Sunday, December 15, 2019

புதிய பார்வை......புதிய கோணம்....

*விவேகம் வெற்றியைத் தரும்*

கடும் போட்டிகள் சவால்கள் நிறைந்த இன்றைய உலகில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று விவேகம்.

அடுத்து என்ன செய்வது? என்று எல்லா காலக் கட்டங்களிலும் தெளிவாக அறிந்து இருப்பது தான் விவேகம்.

கடலின் ஆழத்தில் முத்தைக் கண்டு பிடிப்பது போல பிரச்சனைகளின் ஆழத்தில் முடிவை, தீர்வைக் கண்டு பிடிக்கிறது விவேகம்.

விவேகம் ஏட்டுச் சுரைக்காய் அல்ல. வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்து விவேகத்துடன் எதிர்கொண்டு கடந்து வந்தவர்களே இன்றைய வெற்றியாளர்கள்.,

ஜென் ஆசிரியரிடம் மூன்று இளைஞர்கள் வந்தார்கள்.
அவர்கள் ஜென்னிடம் தங்களை உங்கள் சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டார்கள்..

அவர்களின் அறிவை சோதிக்க எண்ணிய ஜென் மறுநாள் தம்மை வந்து பார்க்குமாறு கூறினார்.

மறுநாள் அவர்கள் வரும் போது தமது காதில் ஓணான் புகுந்து தாம் இறந்து விட்டதாக சொல்லச் சொன்னார்.

மறுநாள்அந்த மூவரும் வந்த போது முனிவரின் மனைவி அவர் ஏற்கனவே சொன்னவாறே சொன்னார்

முதலாமவன், "அவரது ஜாதகப்படி சனிதிசை என்பதால் இப்படி ஆகி இருக்கும்!"என்று வருத்ததோடு கூறி விட்டு அங்கே நிற்காமல் சென்று விட்டான்.

இரண்டாமவன், " முன் ஜென்ம வினைப்படி இப்படி நடந்து இருக்கலாம்!"என்று சொல்லி விட்டு அவனும் கவலையுடன் சென்று விட்டான்.

மூன்றாமவன், முனிவரின் மனைவி முகத்தை உற்றுப் பார்த்தான்.

பின்னர்ஆணித்தரமாக. "ஆசிரியர் உயிரோடு தான் இருக்கிறார்!" என்றான்.

அதுவரை வீட்டுக்குள் ஒளிந்து கொண்டு இருந்த ஆசிரியர் வெளிப்பட்டார்..

அது..சரி..நீ எப்படிக் கண்டு பிடித்தாய்?" என்று கேட்டார்.

"அய்யா, உங்களின் மறைவினால் வரக் கூடிய துக்கம் உங்கள் மனைவியின் முகத்தில் கொஞ்சமும் இல்லை. அடுத்தது ஒருவரின் காதினுள் ஓணான் நுழைவது என்பது நடக்காத செயல்.

எனவே தான் அப்படி உறுதியாகச் சொன்னேன் என்றான்.. விவேகத்தோடு சிந்திக்கத் தெரிந்த அவனையே தனது சீடனாக ஏற்றுக் கொண்டார் அந்த ஜென் ஆசிரியர்,,

எது சரி, எது தவறானது என சிந்தித்து முடிவு செய்வதே விவேகம் ஆகும்.

இருள் தடுமாறச் செய்கிறது. விவேகம், ஞானம் என்கிற வெளிச்சம் உற்சாகம் தருகிறது. அபரிதமான நம்பிக்கையைத் தருகிறது.. விடியலைக் காண்கிறது.

No comments: