Monday, January 29, 2018

ஈரோடு...

ஈரோடு

ஏ.எம்.மெக்ரிகர் என்ற, ஆங்கிலேயர் தலைமையில் ஏழு நியமன உறுப்பினர்கள் கொண்ட, 'ஈரோடு நகர பரிபாலன சபை', *1871ல், செப்.,16ல்* அமைக்கப்பட்டது. இதுவே ஈரோடு வளர்ச்சிக்கு கால்கோள் நாட்டப்பட்ட நாள். அந்த வகையில், மஞ்சள் மாநகரம் என்றழைக்கப்படும் ஈரோடு, 146வது நினைவு நாளை கொண்டாடுகிறது. இந்த நாளைப் போற்றும் வகையில், ஈரோடு பற்றிய, சில சுவாரசியமான செய்திகளை பார்ப்போம்.தலைநகராக திகழ்ந்தது: கொங்கு, 24 நாடுகளில் ஒன்றான, பூந்துறை நாட்டின் பழம்பெரும், 32 ஊர்களில் ஈரோடு ஒன்று. இதில், 24 நாடுகளை, 4 கட்டமனையாக (மாகாணம்) பிரித்ததில் ஒன்றான, ஈரோடு கட்டமனையின் தலைநகராக ஈரோடு விளங்கியது. இங்கு ஒரு பெரிய மண் கோட்டை கட்டப்பட்டது.
அதில் சிறுபடையும் தளவாய் கந்தாசாரம், சேனபாகம், சேர்வைகாரர், அட்டவணை போன்ற அதிகாரிகளும் இருந்தனர். மதுரை நாயக்கர், மைசூர் உடையார், திப்பு, ஐதர் கம்பெனிப் போர்களில் ஈரோடு கோட்டை மிக முக்கிய இடம் பெற்றது. இவற்றால் ஈரோடு பெரும் அழிவைக் கண்டது. '2,000 வீடுகள் இருந்த ஈரோட்டில் ஆள் அரவமற்ற, 400 வீடுகளே எஞ்சின' என்கிறார் ஸ்வார்ட்ஸ் பாதிரியார்.

*அகழி மேடு அகில் மேடானது:* கடந்த, 1878ல் ஏற்பட்ட கொடிய தாது வருடப் பஞ்சத்தில், நிவாரண வேலைக்காக பெரிய மண்கோட்டை இடிக்கப்பட்டது.

கோட்டை மண்ணை அகழியில் கொட்டினர். அகழி மேடாகி இன்று, 'அகில்மேடு வீதி' எனப் பெயர் பெற்றது. திப்பு மறைவுக்குப் பின் (1799), கம்பெனியினர் பவானியைத் தலைநகராகக் கொண்டு அமைக்கப்பட்ட நொய்யல் வடக்கு மாவட்டத்தில், ஈரோடு இருந்தது.

கோயம்புத்தூர் மாவட்டம், 1804ல் உருவானபோது, *பெருந்துறை தாலுகாவுக்கு சேர்ந்த, ஒரு கிராமமாக* ஈரோடு இருந்தது; 1868ல் ஈரோடு தாலுகா ஏற்பட்டு, தாலுகா தலைநகரானது.

*ஈரோடை தான் ஈரோடாக மாறியது:* *பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் பள்ள ஓடை என்ற, இரண்டு ஓடைகட்கு* இடையில் அமைந்ததால், *ஈரோடை - ஈரோடு ஆயிற்று.*

ஈரோடு மறந்தை, உறந்தை, மயிலை, கபாலபுரி என்ற பெயர்களையும் பெற்றதை தலபுராணம் கூறும்.
*ஈரோடு கோட்டை, ஈரோடு பேட்டை* என இரு பகுதியாக அழைக்கப்பட்டது. சோழர் காலக் கல்வெட்டு, *'ஈரோடான மூவேந்த சோழச் சதுர்வேத மங்கலம்'* என்று கூறுகிறது.ராஜ்ய அபிஷேக விண்ணகரம்: ஈரோட்டில் மூன்று சிவன் கோவில், மூன்று பெருமாள் கோவில், மூன்று அம்மன் கோவில், மூன்று மாரியம்மன் கோவில் இருப்பது சிறப்புமிக்கது. சோழர் கட்டிய கொங்கு நாட்டு முதல் கோவிலும் (907 ல் பள்ளிகொண்ட பெருமாள் கோவில்), முதல் கொங்குச் சோழன் மகிமாலய இருக்குவேள் ஆன *வீரசோழன் கட்டிய கோவிலும் (932ல் மகிமாலீசுவரம்) காவிரிக் கரையில் கரிகாலன் கட்டிய கரிகால சோழீசுரமும்* இங்குள்ளது.

