Monday, March 31, 2014

உலக வெப்பமயமாதல் – மீண்டும் ஒரு எச்சரிக்கை

உலக வெப்பமயமாதல் – மீண்டும் ஒரு எச்சரிக்கை


download
உலக வெப்பமயமாதல் – மீண்டும் ஒரு எச்சரிக்கை
United Nations scientific panel என்னும் நிபுணர் குழு தமது நீண்ட அறிக்கையில் மீண்டும் உலக வெப்பமயமாதல் குறித்து எச்சரித்துள்ளது. 2007ல் குறிப்பிட்டதை விட இப்போது ஆபத்து நெருங்கி விட்டதையும் மிகவும் மோசமான விளைவுகளையும் அது நமக்கு எச்சரிக்கையாக எடுத்துரைக்கிறது.
CO2 எனப்படும் கரியமில வாயு விண்வெளியை மாசு படுத்திக் கொண்டே வருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, மற்றும் வாகனங்கள், ஆகாய விமானங்கள் வெளியேற்றும் நச்சுப் புகை உலக வெப்பமயாவதற்கு முக்கியக் காரணிகள். Green House Gases என்று அழைக்கப் படும் நீராவி, மீதேன், கார்பன் டை ஆக்ஸைட், நைட்ரஸ் ஆக்ஸைட் மற்றும் ஓஸோன். இவைகள் நம்மை அதிகக் குளிரில்லாத வெட்ப நிலையில் வைத்திருக்கின்றன. ஆனால் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு சுற்றுச் சூழலில் கடுமையாக அதிகரித்து வருகிறது. இது ஒரு பக்கம் வெப்பத்தை அதிகரிக்கிறது. chlorofluorocarbons (CFCs) என்று அழைக்கப் படும் க்ளோரின் அடிப்படையிலான தொழிற்சாலைப் பயன்பாடு ஓஸோன் மண்டலத்தில் ஓட்டைகளை ஏற்படுத்துகிறது. குளிர்சாதனப் பெட்டியின் குளிர்வில் இது அதிகம் பயன்படும் ஒன்று. தீயை அணைக்கும் ரசாயன வாயு, புகைப்படங்களிலும் நகல்களிலும் பயன்படும் ப்ரொமைட் ஆகியவையும் உதாரணங்களே.
சமீப காலத்தில் பேர்ழிவை ஏற்படுத்திய பல புயல்கள், சூறாவளிகள் உலக வெப்பமயமாதலின் விளைவுகளே. ஐரோப்பாவின் கடுமையாக வெப்பக் காற்று நிகழ்வுகள், முஸாம்பிக்கில், பாகிஸ்தானில், பங்களாதேஷில் வந்த பெரு வெள்ளப் பெருக்குகள், ஆஸ்திரேலியா எதிர் கொண்ட வறட்சி, பஞ்சம், அமெரிக்காவின் காடுகள் எரிந்து போவது இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பேரழிவுகளால் பெரிதும் பாதிக்கப் படுவது அடித்தட்டு மக்களும் ஏழை நாடுகளுமே. வளரும் நாடுகள் அழியும் நிலை இப்போது வந்து விட்டது.
உலக வெப்பமயமாதலின் பின் விளைவுகளில் நாம் அவதிப்பட ஆரம்பித்து விட்டோம். ஆர்க்டிக், அண்டார்ட்டிக் பனிமலைகள் உருகி வருகின்றன. உலக முழுதும் கடலின் மேலுயரம் அதிகரித்து வருகிறது.
கார்பன் டை ஆக்ஸைடை மட்டுப் படுத்தும் ஆக்ஸிஜன் தாவரங்களில் இருந்து எளிதாகக் கிடைக்கிறது. அதை நாம் காடு வளர்ப்பின் மூலம் சாதிக்க முடியும். சுற்றுச் சூழலை மாசு படுத்தாத உற்பத்தி முறைகளுக்கு நாம் மாற வேண்டும். உதாரணத்துக்கு நாம் நிலக்கரியை எரித்து உருவாக்கும் மின்சாரத்திலிருந்து சூரிய வெப்பத்தில் உருவாகும் மின்சாரத்துக்குப் படிப்படியாக மாற வேண்டும். தொழிற்சாலை மாசு மட்டுப்பட வேண்டும். வாகனங்கள் புகை மட்டுப்படும் தரக் கட்டுப்பாட்டுக்குக் கடுமையாக ஆட்படுத்தப் பட வேண்டும். மின்சாரத்தை, தண்ணீரை சேமிக்க, குறைவாகப் பயன்படுத்த நாம் பழக வேண்டும். மரங்களை லட்சக் கணக்கில் நட்டுப் பராமரித்து வளர்க்க வேண்டும். வாகனங்களின் பயன்பாட்டை எல்லோருமே குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் அறிக்கை புறந்தள்ளக்கூடியது அல்ல. உலக வெப்பமயமாதல் குறித்த கவலை அரசியல்வாதிகளுக்கு வரும் போது ஒருவேளை அப்பாவி ஜனங்களுக்கு விடிவு பிறக்கலாம். காலம் கடந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

எழுத்து மற்றும் இலக்கண பிழைகளை உணர்த்தும் பேனா!

எழுத்து மற்றும் இலக்கண பிழைகளை உணர்த்தும் பேனா!
அடுத்த வாரம் விற்பனைக்கு வரவிருக்கின்ற ஜெர்மன் தயாரிப்பான பேனா, நாம் எழுதும் போது எழுத்துப் பிழையோ அல்லது இலக்கணப் பிழையோ இருந்தால் உடனே அதிர்வை உண்டாக்கி நம்மை உணர்த்தும். இதன் கண்டுபிடிப்பாளரின்(Falk and Mandy Wolsky) மகனின் எழுத்து பிழையே இதனை உருவாக்க காரணமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். பலரையும் கவரும் இந்த பேனா AAA பேட்டரியால் இயங்கும். கூடவே இது கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களுடன் இணைப்பை ஏற்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை இன்னும் சரியாக தெரியவில்லை, எனினும் $100- களாவது இருக்கும் என நம்பப்படுகிறது. இது பென்சில் பால்பாயிண்ட் மற்றும் மை என மூன்று விதத்திலும் பயன்படுத்தும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மையோ காகிதமோ தேவையில்லை. கூடவே பல வண்ணங்களில் வருகிறது. மேலதிக விவரங்களுக்கு கீழே உள்ள அவர்களின் இணைப்பை பயன்படுத்துங்கள்!

வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர்




நண்பர்களே அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா ?

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது.

ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர்
கிடைத்துவிடும்.
மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!''.
''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில்,

மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.
செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்.
தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க.

                                                                                           with love
                                                                            A.SIVARAMAKRISHNAN




நம் தேசிய கொடி


நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன், அதில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து நாம் கை தட்டுகிறோம்.

ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது... அது என்ன தெரியுமா....?

நமது தேசியக்கொடி மேலே ஏற, அதாவது நாம் சுதந்திரம் பெற, எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது, மலர்கள் கீழே விழுந்து, அதனை ஞாபகப்படுத்துகிறது.

இனி ஒவ்வொரு முறையும் நமது தேசியக்கொடி ஏற்றத்தைக் காணும் போதும், இதை உங்களது மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

அன்று அந்த நல்ல உள்ளங்கள், தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்குஅனுப்பாமல் இருந்திருந்தால், நாம் இன்று எங்கேயாவது செக்கு இழுத்துக் கொண்டு தான் இருந்திருப்போம்...!

ஒற்றுமையுடன் பெற்ற சுதந்திரத்தை
ஒற்றுமையுடன் பாதுகாப்போம்...
இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை
இரத்தம் சிந்தாமல் பாதுகாப்போம்...

நமது சுதந்திற்க்காக உயிர் தியாகம் செய்த
நமது முன்னோர்களை நினைவு கூறுவோம்..
"இந்தியனாய் பிறந்தமைக்கு பெருமை படுவோம்"
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இல்லையெனில் ஓங்கிடும் தாழ்வு.
நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறுவோம்.
தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!


இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை பதிவு  செயும்மாறு கேட்டுக் கொள்ளகிறேன் . 

