Sunday, February 16, 2020

இனிக்கும் கணக்கு

1. ஒரு ஊரில், ஒரு விவசாயி ஒரு கலம் நெல்லை வயலிலே உலரவைத்தான். அந்த நெல்லை குருவிகள் கூட்டமாக வந்து அனைத்து நெல்லையும் தின்றுவிட்டன. அந்த விவசாயி ஒரு மண்ணாங்கட்டியை எடுத்து அக்குருவிகளின் கூட்டத்தின் மீது விட்டெறிந்தான். அந்த மண்ணாங்கட்டி பட்டு ஒரு குருவி இறந்து விட்டது. இறந்த குருவியின் வயிற்றைக் கூறிட்டுப் பார்த்தால் அதில் மூன்று நெல்கள் இருந்தன. எனில், அவனது அனைத்து நெல்லையும் தின்ற குருவிகள் எத்தனை?

[குறிப்பு: ஒரு கலம் = 96 படி, ஒரு படிக்கு 14400 நெல்]

2.ஒரு நாட்டில் மட்டைப்பந்து (Cricket) விளையாட்டு விளையாட பல நாடுகளைச் சேர்ந்த 5 அணிகளைத் தயார் செய்ய நினைத்தனர். ஒரு அணிக்கு 11 விளையாட்டு வீரர்கள்: 6 மட்டைவீச்சாளர்கள், 5 பந்துவீச்சாளர்கள். மொத்தமாக 10 நாடுகளிலிருந்து 36 மட்டைவீச்சாளர்களும், 25 பந்துவீச்சாளர்களும் இருந்தனர். மட்டைவீச்சாளர்கள் தரவரிசைப்படி 1 முதல் 36 வரை வரிசைப்படுத்தப்பட்டிருந்தனர். இதேபோல், பந்துவீச்சாளர்களும் தரவரிசைப்படி 1 முதல் 25 வரை வரிசைப்படுத்தப்பட்டிருந்தனர். இப்பொழுது ஒவ்வொரு அணிக்கும் 11 வீரர்களை பின்வரும் நிபந்தனைகளிம் கீழ் தேர்ந்தெடுக்க வேண்டும்.
1. ஒவ்வொரு அணியின் 6 மட்டைவீச்சாளர்களின் தரவரிசையைக் கூட்டினால், 111 வர வேண்டும்
2. ஒவ்வொரு அணியின் 5 பந்து வீச்சாளர்களின் தரவரிசையைக் கூட்டினால் 65 வரவேண்டும்.
மொத்தமாக 6 மட்டைவீச்சாளர்கள் மட்டும் தேர்வு செய்யப்படவில்லை. 5 அணிகளின் வீரர்களின் தரவரிசை என்ன? இதற்கு ஒரு தீர்வுதான் உள்ளதா? ஒன்றுக்கு மேல் என்றால் இப்படி எத்தனை அணிகள் அமைக்க முடியும்?

3. ஒரு ஊரில் ஒரு முத்து வியாபாரி இருந்தார். ஒரு நாள் அவர் அரசரைச் சந்தித்து முத்துக்களை விற்க வந்தார். ஒரு முத்துப்பெட்டியில் 49 முத்துக்களை தர வரிசையாக அடுக்கிவைத்திருந்தார். முதல் முத்துக்குப் பணம் 1 ரூபாய், இரண்டாவது முத்துக்குப் பணம் 2 ரூபாய், இப்படியே, 49 வது முத்துக்குப் பணம் 49 ரூபாய் என்று கூறி அந்த முத்துப் பெட்டியில் உள்ள முத்துக்களை அரசருக்குக் காட்டினார். அரசர் அதனை வாங்குவதில் ஆர்வமாக இருந்தார். ஆனால், சில நிபந்தனைகளின் கீழ் வாங்கிக் கொள்வதாகக் கூறினார். எனக்கு 7 குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் 7 பேருக்கும் இந்த முத்துக்களைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால், பங்கிடுவதில் முத்துக்களும் சரியாக இருக்க வேண்டும். விலையும் சரியாக இருக்க வேண்டும். அப்படி உங்களால் கொடுக்க முடிந்தால் வாங்கிக் கொள்வேன் என்றார். முத்து வியாபாரி முத்துக்களை எவ்வாறு பகிர்ந்தளித்தார்?
[15/02, 8:28 PM] Ganesh: ஒரு பண்ணையில் சில ஆடுகள், சில பசுக்கள், சில எருமைகள் இருந்தன. 1 ஆடு கால் நாழி பால் தரும். 1 பசு 2 நாழி  பால் தரும். 1 எருமை 4 நாழி பால் தரும். அந்தப் பண்ணையில் மொத்தம் இருந்த கால்நடைகளும் நூறு, தினமும் கிடைக்கும் பாலும் நூறு நாழி. எனில், மொத்த ஆடுகள் எத்தனை? பசுக்கள் எத்தனை? எருமைகள் எத்தனை?

பக்கத்து வீட்டுப் பண்ணையாரிடமும், இதே போன்ற பண்ணை இருந்தது. இரு பண்ணையார்களின் வீட்டில் உள்ள மொத்தக் கால்நடைகளின் எண்ணிக்கையும் பால் அளவின் எண்ணிக்கையும் சமம். ஆனால் முதல் பண்ணையாரின் வீட்டில இருந்த பசுக்களை விட இரண்டாவது பண்ணையாரிடம் பாதி பசுக்களே இருந்தன. எனில், இருவரது பண்ணைகளிலும் இருந்த மொத்த ஆடுகள், பசுக்கள், எருதுகளின் எண்ணிக்கை எத்தனை?

விடை காணுங்கள் நண்பர்களே...

No comments: