம் வாசத்தின் ஆரம்பம். அதுதான் சினிமா என்னும் ஆசையை எனக்குள் அறிமுகப்படுத்தியதும் , அதை வளர்த்ததும் , அது ஆழமாய் வேரூன்றி இன்றுவரை நிலை பெறச்செய்ததும் அங்குதான்.

நாங்கள் குடி போன வீட்டுக்கு இடது புறத்தில் சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன். அது சுப்பராயன் தெருவை ஆரம்பித்து வைப்பது போல அமைந்திருக்கும். அந்த ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்து பார்த்தால் அந்த சாலையின் முடிவில் பேலஸ் தியேட்டர் கம்பீரமாக இருக்கும்.
இடைப்பட்ட தெருதான் டாக்டர் சுப்பராயன் தெரு. அதன் மத்தியில்தான் எங்கள் வீடு அமைந்து இருந்தது. நான் படித்த பள்ளி 
(G. H. M. H. S) கொஞ்ச தூரம். 
(அது சென்ட்ரல் தியேட்டர் பக்கத்தில். இப்படித்தான் நான் அறிந்த சேலத்தை கொட்டகைகளோடு சேர்த்துத்தான் என்னால் சொல்ல முடியும்) அது எனக்கு வருத்தத்தினை தரவில்லை. ஏனென்றால் பேலஸ் தியேட்டர் பக்கத்திலே என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை இருந்ததுதான் காரணம்.

பேலஸ் திரையரங்கின் கம்பீரத்தை இரட்டித்துக் காட்டியது அதற்கு முன் அமைந்திருந்த திறந்த வெளியும் அதில் அமையப்பெற்றிருந்த புல்வெளி மேடையும்தான். எனக்குத் தெரிய அங்கு அமர்ந்து காற்று வாங்கியவாறு சினிமா பார்க்க வருபவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இருபது முப்பது பேர் இருக்கும். இவர்களைத் தவிர டிக்கெட் வாங்கிவிட்டு மனைவிக்காக காத்திருப்பவர்கள் கொஞ்சம். ஐந்து ரூபா டிக்கெட் எட்டு ரூபாய் என்று விற்கும் ஆண் பெண் கறுப்பு மார்க்கெட் வியாபாரிகள் இப்படி ஐம்பது பேர் தாராளமாக நடமாடும் அளவுக்கு பெரிய முகப்பை உடையதாக இருந்தது பேலஸ் தியேட்டர்.

பெண்களுகென்று நாற்பது பைசா , தொண்ணூறு பைசா கவுண்டர் கூண்டுகளும், அதே வகுப்புக்கு ஆண்களுக்கு கொட்டகைக்கு வெளியே கூண்டுகளும் இருக்கும். அதற்கு அடுத்த வகுப்பு  ₹1.30 இரு பாலாருக்கும் பொது வரிசை. அதற்கு மேல் 1.70 பாக்ஸ் ₹3 இவை கொட்டகையின் உள்ளே மாடிக்கு போகும் படியின் கீழ் ஒரு கவுன்ட்டர். இங்கு டிக்கெட் வாங்கிவிட்டு அமர இருக்கைகள் இருக்கும். இவர்கள் கொட்டகையில் நுழையும் வாயிலில் பார்வையாக பன்றி மலை சுவாமிகள் படமும் அதன், அருகே இருந்த கடிகாரமும் இன்னும் நினைவில் இருக்கின்றது. கொட்டகையின் பின் புறம் ஒரு தோட்டம். அதில் கத்திரி , வெண்டை கீரை போன்றவை பயிரிடப்படும். பெரிய கிணறு, அதில் நீர் இரைக்க ஒரு பம்ப் செட்.
மிகவும் பசுமையாக இருக்கும் அந்த நிலத்தை கவுண்டர் என்பவர் குத்தகைக்கு எடுத்து இருந்தார். அவர் எங்களுக்குத் தெரிந்தவர். அதனால் முதல் நாள் டிக்கெட் வாங்க அவர் செல்வாக்கு எங்களுக்கு பயன் பட்டது.

கடைசி வகுப்புக்கே அமர சேர் வசதி இருந்த முதல் கொட்டகை பேலஸ். மேல் வகுப்புகளுக்கு குஷன் சேர். பாக்ஸ் வகுப்புக்கு தனித்தனியான குஷன் சீட். 
நல்ல காற்று வசதி. மாலைக்காட்சிகளின் போது கதவுகளைத் திறந்து வைப்பார்கள். இயற்கை காற்றும் வரும். இந்த அருமையான சூழலில் எவ்வளவு பாடாவதி படமும் நன்றாகவே இருக்கும். பேலசுக்கு அருகே வேறு கொட்டக்கைகள் கிடையாது. அதனால் இங்கு படம் பார்க்க வருபவர்கள் வேறு படத்துக்குப் போய் டிக்கெட் கிடைக்காமல் வருபவர்களாக இருக்க மாட்டார்கள். கமிட்டட் ஆடியன்ஸ் வகையைச் சேர்ந்தவர்கள். கொட்டகைக்கு வெளியே சைக்கிள் ஸ்டாண்டு. குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் சைக்கிள் ஸ்டாண்டினை பயன் படுத்துபவர்களுக்கு உண்டு. அதனால் க்யூவில் நிற்காமல் டிக்கெட் வாங்க சைக்கிளில் வருபவர்களும் உண்டு.

கொட்டகையின் அருகே கோயம்பத்தூர் லாட்ஜ் , சிவ சக்தி வினாயகா, போன்ற ஹோட்டல்களும் சற்று காலாற நடந்தால் கிருஷ்ணா பவனும் உண்டு. சினிமா பார்த்துவிட்டு டிபன் சாப்பிடுவது சுகமான அனுபவம். ஹோட்டலில் டேபிள் கிடைக்காது என்பதால் சிலர் சினிமாவில் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளைத்  தவிர்த்துவிட்டு ஹோட்டல்களுக்கு விரைபவர்கள் உண்டு.

மற்றொரு திரையரங்கமான.  நியூ சினிமாவும் பேலஸ் தியேட்டரின் உரிமையாளரான பொம்மண்ண செட்டியாருடையதே. சில படங்கள் ஒரே சமயத்தில் இவ்விரண்டு தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு   படச்சுருள் இரண்டு கொட்டகைகளுக்கும் ஆட்டோவில் பயணித்தது ஆச்சரியாமான விஷயமாக  இருந்தது. பி.ஆர்.சேகர் என்னும் ரஞ்சி கிரிக்கெட் பிளேயர் இவர் பேலஸ் செட்டியாரின் மகன். அவர் ரஞ்சி விளையாடியதை விட பேலஸ் கொட்டகை இவருடையது என்பது எங்களுக்கு அவர் மீது பொறாமை கொள்ளவைத்த விஷயம்.
செட்டியாரை நாங்கள் பார்த்தது இல்லை. ஆனால் பேலஸ் தியேட்டர் மேனேஜரை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. 1980 வரை வெள்ளை ஜிப்பா அணிந்து, அம்மைத் தழும்போடு கூடிய முகத்தோடு எப்போதுமே ஒரு சிடுசிடுத்த முகத்தோடு தியேட்டர் வாசலில் கூட்டத்தை பார்வையிடும் மனிதராக அவர் காணப்பட்டார்.

பாசமலர் இக்கொட்டகையில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி விழா எடுத்த போது சிவாஜியும் சாவித்திரியும் தேரில் ஊர்வலமாக (மலர்களைப் போல் தங்கை பாடலில் வருமே அதே போன்ற தேர்) அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பார் மகளே பார் படமும் இங்கு வெற்றிகரமாக ஓடியது. அன்னை இல்லம், தில்லானா மோகனாம்பாள், புதிய பறவை, இருவர் உள்ளம், நிறை குடம் போன்ற பல சிவாஜியின் வெற்றிப் படங்கள் இங்கு திரையிடப்பட்டு வெற்றி கரமாக ஓடினாலும் இங்கு திரையிடப்பட்ட கர்ணன் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆரம்பத்தில் இப்படம் சரியாகப் போகவில்லை. ஆனால் எங்கள் குடும்பத்தினர் மிக அதிகமான முறை பார்த்த படம் இது. ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று முறை பார்த்திருப்பார்கள். என் அப்பாவும் பெரியப்பாவும் விடாமல் ஒரு வாரம் இரவுக்காட்சி பார்த்தார்கள். அதில் மூன்று முறை நானும் உடன் சென்றிருந்தேன்.

ஒரு விசித்திரமான விஷயம். பொதுவாக எம்ஜிஆர் படங்கள் மோசமான தோல்வியை சந்திக்காது. ஆனால் தலைவன், தாலி பாக்கியம், அன்னமிட்ட கை, ஒரு தாய் மக்கள் என பல எம்ஜிஆர் படங்கள் தோல்வியடைந்தது என்றாலும் பின்னாட்களில் எங்கள் தங்கம், குமரிக்கோட்டம் போன்ற படங்கள் அந்த அவப் பெயரைப் போக்கின.

பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த், புன்னகை இதில்தான் திரையிடப்பட்டது. ஜெய்சங்கரின் முதல் படமான இரவும் பகலும் இதில்தான் திரையிடப்பட்டது. எங்க வீட்டு பிள்ளைக்கு பிறகு அவர்களது தயாரிப்பில் எங்க வீட்டு பெண் திரையிடப்பட்டதும் பெரிய எதிர்பார்ப்புடன் போய் ஏமாந்ததும் இங்குதான். கமலின் வறுமையின் நிறம் சிகப்பு, ரஜினியின் காளி, பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், பாக்கியராஜின் மௌனகீதங்கள், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களும், அதே கண்கள் போன்ற பல படங்கள் இங்கு திரையிடப்பட்டு வெற்றியடைந்தது. 

முதன் முதலில் காலை காட்சிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பழைய ஆங்கில தமிழ் படங்களை சனி, ஞாயிறுகளில் திரையிட்டது. Mad Mad world, முதல் தேதி, எதிர்பாராதது ஆகிய படங்களைப் பார்க்க வைத்தது பேலஸ் தியேட்டர்.

பல வருடங்கள் அதிகமாக வெற்றிப் படங்கள் திரையிடப்படாத காலத்தில் கரகாட்டக்காரன் திரையிடப்பட்டது. பக்கத்து ஊர்களை இருந்து மக்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து படம் பார்த்த அதிசயத்தை ஒரு நாள் , இரு நாட்கள் அல்ல. பல மாதங்கள் தொடர்ந்து பார்த்தேன்.
தினமும் ஐந்து காட்சிகள், டிராபிக் ஜாம் ஏற்பட்டு திருப்பிவிடப்பட்ட அதிசயம் இங்குதான் நடந்தது.

எல்லா வரலாற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அப்படித்தான் பேலஸ் கொட்டகைக்கும் ஏற்பட்டது.
பல திரையரங்குகள் மூடப்பட்ட பொழுது பேலஸ் கொட்டகையும் கிடங்காக மாறி இப்பொழுது பெரிய அபார்ட்மெண்ட் இருப்பதாக அறிகின்றேன்.

1990 ல் சேலத்தை விட்டு போன நான் 
பேலஸ் தியேட்டர் மூடப்பட்டதை கேள்விப்பட்டேன்.
என் நினைவுகளில் இருக்கும் பேலஸ் தியேட்டர் என்றும் அப்படியேதான் இருக்கும். அப்படியேதான் பலரின் நினைவுகளில் ஏதாவது ஒரு திரையரங்கம் இருக்கும். இப்பதிவைப் படிக்கும் பொழுது அத்திரையரங்குகள் ஞாபகம் வரும்.