என்றும் அன்புடன் 

Wednesday, March 26, 2014

திறந்து பார்க்க மறந்த உலகம்

திறந்து பார்க்க மறந்த உலகம்

எழுதியது ஈரோடு கதிர் 

தொலைக்காட்சிக்குள்ளே ஆழ மூழ்கிக் கிடக்கும் என் மகளை பல நேரங்களில் பிரித்தெடுப்பதே மிகச் சிரமமானதாக இருக்கிறது. தொலைக்காட்சியை அணைக்கச் சொல்லும் பொழுதெல்லாம், அதற்கு ஈடாக விளையாடுவதற்காக என் கைபேசியையோ, மடிக்கனிணியையோ கையகப்படுத்த முயற்சிப்பது வாடிக்கையாகிப் போய்விட்டது. இரண்டாம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு என் மடிக்கணினியில் அப்படி விளையாட என்னதான் இருக்கிறது என்ற கேள்வியிருந்தாலும், உட்கார்ந்து உற்று நோக்கும் பொறுமை உதிர்ந்து போய்விட்டது.


ஒரு வழியாய் மடிக்கணினியை கையகப்படுத்தி “அப்பா, படம் வரைய போட்டுக்குடுங்க” என்று குறுகுறுப்பாய் வேடிக்கை பார்த்து, அதற்கான மென்பொருளை நான் இயக்கும் வரை காத்திருந்த நாட்கள் மலையேறிவிட்டது. மடிக்கணினியை, பையிலிருந்து எடுத்து, திறக்கும் போதே “தள்ளுங்கப்பா” என்று மிக இயல்பாய் ஒதுக்கி, தனக்கென கையகப்படுத்தி, சடசடவென ஒவ்வொன்றாய் சொடுக்கி ஏதாவது ஒரு விளையாட்டுக்குள் மூழ்கிப் போய், அந்த விளையாட்டுக்கேற்ப விதவிதமாக குரல் எழுப்புவதை நினைக்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது. 

குழந்தைகளின் உலகத்தில் மூழ்குவதை விட பிற அலுவல்களே முக்கியமாய் தோன்றும் சாபம் என்னையும் விட்டு வைத்ததில்லை. பல நேரங்களில் அவள் பேச வருவதை கேட்கும் மனநிலையை, ஏதோ ஒரு கைபேசி அழைப்பு களவாடிவிடுகிறது. நான் பேச நினைக்கும் நேரத்தில் வீட்டுப் பாடமோ, சுட்டி தொலைக்காட்சியின் செட்ரிக் அல்லது ஹம்பி டம்பியோ அவளை என்னிடமிருந்து களவாடிவிடுகிறது.

வழக்கமான வார விடுமுறை, வழக்கம் போல் வீட்டில் வார நாட்களின் களைப்பைக் கரைக்க கிடந்தேன். ஊரில் இருந்து தாத்தா வந்திருந்தார். எண்பதுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் அவருக்கு, எழுதப் படிக்கத் தெரியாது. கையெழுத்து மட்டும் கிறுக்கலாய்ப் போடத் தெரியும். தொலைக்காட்சியும், அப்பா அம்மா இல்லாத நேரங்களும் என் மகளின் விளையாட்டுத் தோழனாக இருப்பவர் என்னுடைய தாத்தா. மதிய உணவுக்குப் பின் கொஞ்சம் தூக்க கலக்கத்தோடு படுக்கையில் கிடக்க, வழக்கம் போல் மடிக்கனிணியை கையகப் படுத்தியவள் அதை படுக்கையில் என்னருகில் கடை விரித்து, வெளியில் இருந்த என் தாத்தாவை தன் அருகில் அமர வைத்துக் கொண்டு எதோ ஒரு விளையாட்டை துவங்கினாள். 

ஒரு மாதிரி அரைத்தூக்கத்தில் இருந்த எனக்கு, என்னவோ சலசலப்புக் கேட்டது, நேரம் நகர பேச்சு அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

“குட்டிம்மா, என்ன சாமி பண்றே, கொஞ்சம் தூங்க வுடேன்” 

“அப்பா, இந்த கேம்-மை தாத்தாக்கு சொல்லிக் குடுத்ட்ருக்கேன்” 

தூக்கம் பிடிபடவில்லை, என்ன நடக்கிறது என்று கவனிக்கத் துவங்கினேன். ஏதோ ஒரு விளையாட்டின் மையத்தில் இருந்தாள். கை பரபரவென விளையாடிக் கொண்டிருக்க, விளையாட்டு குறித்த விளக்கம் கோர்வையாக வந்து கொண்டிருந்தது. சரியாய் சில விளக்கம், தனக்குத் தோன்றிய விதத்தில் கற்பனையாய் சில விளக்கம் என வெகு சுவாரசியாமாய் போய்க் கொண்டிருந்தது.

குழந்தை விவரிப்பதை வெகு சிரத்தையாய்

“ம்…”

“அப்படியா….”

“ஓ” என தாத்தா கேட்டுக்கொண்டிருந்தார்.

அந்த விளையாட்டு ஒரு மாதிரி பிடிபடாமல் போக, வேறொரு விளையாட்டில் அடுத்த பாடம் ஆரம்பித்தது.

என்னால் ஒன்றை நிச்சயமாக உணர முடிந்தது, என்னுடைய தாத்தாவிற்கு அதில் ஒன்றுமே புரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனாலும் வெகு சிரத்தையாய் அதை “ம்” கொட்டி பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். தனக்கு ஒன்றும் புரியவில்லை, இது தனக்கான விசயம் இல்லை என்ற போதும், ஏழு வயது குழந்தை சொல்வதை தன்னை மறந்து குழந்தையோடு குழந்தையாக தன்னுடைய எண்பது வயதில் ஏதோ ஒரு ஈடுபாட்டோடு கேட்டுக் கொண்டிருப்பதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

குழந்தைகளுக்கென்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்ய நினைக்கும் நமக்கு, ஒரு போதும் குழந்தைகளின் உலகத்தில் மூழ்க மனதிருப்பதில்லை. அதே போல் ஒன்றை உண்மையாகவோ, கற்பனையாகவோ சுவாரசியமாய் குழந்தைகள் விவரிப்பது போல் சொல்லும் திறனும் அற்றுப் போய் விட்டது. ஒவ்வொரு இடத்திலும் எல்லைகள் வரைந்து வைத்து, எல்லைகளுக்குள்ளாக, ஏனென்றே தெரியாமல் குறுகிப்போய் கிடக்கின்றோம்.

கொம்பு முளைத்த புத்தி, எதையெடுத்தாலும் குத்திக் கிளறி அதை ஆய்ந்து ஆய்ந்து பார்க்கும் வழக்கத்தைக் கொண்டு வந்துவிட்டது. நம்மூலம் வந்த குழந்தைகளுக்கு, சரியாகவோ தவறாகவோ ஒரு உலகத்தை வடிவமைக்க நினைக்கும் வேகத்திற்குள், குழந்தைகள் மிக அழகாக தங்களுக்கென கட்டமைத்திருக்கும் உலகத்திற்குள் சென்று, இதுதான் குழந்தைகளின் உலகம் என்பதைப் பார்த்து, உள்வாங்கி அனுபவிக்க மறந்து விட்டோம்.

ஏழு வயதுக்குழந்தை எண்பது வயதிற்கு தாத்தாவிற்கு பாடம் எடுப்பதையும், எண்பது வயது தாத்தா குழந்தையாக மாறி ஏழு வயது குழந்தையிடம் எல்லாம் புரிந்ததுபோல் கேட்பதையும் பார்க்கும் போது குழந்தைத் தனத்தை தொலைத்த மனதிற்கு கொஞ்சம் குறுகுறுப்பாகவும், பொறாமையாகவும், வெட்கமாகவும் இருக்கத்தான் செய்கின்றது.

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை பதிவு  செயும்மாறு கேட்டுக் கொள்ளகிறேன் . 

என்றும் அன்புடன் 

சல்லி வேர்

எழுதியது ஈரோடு கதிர் 




அந்தச் செடியை 
நான் வைக்கவில்லை
ஒரு நாளும்
நீரூற்றியதுமில்லை
எந்தவகையிலும்
எனக்கு உறவுமில்லை
உயர வளரத் துடித்து
இடைவிடாது காற்றில்
அலையும் கொடியை
அருகாமைப் பந்தலில் 
ஏற்றிவிட்டிருக்கிறேன்
படர்ந்து பரவலாம்
வானத்தை நோக்கி
கையும் அசைக்கலாம்
சல்லி வேரொன்றின்
நுனியை மட்டும் 
என் ரத்தநாளத்தில்
பிணைத்தபடி!