நன்றி
சுஜாதா

மன அழுத்தமின்றி பணிசெய்ய...வழிகள்...40

*பள்ளியில் அதிக மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக கற்பித்தல் பணி செய்ய ஆசிரியப் பெருமக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் சில இதோ உங்களுக்காக, பொறுமையாக படித்துவிட்டு ஆசிரியர்-நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்*

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 40-வழிமுறைகள்:-

1.காலை எழுந்தவுடன் மூச்சு பயிற்சி முக்கியமாக ஆசிரியர்கள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நலம்.

2.காலையில் பள்ளிக்கு செல்லும்முன் கடைசி அரைமணி நேரம் ஒய்வு எடுத்துவிட்டு மனது சந்தோசமாக வைத்துக்கொண்டு இறைவனை வணங்கிவிட்டு  பள்ளிக்கு செல்ல வேண்டும்.

3.வகுப்பில் ஒவ்வொரு பாட வேளையின் கடைசி ஐந்து நிமிடம் மாணவர்களுக்கு நடத்தியது தொடர்பான கற்றல் பணி தந்துவிட்டு நாம் பேசாமல் குரலுக்கு ஓய்வு தர வேண்டும்.

4.வகுப்பறையில் மிகவும் சத்தமாக பேசக்கூடாது.

சரியான சத்தத்துடன் மட்டுமே பேச வேண்டும்.நமது கண்பார்வை வகுப்பு முழுவதும் இருக்க வேண்டும்.

5.மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் மைக் மூலம் வகுப்பு எடுத்தால் நமது வாழ்நாள் நீடிக்கும்.கரும்பலகையில் எழுதும்போது சுண்ணக்கட்டி உடம்பிற்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

6.ஒவ்வொரு பாடவேளை முடியும்போது குரல்வலை வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு பாடவேளை முடியும்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

7.பள்ளிக்கு செல்லும்போது முகம் மலர்ந்து சந்தோசமாக செல்ல வேண்டும்.

8.பள்ளி செயல்பாடு எதுவாக இருந்தாலும் வீட்டிலும்,வீட்டின் செயல்பாடு எதுவாக இருந்தாலும் பள்ளியிலும் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பள்ளி முடிந்தவுடன் மாலை நேரத்தில் பள்ளியின் செயல்பாட்டை மறந்துவிட்டு குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க பழக வேண்டும்.

 

9.பாடவேளை முழுவதும் நமது உடலும் உள்ளமும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.மாணவர்களிடம் அன்புடன் மட்டுமே பேச வேண்டும்.கோபப்பட்டு பேசக்கூடாது.

10.எண்ணம்,சொல்,செயல் மூன்றும் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒருநிலை படவேண்டும்.

11.அனைத்து நேரமும் நாமும் சந்தோசமாக இருந்தது நம்மை சார்ந்த மாணவர்கள்,ஆசிரியர்கள்,

குடும்பம்,நண்பர்கள்,உறவினர்கள்,சொந்தங்கள், உலக மக்கள் என்று அனைவரையும் சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

12.ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிடும்போதும்,தண்ணீர் குடிக்கும் போதும் நமக்கு தந்த பிரபஞ்சம்,வழங்கிய உள்ளங்களை வாழ்த்த வேண்டும்.

 

13.மதிய இடைவேளை மற்றும் இடைவேளையின் போது சிரித்து சந்தோசமாக பாடத்தை தவிர்த்து மற்ற பயனுள்ள கருத்துக்களை சக ஆசிரியர்களுடன் பேச பழக வேண்டும்.

14.காலையில் பள்ளிக்கு சென்றவுடன் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களுக்கு முக மலர்ந்து வணக்கம் சொல்வது மிக முக்கியம் ஆகும்.

15.பள்ளியில் ஆசிரியர்,பெற்றோர்,

மாணவர்கள் கோபமாக பேசினாலும் மறந்துவிட்டு அவர்களை வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.

16.பள்ளியில் நம்முடன் பேசும் அனைவரின் கருத்துக்களையும் கேட்டு நாம் பேசும் போது சரியாக,சுருக்கமாக அன்புடன் பிறர் மனம் வருந்தாத வண்ணம் பேச வேண்டும்.

17.நம்முடன் அனைவரும் சந்தோசமாக பேசும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.அனைவரின் பேச்சிற்கும் மதிப்பு தர வேண்டும்.

18. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களின் குடும்ப சூழல் பற்றி கேட்டு தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.அவர்கள் மனம்விட்டு நம்முடன் பேச வாய்ப்பு தரவேண்டும்.

19.நாள்தோறும் இடைவேளையின் போது யாரேனும் ஒரு மாணவர் பெயர் சொல்லி அவரை வந்து நம்முடன் பேச சொல்லும்போது அவர்கள் மீது நாம் கவனம் செலுத்துவதை உணர்ந்து நன்றாக படிப்பார்கள்.

20.மாணவர்கள் செய்யும் சிறு தவறையும் தக்க அறிவுரை கூறி திருத்த முயற்சி செய்ய வேண்டும்.பாடவேளைக்கு செல்லும் போது கற்றல்,கற்பித்தல் உபகரணம் கொண்டு சென்றால் கற்பித்தல் மேம்படும்.

21.இதுகூட தெரியாத என்ற வார்த்தை மட்டும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டாம்.அப்படி சொன்னால் மாணவர்கள் நம்முடன் கடைசியாக பேசுவது அதுவாகத்தான் இருக்கும்.

22.நமக்கு தெரியாது உலகில் நிறைய உள்ளது என்பதை உணர்ந்து மாணவர்களிடம் பேச வேண்டும்.அன்றாட தொலைக்காட்சியில் வரும் முக்கிய பயனுள்ள செய்திகளை கேட்டு மாணவர்களுக்கு சொல்ல வேண்டும்.

23.கிடைக்கும் நேரத்தை மனது அமைதியாக இருக்க பழக்க படுத்திக்கொள்ள வேண்டும்.

24.பள்ளியில் வரும் பணியை வேகமாக முடித்துவிட்டு சந்தோசமாக இருக்க வேண்டும்.

25.பணியை அதிக நேரம் எடுத்து சென்று மனதை துன்பத்தில் வைத்திருக்க கூடாது.

26.மாணவர்களுக்கு பாட வேளையில் பேச வாய்ப்பு தரவேண்டும்.ஏன், எதற்கு,எப்படி,என்ன? என்பது போன்று வினா கேட்டு கற்க பயிற்சி தர வேண்டும்.புரிந்து படிக்க பயிற்சி தரவேண்டும்.

27.யாரிடமும் நமது துன்பத்தை பேசக்கூடாது.நமது சந்தோசத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

28.பள்ளியில் வகுப்பில் நடத்தும் பாடம் மற்றும் செயல்பாட்டை குறிப்பு எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றால் மறக்காது.அப்போதுதான் அனைத்து கருத்துக்களையும் மாணவர்களுக்கு சொல்லமுடியும்.

29.பள்ளி முடிந்து விட்டு வீட்டிற்கு வந்தால் தங்களின் குழந்தை மற்றும் குடும்ப உறுப்பினருடன் சந்தோசமாக இருக்க வேண்டும்.நமது குடும்பம்தான் முதல் கோவில் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

30.தங்களின் குழந்தைகளின் தனித்திறனில் கவனம் செலுத்த வேண்டும்.நம்மை போன்று அவர்கள் எதிர் காலத்தில் வருந்தமால் இருப்பதில் கவனம் கொள்ள வேண்டும்.

31.பள்ளியில் இருந்து வந்தவுடன் அரைமணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு,அதன் பிறகு மற்ற பணிகள் செய்ய வேண்டும்.

32.நாள்தோறும் மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்லும் பழக்கம் இருக்க வேண்டும்.

33.விடுமுறை நாளில் குடும்பத்துடன் அருகில் உள்ள பூங்கா போன்று  சிறு சுற்றுலா மேற்கொள்ள வேண்டும்.

34.உறங்கும்போது இறைவனை வேண்டிக்கொண்டு சந்தோசமாக உறங்க வேண்டும்.