கோடை வெயிலை இப்படியும் சமாளிக்கலாம்!

8


கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விட இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. கொலுத்தும் வெயிலால் மாலையில் வீடு திரும்பும் குழந்தைகள் சோர்வாக காணப்படுவார்கள். தேர்வு நேரத்தில் இந்த புற காரணிகள் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.  முடிந்தவரை அவர்களை வீட்டில் குளுமையாக வைத்துக் கொள்ளப் பார்ப்போம். இதோ சில குறிப்புகள்…
  • நாம் எல்லோரும் செய்யும் முதல் தவறு. தாகம் என்று அடிக்கடி ஃப்ரிட்ஜில் வைத்த நீரை எடுத்து நீங்களும் குடிக்கக்கூடாது, குழந்தைகளுக்கும் கொடுக்கக் கூடாது. ஏனெனில் அது, உடல் சூட்டை கிளப்பி விடுமே தவிர, தாகத்தைத் தீர்க்காது.
  • தாகத்தை தீர்க்க நன்னாரி வேர் ஊற வைத்த தண்ணீரைக் குடிக்கலாம். இதைக் குடிப்பதால் உடல் வெப்பம், தாகம் சட்டு தணியும்.
  • சீரகம் ஊற வைத்த தண்ணீரும் நல்ல தேர்வுதான். அதில துளசியையும் சேர்த்து போடலாம். எதுவானாலும் ஒவ்வொரு நாளும் புதிய நீரைப் பயன்படுத்துவது நல்லது.
  • வெயில் நேரத்தில் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவங்களுக்குக்கூட அக்கி, அம்மை மாதிரியான நோய்கள் வரலாம். அதனால் நம்மையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம்.
  • வியர்வை அதிகமாக வெளியேறும் பிரச்னை உள்ளவர்கள் ஒரு வாளி தண்ணீரில் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து குளித்தால், வியர்வை நாற்றத்தைக் குறைக்கலாம்.
  • குழந்தைகளுக்கு செயற்கையான குளிர்பானங்களை வாங்கிக் குடிக்காமல் இளநீர், நீர்மோர் என்றூ குடிக்க கொடுக்கலாம்.
  • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேரட் கீரை அடிக்கடி செய்து கொடுக்கலாம். கேரட்டை தோல் சீவி  கழுவிக் கொள்ளுங்கள். கால் கிலோ கேரட்டுக்கு மூன்று பெரிய சில்லு தேங்காய் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ஜூஸரில் பிழிந்து கொள்ளுங்கள். பிழிந்த ஜூஸுடன்  ரெண்டு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடிக்கக் கொடுங்கள்.

இரவு தூக்கம் இனிமையாக அமைய...

இரவு தூக்கம் இனிமையாக அமைய...


இரவு தூக்கம் இனிமையாக அமைய...




அழகே உன் தூக்கமும் அழகு தான்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள் தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, களையாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்!

ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும். கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும் கண்களின் அந்த நேர போராட்டத்தை ஆராய்ச்சி செய்தால் பல புத்தகங்களே எழுதிவிடலாம் என்பது போல் தோன்றும்.

சிலர் படுக்கையில் படுத்த மாத்திரத்திலேயே தூங்கிவிடுவார்கள். இன்னும் சிலருக்கு என்ன தான் புரண்டு புரண்டு படுத் தாலும் தூக்கம் மட்டும் உடனே வராது. தூக்கத்தோடு பெரும் போராட்டம் நடத்திக் கொண்டே, அவர்களை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால் தூக்கம் தான் மனிதனுக்கு இலவசமாக கிடைக்கும் அருமையான மருந்து. பெட்டி நிறைய பணம் இருந்து என்ன பயன்? தூக்கம் வர மாட்டேங்குதே? என்று சிலர் புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். இதில் இருந்தே, தூக்கம் ஒருவருக்கு எந்த அளவுக்கு தேவை என்பதை அறிந்து கொள்ளலாம். காதலர்கள் தங்களுக்குள் முதன் முதலில் காதலை பரிமாறிக் கொள்வது இந்த கண்களால் தான். வாய் பேசாத பல வார்த்தைகளை இந்த சின்னக் கண்கள் எளிதில் பேசி விடும். கண்களால் தூது சொல்ல மாட்டாயா? என்று காதலன் காதலியை பார்த்து ஏங்குவதும் இதனால் தான்.

ஒரு மனிதன் தன் பரிபூரணமான வாழ்நாளில் சுமார் 23 ஆண்டுகளை தூக்கத்திலேயே செலவிடுகிறான். உடலும், மூளையும் வளர்வதற்கு, புதுப்பித்துக் கொள்வதற்கு அவகாசம் தருவது இந்த தூக்கம் தான். பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் தூங்குகிறது. 35 வயது வரையிலான குழந்தை 11 மணி நேரம் தூங்குகிறது. போகப்போக தூங்கும் நேரம் குறை கிறது. காரணம், மூளையானது தேவை இல்லாத விஷயங்களையும் இழுத்துப் போட்டு யோசிப்பது தான். சிலர் பணம்… பணம்… என்று அலைந்தே தூக்கத்தை தொலைத்து விடுகிறார்கள்.

நாளடைவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்ற சராசரி அளவை எட்டுகிறார்கள். சிலர் உழைப்பின் மீதுள்ள அதீத காதலால் 67 மணி நேரம் தான் தூங்குகிறார்கள். இந்த தூக்கம் கூட வராமல் தவிப்பவர்களும் உண்டு. தூக்கத்தை இரு வகையாக பிரிக்கிறார்கள். ரெம் மற்றும் நொன் ரெம் தான் அவை. இதில், ரெம் வகை தூக்கத்தின்போது வரும் கனவுகள் தான் பளிச்சென்று ஞாபகத்தில் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


மேலும், தூக்கத்தின்போது தான் அதிகம் கனவுகள் தோன்றுகின்றனவாம். அப்போது, விழிப்புடன் இருக்கும் மூளை, தன்னிடம் இருந்து செல்லும் எல்லா தகவல் வழித்தடங் களும் சரியாக இருக்கின்றனவா என்று சரி பார்த்து கொள்கிறதாம். எதிலும் ஆக்டிவ் ஆக உள்ளவர்களுக்கு தான் இந்த ரெம் வகை தூக்கம் அதிக நேரம் நீடிக்குமாம். கனவுகளும் அதிகம் வருமாம். மந்தபுத்தி உள்ளவர் என்றால் இவ்வகை தூக்கம் குறைவு தானாம். அதனால் கனவுகளும் குறைவாகத் தான் வருமாம்.

தூக்கம் என்பது இயற்கையானது. என்ன தான் தூக்கம் வராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் கண்டிப்பாக தூக்கம் வந்தே தீரும். ஒரு நாள் அல்லது 2 நாள் தூங்காமல் இருக்க முயற்சிக்கலாம். அதையும் தாண்டினால், தூக்கம் உங்களை அறியாமலேயே தானே வந்து விடும். இது இயற்கையானது. இதை மாற்ற முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தூக்கம் என்பதை எல்லோருக்கும் பொது வாக இருந்தாலும் பெண்கள் தான் அழகாக தூங்குகிறார்கள் என்று புதிதாக ஒரு ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்து இருக்கி றார்கள். மென்மையான அணுகுமுறை தான் இதற்கு காரணம் என்றும் தீர்வு சொல்லி இருக் கிறார்கள் அந்த ஆராய்ச் சியாளர்கள். மென்மையாக நடந்து கொள்ளாமல் கொஞ்சம் அதிகமாக ஆண் தன்மையுடன் நடந்து கொள்ளும் பெண்களுக்கு இந்த அழகான தூக்கம் கிடைப்பது இல்லையாம்.

ஆண்களிலும் சொப்ட் கேரக்டர் உள்ளவர் கள் தான் அழகாக தூங்குகிறார்கள். எக்குத ப்பாக அலைபாயும் மனம் கொண்டவர்கள், எப்போதும் எதையோ சிந்தித்துக் கொண்டிரு ப்பவர்கள். என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே கண்டபடி உருண்டு புரண்டு தூங்குகிறார்களாம்.

தின்மும் படுக்கைக்கு செல்வதற்கு ஒரு ரெகுலரான நேரத்தை வைத்துக் கொள்ளுங்கள். வார விடுமுறை நாட்களில் கூட அதை தவறாமல் கடைப்பிடியுங்கள்

படுக்கைக்கு செல்வதற்கு முன்பு 2 மணி நேரத்துக்குள்ளாக எந்தவிதமான உடற் பயிற்சியும் செய்ய வேண்டாம். ஏனெனில் அது உங்களுடைய இதயத் துடிப்பையும், அட்ரினலின் அளவை பூஸ்ட் செய்து விடுவதால் தூக்கம் பிடிக்காது. படுக்கைக்கு போவதற்கு முன்பு 4 மணி நேரம் வரை மதுபானம் எதுவும் அருந்த வேண்டாம். மது குடித்த முதல் 2 முதல் 4 மணி நேரத்துக்குள் தூக்கம் தூண்டி விடப்பட்டாலும், அதன்பிறகு தூக்கத்துக்கு இடையூறு ஏற்படும்.


காபி உள்ளிட்ட உற்சாக பானங்களை குடிக்க வேண்டாம். அவைகள் ஆழ்ந்த தூக்கத்துக்கு வேட்டு வைத்து விடும் புகைப்பிடிப்பதை தவிர்த்து விடுங்கள். புகைப்பிடிப்பவர்கள் தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆகும். அப்படியே தூங்கினாலும் அடிக்கடி தூக்கத்தில் விழித்துக் கொள்வார்கள். கொஞ்ச நஞ்ச தூக்கமும் நிம்மதியாக இல்லாமல் இடையூறுகள் ஏற்படும்.

லேசான நொறுக்குத் தீனி நல்லது. ஆனால் அதிகமாக சாப்பிட்டால் அது வேலைக்கு உதவாது. பிறகு தூக்கம் வராமல் தவிக்க நேரிடும். குறிப்பாக நெஞ்செரிச்சல் தொல்லை உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவதே சிறந்தது.

அதிகாலையிலேயே எழுந்து கொள்ளுங்கள். பிரச்சினைகள் இருந்தால் அதுபற்றி படுக்கைக்கு செல்வதற்கு பல மணி நேரத்துக்கு முன்பாகவே யோசனை செய்யவும்.

மன இறுக்கத்தைத் தளர்த்துங்கள்........

மன இறுக்கத்தைத் தளர்த்துங்கள்........


மன இறுக்கத்தைத் தளர்த்துங்கள்



சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.



நடங்கள்! ஓடுங்கள்!

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.


ஓய்வெடுங்கள்

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.




சிரியுங்கள்

மனம் விட்டு சிரியுங்கள். "மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.



மனம்விட்டுப் பேசுங்கள்

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.



உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.


தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.


விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.


மற்றவர்களையும் கவனியுங்கள்

உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !!!

கணித மேதை ராமானுஜன்

கணித மேதை ராமானுஜன்
(1887-1920)

“ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 ! பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.”

                                பிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி

சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.

1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன்! அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்!

ராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற “ஞானச் சிறுவன்” [Child Prodigy] ராமானுஜன். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார்! அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம்! “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் அந்த இளமை வயதிலே, ராமானுஜன்.

பன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney's Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.

பதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார். இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது. அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.

1903 ஆம் ஆண்டில் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது, அவர் கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜன் திருமணம் செய்த கொண்டபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்தி விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.
கணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் ஆர்.. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார். 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.

மேலும் தனியாக வேலை செய்ய விரும்பி 1912 இல், ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் எழுத்தராக [Madras Port Trust Clerk] அமைந்தார். நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள். அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார்! அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.

ராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்த 1913 ஜனவரி 16 ஆம் தேதி, ஒரு முக்கிய தினம்! அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள்! முதலில் மேலாகப் பார்த்து விட்டு, ஏதோ ஒரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. டின்னருக்குப் பிறகு இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய கணித ஞானி, ஜான் லிட்டில்வுட்டும் [John E. Littlewood], புதிர்களைப் போல் காணும் ராமானுஜத்தின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும், [Formulae] கணித மெய்ப்பாடுகளையும் [Theorems] மெதுவாகப் புரட்டிப் பார்த்துப் பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள். சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தனர். நிச்சயம் அவர்கள் காண்பது ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள். ஒரு பைத்தியகாரனின் முறை கெட்ட கிறுக்கல் அல்ல அவை என்று வியப்படைந்தார்கள்!

ஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் [University of Madras], இங்கிலாந்து கேம்பிரிட்ஜ், டிரினிடிக் கல்லூரியும் அவருக்கு உதவிநிதி கொடுக்க முன்வந்தன. 1914 ம் ஆண்டு மார்ச் மாதம், தாயின் பலத்த எதிர்ப்பைத் தள்ளியும், தன் கொள்கையை விட்டுக் கொடுத்தும், ராமானுஜன் இங்கிலாந்துக்குப் புறப்படக் கப்பலேறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் ஹார்டியும், ராமானுஜமும் டிரினிடிக் கல்லூரியில் [Trinity College] ஒன்றாகக் கணிதத் துறை ஆக்கப் பணியில் ஈடுபட்டார்கள். ஹார்டியின் சீரிய பொறி நுணுக்கமும், ராமானுஜத்தின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி, ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. இருவரும் கணிதச் சீர்ப்பாடுகள் [Arithmatic Functions] பலவற்றை ஆங்கில, ஈரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். அவற்றில் ரெய்மன் சீரினம் [Riemann Series], நீள்வட்ட முழு இலக்கங்கள் [Elliptical Integrals], உயர் ஜியாமெட்ரிச் சீரினம் [Hyper Geometric Series], ஜீட்டா சீர்ப்பாடுகளின் இயக்கச் சமன்பாடுகள் [Fuctional Equations of Zeta Functions], ராமானுஜன் தனியாக ஆக்கிய விரியும் சீரினங்கள் [Divergent Series] ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. அவை பின்வரும் வினாக்களுக்குப் பதில் அளிக்க அடிப்படைத் தளமாய் அமைந்தன. எடுத்துக் கொண்ட ஓர் இலக்கம், எத்தனை “பிரதம வகுப்பினம்” [Prime Divisors] கொள்ளலாம் ? எத்தனை முறைகளில் ஓர் எண்ணை, அதற்கும் சிறிய “நேரியல் முழு இலக்கங்கள்” [Positive Integers] பலவற்றின் தொகையாகக் குறிப்பிடலாம் ?

தெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார்! சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை! ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது!
ராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது “குறிப்பு நூலில்” [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் “முழுமைப்பாடுகள்” [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுகின்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை! அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் நூதனக் கணிதப் பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.

பின்னால் ஒரு முறை ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறியது; ராமானுஜத்தின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே! அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80! ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை! “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி! ராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை என்றும், அவரது கணித மெய்ப்பாடுகள் தன்னைப் பிரமிக்க வைத்து முற்றிலும் வென்று விட்டதாகவும், ஹார்டி கருதுகிறார். அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கி யிருக்க முடியாது, என்றும் கூறுகிறார்!
1917 ஆம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S. [Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் ராமானுஜன் ஒருவரே! ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது! வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது! முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது! அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை! அடிக்கடி சானடோரியத்துக்கு [Sanatorium] ராமானுஜன் போக வேண்டிய தாயிற்று. அப்படிப் போய்க் கொண்டிருந்தாலும், அவரது புதியக் கணிதப் படைப்புகள் பேரளவில் பெருகிக் கொண்டுதான் இருந்தன!

1919 ஆம் ஆண்டில் போர் நின்று அமைதி நிலவிய போது, நோய் முற்றி இங்கிலாந்தில் வாழ முடியாது, ராமானுஜன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் காசநோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை! நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை! தனது 32 ம் வயதில், இந்தியக் “கணிதச் சுடர்விழி” [Maths Icon] ராமானுஜன், 1920 ஏப்ரல் 26 ம் நாள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு ஏகினார். உயிர் நழுவிச் செல்லும் கடைசி வேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை, இன்றும் அவரது இறுதிக் குறிப்பு நூல்கள் காட்டுகின்றன.
ஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்! கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம்! ராமானுஜன் கற்றது கடுகளவு! கணித்தது கால் பந்தளவு! என்று சொன்னால், அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மிகையாகாது!