35.நாம் வாழ்வில் அனைத்து செயலிலும் *அமைதி ஆனந்தம்* நம்பிக்கை* பெருக வேண்டும்   என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

36.கடந்தகால மன உளைச்சலை மறந்து,

எதிர்கால கற்பனை மறந்து,நிகழ்காலத்தில் சந்தோசமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

37.காலையில் எழுந்தவுடன் இரவு உறங்கும் வரை அனைவரையும் வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.

38.ஆசிரியராக அனைவரின் வாழ்வில் ஏணிப்படியாக இருப்போம்.சமூகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம் என்ற குறிக்கோளுடன் வாழ வேண்டும்.

39.சமூகத்தின் முன்னுதாரணம் நாம் என்பதால் அனைவரிடமும் மாற்றம் வர முதலில் நம்மிடம் உருவாக வேண்டும்.

40.நீள் ஆயுள்,நிறை செல்வம்,மெய் ஞானம்,உயர் புகழ் பெற்று பல்லாண்டு அனைவரும் வாழ வாழ்த்தும் நல்ல மனதுடன் வாழ வேண்டும்.

நன்றி 

என்றும் அன்புடன் 

கல்வி ஆசிரியர்கள்.

பகிர்வு பதிவு

Monday, October 11, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

மணம்
பரப்பும்
பூக்களுக்கு 
பசுமையான
மரங்களுக்கு
பெயர் போன 
பெங்களூரில் 

ஒரு 
புகழ்பெற்ற 
கல்வி நிறுவனம் 

அதில்
கௌரவ
பேராசிரியர்
பணிக்கு சேர 
ஆசைப்பட்டார்
அப்துல் கலாம்

அதற்கான 
விண்ணப்பம் 
அனுப்பினார் 

நேர்முக
தேர்வில் 
கலந்து 
கொண்டார்

  அவர் 
  முறையாக 
  பி எச் டி 
  படிக்காதவர் 

என்ற 
காரணத்தை 
காட்டி

கலாமை
வேலைக்கு 
சேர்க்க 
மறுத்தனர் 
நிர்வாகத்தினர்

இந்த சம்பவம் 
நடந்த போது 

கலாமிற்கு 
வயது 70

  அக்னி
  ஏவுகணை
  ஏவியவர்

  பொக்ரான்
  அணு குண்டு
  சோதனையை
  வெற்றிகரமாக
  முடித்தவர்

  பிரதம
  மந்திரியின்
  தலைமை
  அறிவியல்
  ஆலோசகராக
  இருந்தவர்

  அந்த 
  பணியில்
  சேர்க்க
  மறுத்தது

  அவர்
  மனதை 
  பாதித்தது 
  என்றால் 
  நிச்சயம் 
  இல்லை 

  அவரின் 
  பங்களிப்பை
  பயன்படுத்தி 
  கொள்ள 

  அந்த 
  நிறுவனம்
  கொடுத்து 
  வைக்கவில்லை 

என்பதே
நிஜம்

  மாபெரும் 
  லட்சியத்தில் 
  பயணம்
  செய்பவர்களை

  இந்த
  மாதிரியான 
  சின்ன சின்ன 
  மறுப்புகள் 

  அவர்கள் 
  மனதை 
  எள்ளளவும்
  பாதிப்பதில்லை

என்பதே
உண்மை

  வாங்க ::

  எந்த
  நிகழ்வையும்

  அது
  நன்மையோ
  தீமையோ

  அது
  வெற்றியோ
  தோல்வியோ

  அது
  இன்பமோ
  துன்பமோ

  இதுவும்
  கடந்து
  போகும்
  என்று

  சுலபமாக
  எடுத்து
  கொள்ள
  பழகுவோம்

  நம்
  வாழ்வில்
  அதிர்வுகளுக்கு
  இடமில்லை

  என்பதை
  உணரவும்
  செய்வோம்

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

அன்புடன்
காலை
வணக்கம்

💫💫💫💫💫💫💫

நன்றி
முனை. சுந்தர மூர்த்தி