சிட்டுக்குருவி பற்றி உனக்கு சேதி தெரியுமா?

சிட்டுக்குருவி பற்றி உனக்கு சேதி தெரியுமா?

உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20 அன்று சந்தடியின்றி கடந்து சென்று விட்டது. ஏன் இந்தச் சிறிய பறவைக்கு உலகம் முழுவதும் இந்த நாள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது? காரணம் இருக்கிறது. உலகெங்கிலும் பரவி வாழும் சிட்டுக்குருவிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில்தான் 60 சதவீத சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து விட்டது என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

சிட்டுக்குருவிகள் நாள்தோறும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டம் மற்றும் அதன் பிரச்னைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், அதன் மூலம் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்கவும் தான் இந்த நாள் உலக சிட்டுக்குருவிகள் நாளாக 2010-ம் ஆண்டிலிருந்து மார்ச் 20 அன்று நினைவுறுத்தப்படுகிறது.


மனிதன் வாழும் வாழ்விடத்தையே தன் வாழ்விடமாக மாற்றி, நம் குடும்பத்தோடு தன் குடும்பத்தையும் இணைத்து, மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, நம் வீட்டில் ஒருவராக வாழ்ந்த ஒரு பறவை இனம் என்றால் அது அடைக்கலத்தான் குருவி எனும் சிட்டுக்குருவிதான்.


உலகம் போற்றும் பறவையியலார் டாக்டர் சலீம் அலி சிறுவனாக இருந்தபோது தன் வீட்டில் சிட்டுக்குருவிக் கூட்டில் இருந்து கீழே விழுந்த சிட்டுக்குருவிக் குஞ்சுகளின் அழகில் மயங்கி, பின்னாளில் தன் வாழ்நாளையே பறவைகள் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். அந்தப் பறவையியல் மாமேதையை இந்தியாவுக்குத் தந்ததும், உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் இந்தச் சிட்டுக்குருவிகள்தான்.


உலகம் முழுவதும் பரவி வாழும் இந்தச் சிட்டுக்குருவிகள் மெடிட்டரேனியன் பகுதியில் தோன்றியதாக அறியப்படுகிறது.


முதன்முதலில் வட அமெரிக்காவில் இவை அறிமுகப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவின் புரூக்ளின் மற்றும் நியூயார்க் நகரங்களில் 1851, 52-ம் ஆண்டுகளில் இவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதற்கு முக்கிய காரணம், அவைகள் பூச்சியினங்களைப் பிடித்துச் சாப்பிட்டு, உணவுத் தாவரங்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான். இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், உண்மையில் இளம் குஞ்சுகளுக்கு உணவூட்ட மட்டுமே அவைகள் பூச்சிகளைப் பிடித்து வருகின்றன.

பொதுவாக மற்ற பறவைகளைப்போல் சிட்டுக்குருவிகளை அடர்ந்த காட்டுப் பகுதியிலோ அல்லது பாலைவனத்திலோ காண முடியாது. அவைகள் மனிதனின் வாழ்விடங்கள், குறிப்பாக வீடுகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள வயல்வெளிகளில்தான் பொதுவாக தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும்.

கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகளின் இடுக்குகளில், வீட்டில் உள்ள போட்டோக்களின் பின்புறம் வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களைக்கொண்டு ஓர் ஒழுங்கற்ற முறையில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழும். ஆனால், தூக்கணாங்குருவியின் கூடு கட்டும் திறனோ, அழகோ அதன் வடிவமைப்பில் உள்ள நேர்த்தியோ இவை கட்டும் கூடுகளில் இருக்காது.

பெரும்பாலும் கூடுகட்டும் பணியை ஆண் பறவைகள்தான் மேற்கொள்கின்றன. குளிர்காலங்களில், தெருவோரம் உள்ள மின் விளக்குகளில் கூடுகட்டி இருப்பதைக் கிராமங்களில் காணலாம். ஏனெனில், கடும் குளிரிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தங்கள் கூடுகளை மின்விளக்குகளில் கட்டும். இந்தக் குருவிகள் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு தானியங்களின் விதைகள் மற்றும் புற்கள் ஆகும்.

மனிதனோடு நெருங்கிப் பழகுபவை என்று அறியப்பட்ட சிட்டுக்குருவிகள், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து புழுதியில் அரை வட்டவடிவில் பள்ளம் அமைத்து அதில் மண்குளியல் நடத்தும். மழைக்காலங்களில் தெருவில் தேங்கும் தண்ணீரில் அல்லது தண்ணீர் கிடைக்கும்போதெல்லாம் அவை கூட்டம் கூட்டமாக நீராடுவது வழக்கம். அதன் பிறகு இறகுகளைக் கோதிக் கொள்வதும், அதை உலர்த்திக் கொள்வதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், அதன் இறகுகளில் ஏதாவது ஒட்டுண்ணிகள் இருந்தால் அதை வெளியேற்றவும் தன் இறகைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்தான் அவைகள் இவ்வாறு செய்கின்றன.

சிதறும் தானியங்கள்தான் இந்தச் சிங்கார சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு. இன்று நவீனமயமானதன் விளைவு, எல்லா தானியங்களும் ஆலைகளிலேயே கல், மண் நீக்கிய பிறகு உடனே சமையல் செய்யும் விதமாக பாலிதீன் பைகளில் வந்துவிட்டன.

முன்பு உணவு சமைக்கும் முன் அரிசியை முறத்தில் வைத்து வீட்டு வாசற்படியின் முன் அமர்ந்து கல் குறுநொய் நீக்கி , புடைத்து உணவு சமைக்க உதவுவாள் அன்றைய பாட்டி. இன்றைய பாட்டி கருணை இல்லங்களில் அடைக்கலமானதால் இன்று பாட்டியும் இல்லை. முறமும் இல்லை. தானியங்களும் அதிகம் சிந்துவதில்லை. சிட்டுக்குருவிகளுக்கு உணவும் இல்லை.

இரண்டாவதாக, தானியங்கள், விதைகள்தான் இவைகளின் முக்கிய உணவாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளின் குஞ்சுகளுக்கு உணவுக்கு அவைகள் தோட்டத்துச் சிறு பூச்சிகள், புழுக்களையே முழுவதும் நம்பி உள்ளன.

முட்டையில் இருந்து வெளிவந்த குஞ்சுகளுக்கு முதல் உணவு இந்தத் தோட்டத்துப் புழுக்களும், பூச்சிகளும்தான். நமது கிராமத்து வீடுகளில் தாய்ப்பறவை அடிக்கடி வெளியில் பறந்துபோய் குஞ்சுகளுக்குப் பூச்சிகளைப் பிடித்து உணவாகக் கொடுத்துக் கொண்டிருக்கும். நமது வீட்டுக் கொல்லைப்புறத்தில் உள்ள செடிகளையெல்லாம் அழித்து கான்கிரீட் காம்பவுண்டுகளாக மாறிவிட்ட நகரச்சுழலில் எங்கே புதர்ச் செடிகளையும், உயிர் வேலிகளையும் காண முடிகிறது?அதையும் மீறி இப்போது நகரங்களில் காணப்படும் தோட்டங்களில் அழகுச்செடிகள் என்ற போர்வையில் வேற்றிடத்துத் தாவர இனங்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கின்றன. குறிப்பாக, நமது நாட்டுத் தாவரங்களும், புற்களும் இல்லாததால் அதை நம்பி வாழும் புழுக்கள், பூச்சிகள் அரிதாகிவிட்டன.

மிக முக்கியமாக விவசாயத்தில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக, நாம் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளை மட்டும் கொல்லவில்லை. மாறாக, சிட்டுக்குருவிகளின் சந்ததிகளையும் சேர்த்துத்தான் அழித்துவிட்டோம். ஆம், நாம் சிட்டுக்குருவிகளின் செல்லக் குழந்தைகளுக்கு உணவாக உள்ள பூச்சிகள், புழுக்களை பூச்சிக்கொல்லிகள் பதம் பார்த்து விடுவதால் அங்கே அவற்றுக்கு நிரந்தரமான உணவுப் பஞ்சம். சிட்டுக்குருவிகள் யாரிடம்தான் முறையிடும்?

மூன்றாவதாக, உணவுக்குத்தான் இப்படிப் போராட்டம் என்றால் மனிதனின் குறுகிய சிந்தனையின் விளைவாக கான்கிரீட் காடுகளாகிவிட்ட நிலையில் சிட்டுக்குருவிகள் எங்கே போய் வீடு கட்ட முடியும்? அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிய வீடுகள், எப்போதும் மூடியே இருக்கும். முழுவதும் மூடிய வீட்டுக்குள் எப்படி இவைகள் புதுக்குடித்தனம் புகுந்து குடியிருக்க முடியும்?

நான்காவதாக, இவற்றையெல்லாம் கடந்து ஒரு வழியாக ஓர் இடத்தைக் கண்டுபிடித்து அங்கு தன் சிறிய கூட்டைக் கட்டி வாழ்க்கையைத் தொடங்கலாம் என நினைத்தால் அங்குதான் சிட்டுக்குருவிகளுக்கு காத்திருக்கிருக்கிறது பேரதிர்ச்சி.

மனிதனின் நாகரிக வளர்ச்சியில் கைப்பேசி பிரதானமாகிவிட்டது. இவைகள் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்கிற நிலை உருவாகிவிட்டது. மாநகரங்கள், நகரங்களில் கைப்பேசி கோபுரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதன் விளைவு கைப்பேசி கோபுரங்களில்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அதிர்வலைகளால் பறவைகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை பெருமளவு குறையத் தொடங்கி உள்ளது.

கைப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியிடப்படும் "மின்காந்தக்' கதிர்வீச்சுகள் பறவைகளின் முட்டைகளை அதன் கருவிலேயே பதம் பார்த்து வருவதாக ஆராய்ச்சிகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

கைப்பேசிக் கோபுரங்கள் வெளியிடும் மிகக் குறைந்த அளவு கதிரியக்க அதிர்வலைகள் 900 முதல் 1,800 மெகாகர்ஸ். இவை மைக்ரோ அலைகள் என்று சொல்லக்கூடிய மின் காந்த அலைகள் என அழைக்கப்படுகின்றன.

இவை முட்டையின் மேல் தட்டின் கடினத்தன்மையை முற்றிலும் பாதித்து ஒரு மெல்லிய சவ்வு போன்ற தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. கைப்பேசிக் கோபுரங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவை பறவையினத்துக்கும் தேனீக்களுக்கும் அடிக்கப்பட்ட சாவு மணியாகின்றன.

ஏனெனில் பறவைகள் மிகவும் நுண்ணறிவு கொண்டவை. இந்த மின்காந்த அலைகள் பறவைகளின் உணர்வுத் திறனைப் பாதித்துத் தவறாக வழிகாட்டி தங்கள் உணவைத் தேடுவதில் சிக்கல் ஏற்படுத்தி மற்ற உயிரினங்களுக்கு எளிதில் உணவாக்கி விடுகின்றன.

சிட்டுக்குருவிகள் உணவுச் சங்கிலியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகள் உதவியுடன் எந்தச் செலவுமில்லாமல் இயற்கையான முறையில் பூச்சிகள் பெருகி பயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்தாத வகையில், பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால், நாம்தான் அதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் ரசாயன பூச்சிக்கொல்லிகள்தான் ஒரே தீர்வு என தவறாகப் புரிந்துகொண்டு நம் மண்ணையும், நம் வாழ்வையும் நஞ்சாக்கி வருகிறோம்.

அழிவது சிட்டுக்குருவிகள்தானே என அலட்சியமாக இருக்க வேண்டாம். இன்று சிட்டுக்குருவிகளின் அழிவு மனிதகுலத்தின் அழிவுக்கு அடித்த அபாய ஒலியாகப் பாவித்து நம் குழந்தைகளுக்குச் சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்து அவைகளைப் பாதுகாக்க நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் தானியங்கள், கொஞ்சம் தண்ணீர். அவை உங்கள் வீட்டில் தங்குவதற்கு ஒரு சிறிய பெட்டி. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நம் நாட்டுச் செடிகள். மரம் நடும்போது மறந்தும் அழகுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வேற்றிடத்து மரங்களை நட வேண்டாம். பூச்சிக்கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் அறவே தவிர்த்திடுவோம். இயற்கை முறையில் பயிரிட முயல்வோம். இயற்கை விவசாயத்துக்கு மாறுவோம். சிட்டுக்குருவிகள் பாதுகாப்பின் அவசியத்தை நம் வீட்டுக் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி அவர்களை இதில் ஈடுபடுத்துவோம்.

கிராமங்களில் அன்று, சிட்டுக்குருவிகள் தங்கள் வீடுகளில் கூடு கட்ட ஆரம்பித்தால், அதைப் பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். அவைகள் கட்டும் கூட்டுக்குக் குழந்தைகளால் எந்தவிதமான ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

சிட்டுக்குருவிகள் என்னும் இந்த சின்னத் தேவதைகள் தங்கள் வீட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என திடமாக நம்பினார்கள். இது கோடைகாலம் ஆதலால் சிட்டுக்குருவிகள் முதல் மற்ற பறவைகள் வரை உணவு மற்றும் தண்ணீருக்காகத் தவியாய்த் தவித்துப் போகின்றன. இந்த அடைக்கலத்தான் குருவிகள் மனிதரிடம் அடைக்கலம் வேண்டி நம் வீட்டின் கதவைத் தட்டி நிற்கின்றன. இவ்வளவு கஷ்டங்களிலும் இந்தச் செல்லச் சிட்டுகள் நம்மிடம் கெஞ்சிக் கேட்பதெல்லாம் செலவில்லாத சின்ன விஷயங்களை மட்டும்தான்.

நாம் செய்ய வேண்டியது கொஞ்சம் தானியம், கொஞ்சம் தண்ணீர், தங்க சிறிய இடம், முடிந்தால் சிறிய இயற்கை காய்கறித் தோட்டம், அப்புறம் பாருங்கள் இந்தச் சின்னச் சிங்காரத் தேவதைகள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். அத்துடன் உங்கள் குடும்பத்துக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் கொண்டுவரும்.

(கட்டுரையாளர்: பசுமை உயிரினப்பன்மை சரணாலயத்தின் செயல் இயக்குநர்,அலெக்ஸ்சாந்தர் .)

Newer Post Older Post

சுனாமி

சுனாமி


சுனாமி அல்லது கடற்கோள்அல்லது ஆழிப்பேரலை (யப்பானிய மொழி: ட்சு னமி "துறைமுக அலை") என்பது கடல் அல்லது குளம் போன்ற பாரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைக் தொடர்களைக் குறிக்கும். பூமி அதிர்ச்சி, மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.

ஏற்படும் முறை

பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின. இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமாக்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.

2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.

சுனாமி வரும் முறை

1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.

2. கடலாழ பூகம்பத்தினால் வரும்.

3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.

4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.

5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)

6. கடலில் பவுதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.


சுனாமி எச்சரிக்கை அமைப்பு:

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின.

அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’.

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.

இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

தோல்வி என்பது வீழ்ச்சியல்ல

தோல்வி என்பது வீழ்ச்சியல்ல

'பிளஸ் 2 தேர்வில், மாநிலத்திலேயே சென்னையைச் சேர்ந்த மாணவி முதலாவதாக தேர்வு; தேர்வில் வெற்றி கிடைக்காது என்று நினைத்து விஷமருந்தி, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட மாணவன் தேர்ச்சி பெற்றான். தமிழில் 100க்கு 98 பெற்ற மாணவிக்கு, செம்மொழி சங்கத்தினர் பாராட்டு. 'தேர்ச்சி பெறாத மாணவர் மூவர், பெற்றோருக்கு பயந்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு ஓட்டம்; குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவி, தாவணியில் மரணத்தைத் தேடிக் கொள்ள, பெற்றோர் மட்டுமல்ல, பள்ளிக்கூடமே சோகத்தில் மூழ்கியது...' - இது போன்ற செய்திகள், ஒவ்வொரு வருடமும், பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவு வரும்போது வருவது வழக்கமாய் போனாலும், அது பெற்றோரை சொல்ல முடியாத துன்பத்திற்கு ஆளாக்குகிறது. 'இளம் வயதினர் ஏன் இந்த முடிவுக்கு வருகின்றனர்? இதை தடுக்க வேண் டாமா?' என்ற கேள்விக்கு சமூக ஆர்வலர்களை பதில் தேட வைக்கின்றன. இருந்தாலும், ஆண்டுக்காண்டு இந்த எண்ணிக்கை பெருகி வருவது தான் மிகவும் வேதனைக்குரியது.

ஒவ்வொரு பெற்றோரும், பிள்ளைகள் பற்றி காண்கிற கனவு மட்டுமல்ல, 2020ல் இந்தியா எப்படி இருக்கும் என்பது பற்றி, 'கனவு மெய்ப்படட்டும்' என்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், குழந்தைகளை உற்சாகப்படுத்தி வரும் சூழ்நிலையில், இந்த நிலைமை தொடரலாமா? இச்செயலை பிள்ளைகளுக்கு யார் கற்றுக் கொடுத்தது? யாரும் கற்றுக் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. அப்படி இருக்கையில், இந்நிகழ்வு தொடர்வது, பள்ளி பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், தன்னம்பிக்கை குறைவதையும், இருக்கிற நம்பிக்கை தளர்வதையும் அல்லவா காட்டுகிறது? இது, சமுதாயத்திற்கு நல்லதா? இதை முறியடிக்க வேண்டாமா? பிஞ்சு மனங்களை நஞ்சாக மாற்றும் தற்கொலை என்ற பயங்கரவாதத்தை, விதையிலேயே கிள்ளி எறிய வேண்டாமா? ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் நினைத்து நினைத்து, சுவைத்து சுவைத்து, அசை போடுகிற மாணவ பருவத்தை துளிர விடாது தூபம் போடும் செயலை எதிர்க்க வேண்டாமா? படிப்பில் சிரமப்படும் பிள்ளைகள் மட்டுமல்ல, நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் கூட, சில நேரங்களில் இந்த முடிவை தேடிக்கொள்வதும் உண்டு. காரணம், படிக்க முடியவில்லை; முயற்சி எடுத்தும் முடியால் போய் விடுகிறது; பெற்றோரின் எதிர்பார்ப்பின் மிகுதி அல்லது அவர்களின் அதிகப்படியான கண்டிப்பு; அவமானத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற எண்ணம். காரணம் எதுவாக இருந்தாலும், நிகழ்வுகள் தொடராமல் இருப்பதற்கு வழிதான் என்ன?

'அன்றாட வேலைகளை ஆசையோடு செய்; அதுதான் வெற்றியின் ஒருவரி ரகசியம்' என்ற வரியை நினைவு படுத்துங்கள். 'தோல்வி என்பது விலகி நிற்கும் வெற்றி' என்பதை பிள்ளைகளுக்கு, புரிய வைக்க வேண்டும். தேர்வில் தோற்றால் வாழ்வே முடிந்து விடாது. ஆபிரகாம் லிங்கனுக்கு, 15 வயதில் தான் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பே கிடைத்தது. அவர் பள்ளியில் படித்த மொத்த நாட்கள் 365 தான். படிப்பதற்கு வாய்ப்பும், வசதியும் இருக்கும் போது, மனம் தளர்ந்து விடலாமா? அதைவிட சிறந்து காட்ட வேண்டாமா? ஒரு கனம் சிந்தித்து பாருங்கள்... தற்கொலை என்பது நொடியில் எடுக்கும் முடிவு தான். மனித வாழ்வு என்பது, கிடைத்ததற்கரிய பெரும் பாக்கியம். சவால்களை சமாளிக்காது, வெற்றிப் பாதையிலிருந்து விலகி கோழைகளாய் சாவதை, எந்த வகையில் எடுத்துக் கொள்வது? வாழ்வதோ ஒரு முறை, அதில் வாழ்ந்து, சிறந்து காட்ட வேண்டும். வாழ்வில் வெற்றியை ஏற்றுக் கொள்வது போன்று, ஏற்படுகிற சிறு சறுக்கலையும் சிறு சிறு தோல்விகளையும், ஏற்று கொள்கிற மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
.
'திறமையற்றவர்கள் என்று யாரும் இல்லை. என்றாலும், சிலர் தோல்வி அடைவதின் காரணம் அத்திறமையை பயன்படுத்தாததே' என்கிறார் கால்வின் கூலிட்ஜ் என்ற அறிஞர். பிளஸ் 2 தேர்விலோ அல்லது 10ம் வகுப்பு தேர்விலோ வெற்றி பெறவில்லை என்றால், வாழ்வு முடிந்து விட்டதாய் பொருள் அல்ல. ஒவ்வொரு மாணவனுக்கும், பிளஸ் 2 என்பது வாழ்வில் அடித்தளம் தான். அந்த அடித்தளத்தில் ஆரம்ப வாழ்க்கை ஓரளவு நிர்ணயிக்கப்படுவது உண்மை தான். அதற்காக அடித்தளத்தில் கொடுக்கிற நெருக்கம், அடித்தளமே ஆட்டம் கண்டு விடக்கூடாது. முதலுக்கே மோசம் வந்து விடக்கூடாது. 'நான் அப்பவே சொன்னேன்... நீ நன்றாய் படித்திருந்தால் இது போல் நடக்குமா?' என்று சொல்வதை காட்டிலும், 'பரவாயில்லை... மனம் தளராதே; நம்பிக்கையை கைவிடாதே. வருகிற தேர்வில் ஒரு கை பார்த்து விடலாம்' என்ற வார்த்தைகள், நிச்சயம் ஏமாற்றத்தை நீக்கி, மாற்றத்தை கொடுக்கும்.

பெற்றோர் இக்காரியத்தில், அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். 10 மாதம் சுமந்து வளர்த்து, 16 வயதில் முழுமையாக இழக்கிற இழப்பை, எந்த பெற்றோரால் தான் தாங்கி கொள்ள முடியும். உங்கள் கவலையை கோபமாக்கி, திட்ட வேண்டாம். அதிலும், பக்கத்து வீட்டு பிள்ளைகளோடு, ஒருபோதும் ஒப்பிட்டு சொல்ல வேண்டாம். 'நான் திட்டியதால் தானே, இதுபோல் செய்து விட்டாய்; இனி திட்டவே மாட்டேண்டா...' என்று, கதறி அழுத பெற்றோர் பலரை பார்க்க நேர்ந்துள்ளது. பிள்ளைகளுக்கு, வருத்தம் ஏற்பட்டுள்ள நேரத்தில், உங்களின் ஆதரவும், அன்பும், பரிவும் தேவைப்படுகிறது என்பதை, நீங்கள் உணர வேண்டும். உங்களை விட்டால் வேறு யார் அவர்களுக்கு, தைரியம் கொடுக்க முடியும், தோல்வி, வாழ்க்கையின் இயல்பு என்பதை உணருங்கள். 'எனது நேற்றைய சந்தோஷம் நாளைக்கு தீர்ந்துவிடும். போன வாரத்து துக்கம் இந்த வாரம் சாதாரணமாய்த் தெரியும். திங்கட்கிழமை இருந்த பயமும், வேதனையும், புதன் கிழமை வரை கூட இருப்பதில்லை. இந்த புரிதல் மனிதனுக்கு வந்துவிட்டால், சோர்ந்து போகாமல் தன் கடமையை தொடர்ந்து கொண்டிருப்பான்' என்கிறார் பிரபல எழுத்தாளர் ஒருவர். எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிள்ளைகளுக்கு, ஆசிரியர்களும், பெற்றோரும் ஆதரவாக இருந்து, அவசரப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல், நீங்களே அவர்களின் அவசரத்திற்கு, ஆதாரமாகி விடக் கூடாது.

உடலில் மிகப்பெரிய குறைகளை கொண்டவர்கள், அதை தங்களின் நிறைகளாக மாற்றி, ஜொலித்தவர்களை சற்றே பாருங்கள். அதன்பின், ஒரு முடிவுக்கு வாருங்கள். பின், வாழ்ந்து காட்டுங்கள். போலியோ பாதித்த ரூஸ்வெல்ட், அமெரிக்க அதிபராக ஆகவில்லையா? சிறுவயதில் சரியாக ஆகாரம் இல்லாததால், உடல் உறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சி அடையாது, பார்த்தவர்கள் எல்லாம் பரிகாசம் செய்யும் தோற்றத்தில் அமைந்துவிட்ட சார்லி சாப்ளின், தன்னை பார்த்து சிரித்தவர்கள் எல்லாரும் காசு கொடுத்து, தன் சிரிப்பை பார்க்க வைக்கவில்லையா? தன்னைப் போல் கண் பார்வையில்லாதவர்கள் குறையைப் போக்க, அவர்கள் படிப்பதற்கு எழுத்துக்களை கண்டுபிடித்து கொடுத்தார் பிரெய்லி. காது கேட்காத தாமஸ் ஆல்வா எடிசன், பிறர் கேட்டு மகிழ கிராமபோனை கண்டுபிடித்தார். 'தடைகள், சறுக்கல்கள் மற்றும் தோல்விகளை ஒழிக்கும் மருந்து, இரண்டு ரசாயன கலவையால் ஆனது. அவை, 'பயிற்சி, முயற்சி' என்பவை. தோல்வியை கண்டு துவண்டு விட வேண்டாம். 'கடின உழைப்பு உன் கைவசமானால், பின், கவலைப்பட அவகாசம் ஏது?' முயற்சி செய்யுங்கள்; வெற்றி பெறுங்கள்.

comady

கலக்கல் காக்டெயில்-140

அழகிரி நீக்கம் 

தி.மு.க கட்சித்தலைமை இன்று அஞ்சாநெஞ்சன் அழகிரியை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கியிருக்கிறது. முதலில் தாற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரி எல்லா எதிர்கட்சி தலைவர்களையும் சந்தித்து தி.மு.க வின் தோல்விக்கு அச்சாரம் போட்டுக்கொண்டிருந்தார். கட்சி தலைமை இதற்குமேல் பொறுமையாக இருக்க முடியாது என்று ஒரு முடிவு எடுத்துவிட்டது.

தளபதிக்கு இருந்த ஒரே எதிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதை பத்து வருடம் முன்பே செய்திருந்தால் கட்சியின் மானம் இவ்வளவு தூரம் கப்பலேறியிருக்காது. ஸ்டாலினுக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் இப்பொழுது ஒன்று கூடியிருக்கிறார்கள், இனி இந்த தேர்தலில் இதன் தாக்கம் தெரியும்.

 அம்மா சொத்து............ஐயோ அம்மம்மா...........

பெங்களுரு சொத்துக்குவிப்பு வழக்கில்  அரசு வழக்கறிஞர் பவானி சிங் அம்மாவின் சொத்துக்களை பட்டியலிட்டு கோர்ட்டிடம் சமர்ப்பித்திருக்கிறார்.....அதன் படி.

வாலாஜாபாத் ------------------------600 ஏக்கர்
சிறுதாவூர்-------------------------------25  ஏக்கர்
நீலாங்கரை ---------------------------2     ஏக்கர்
கொடநாடு -----------------------------800 ஏக்கர்
காஞ்சிபுரம் ----------------------------200 ஏக்கர்
கன்னியாகுமரி ----------------------1900 ஏக்கர்
திருவைகுண்டம் --------------------200 ஏக்கர்
மற்றும் ஐதராபாத் திராட்சைத்தோட்டம்.................

அம்மா ஆட்சியில் 19991-1996 ஹெலிகாப்டரில் பறந்து பறந்து வாங்கிய சொத்துக்களாம்.............

மக்களுக்கு தெரியும் இரண்டு கட்சிகளுமே  சுரண்டுகிறார்கள் என்று இருந்தாலும் அவர்கள் பெருந்தன்மையானவர்கள், மாறி மாறி குத்தி இரண்டு பேருக்குமே வாய்ப்பளிப்பார்கள்.

க்வார்ட்டரும் கோழிக்கறியும் கிடைத்தால் நீங்க எங்க சொத்து வாங்கினால் எங்களுக்கு என்ன?

ரசித்த கவிதை

வாய் பிளந்து தூங்குங்கள் 

பேசுகிறார்கள்
பேசுகிறார்கள்
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
பேரம் இன்னும் படியவில்லை

பேரம் எப்போது படியும்?
பேச்சு எப்போது முடியும்?
தெரியாது அவர்களுக்கே!

அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

யாருக்கு எத்தனை
சீட் பிரித்தால்
மக்களை காப்பாற்றமுடியும் என்று
கணக்குப் போடுகிறார்கள்

எனக்கு இத்தனை
சீட் இல்லை என்றால்
இந்த மக்களை
எப்படி காப்பாற்றுவேன் என்று
கலக்கத்தில் வேறு இருக்கிறார்கள்

பின்பு, சகலமும் மறந்து
சீட் பிரிப்பதில்
அக்கறையோடு இருக்கிறார்கள்

சொர்க்கலோகம்
பக்கத்தில் இருக்கிறது
மனிதர்களே
வாய் பிளந்து தூங்குங்கள்!------------------கனவுதாசன்

கீச்சு கீச்சுன்னு கீச்சுறாய்ங்க 

ஹலோ தேர்தல் ஆணையமா,எல்லா பயல்ட்டையும் காசு வாங்கியாச்சு,இந்த நோட்டா பய மட்டும்தான் பாக்கி!எவ்ளோ தருவான்னு கேட்டு சொல்லுங்க!----------உடன்பிறப்பே

நான் திமுககாரன்,அறிவாலயம் எங்கள் சொத்து -அழகிரி.#அப்பா போகும்போது அறிவாலயம் யாருக்குன்னு உயில் எழுதி வெச்சுட்டு போவாரு.அப்போ பாத்துக்கலாம்------------சுபாஷ்

இந்தியாவின் ஆபத்தான ஆறுகள்..ஆறு....???


இந்தியாவின் ஆபத்தான ஆறுகள்..ஆறு....???



அனு உலைக்கு எதிராக இந்தியாவின் காந்தி கண்டுபிடித்த அமைதிவழியில போராட்டத்தை நடத்தி அந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் இந்திய அரசின் கெண்டைக்கால் மயிரைக்கூட அசைக்க முடியாது என்று நிருபித்தவர்கள்.


கடைசியில் டெல்லியில் 49 நாட்கள் ஆண்டும் எதுவுமே செய்ய முடியாமல் ராஜினாமா செய்து பெருமை பெற்று ஜனநாயகத்தை தூக்கி நிறுத்த , எளிய தமிழர்களை இளிச்ச வாயர்களாக ஆக்கும் ஆ...ம்.. ஆத்மீ கட்சியில் இணைத்துக் கொண்ட அனுஉலைக்கு எதிரான போராட்டகுழு 


தமிழ்நாட்டில் உள்ள ஆறு ஆறுகளை ஆபத்தான ஆறுகள் என பட்டியலிட்டுள்ளது.


அந்த பட்டியலில் உள்ள இந்தியாவையும் தமிழ்நாட்டையும் ஏற்கனவே நாசப்படுத்திய ,இனி படுத்த போகும் ஆறுகள். இவைகள்தான்.


காங்கிரஸ்,பாஜக,அதிமுக,திமுக, வலது கேப்மாரி,இடது கேப்மாரி, முதலிய கட்சிகள்தான்.


(இவைகளுடன் அந்தந்த கிளை ஆறுகளும் ஆபத்தான ஆறுகளுடன். சேர்ந்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளவும்)


இந்த எளிய மக்கள் கட்சிதானா !!அம்மாம் பெரிய ஆறுகளை தடுத்து நிறுத்தப்போகுது.......????


ஆற்றின் போக்கையே தடுத்து நிறுத்த போவதாக சவால் விட்ட எளிய மக்கள் கட்சி டில்லியிலுள்ள ஆறுகளையே தடுத்து நிறுத்த முடியல.............


இது எப்படி தமிழ்நாட்டு ஆறுகளை தடுத்து நிறுத்தப்போவுது. என்னதான் அனு சக்திக்கு எதிரானவர்கள் உண்மை அறிக்கை விட்டாலும் ஆற்றில் விழந்த மக்களை கரை சேர்க்கத்தான் முடியுமா??


நூறு பலசாலிகளை ஒல்லியான கதாநாயகன் அடித்து வீழ்த்துவது போல தமிழ் நாட்டிலேயும் ஒருவாட்டி பாக்கலாம்.