கொங்கு நாட்டை வென்ற பிற அரசர்கள், ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் வந்து, கொங்கு நாட்டு அரசராக முடிசூடுவது வழக்கம். அதனால் இக்கோயில் ராஜ்ய அபிஷேக விண்ணகரம் எனப்பட்டது.ஈ.வே.ரா., வீட்டில் தங்கிய காந்தி: ஈ.வே.ராமசாமி, 1917ல், ஈரோடு நகராட்சி மன்றத் தலைவராகி, மூன்றாண்டு பதவி வகித்தார். ஈரோடு விடுதலை இயக்கத்தில் தன் பங்கைச் சிறப்பாகச் செலுத்தியது. ஈரோட்டுக்கு நான்கு முறை வந்த *காந்தியடிகள், தம் இரண்டாவது வருகையின் போது, 1921, செப்.,25ல் ஈ.வே.ரா., வீட்டில்* தங்கினார்.

அன்று அவர் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும் கள்ளின் கொடுமையைக் கூறினர். இதனால் காந்தியடிகள் கள்ளுக்கடை மறியலை காங்கிரஸ் திட்டங்களில் ஒன்றாகச் சேர்த்தார். இதுகுறித்து, *1921 டிச.,22ல் யங் இந்தியா* இதழில், *'ஈரோட்டுப் பெண்கள்' என்ற தலைப்பில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.* கள்ளுக்கடை மறியலை நிறுத்தி வைசிராயிடம் பேசலாம் என்று, சில தலைவர்கள் கூறியபோது, 'மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை.

அது ஈரோட்டு பெண்கள் இருவர் கையில் உள்ளது' என்று காந்தியடிகள் கூறினார்.1860ல் அரசு தொடக்கப் பள்ளி: காந்தியடிகளுக்கு அவர் வாழும்போதே, ஈரோட்டில், 1927, ஏப்.,9ல் மற்றும் 1939 அக்.,1ல் என இரண்டு சிலைகள் திறக்கப்பட்டன. கடந்த, 1822ம் ஆண்டு கணக்கின்படி, ஈரோடு உள்ளிட்ட அன்றைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் மக்கள் தொகை, ஆறு லட்சத்து, 38 ஆயிரத்து, 199 பேர். பள்ளி செல்பவர் எண்ணிக்கை, 8,930. படித்தோர் விழுக்காடு, 1.39 சதவீதம்.

அதிலும் பெண்கள் பள்ளி சென்றவர், 82 பேர் மட்டுமே. கடந்த, 1860ல் ஈரோட்டில் அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இன்று அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியாக அது விளங்குகிறது. இதையடுத்து, 1876ல் நகர பரிபாலன சபை டவுன் தொடக்கப்பள்ளி தொடங்கியது.முதல் கல்லூரி உதயம்: தாசப்பையர், அண்ணாசாமி அய்யங்காரும் சேர்ந்து, 1887ல் டவுன் உயர்நிலைப் பள்ளி தொடங்கி நடத்த முடியாமல், லண்டன் மிஷின் சபைக்கு விற்றனர்.

ஈ.வே.ரா., தந்தை வெங்கடநாயக்கரும், முதலாளி ஷக் தாவூதின் தந்தையார் அலாவுதீன் சாயயும் (டாக்டர் அமானுல்லா பாட்டனார்) எல்லாச் சமூகத்தாரையும் இணைத்து, 1899ல் மகாசன உயர்நிலைப் பள்ளி தொடங்கினர். *ஜூலை, 12, 1954ல் மகாசனக் கல்லூரியை ஆரம்பித்தனர்.* இதுவே மாவட்டத்தின் முதல் கல்லூரி, மகாசன கல்லூரி, சிக்கய்ய நாயக்கர் மகாசனக் கல்லூரியாகி, இன்று சிக்கய்ய நாயக்கர் கல்லூரியாக உள்ளது.பாரதிக்கும் பங்குண்டு: கடந்த, 1927, ஏப்., 9ல் மூன்றாம் முறை நகராட்சித் தலைவராக இருந்த, சீனிவாச முதலியாரால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிய தண்ணீர் தொட்டி அருகே, *'சீனிவாசா பார்க்'* ஏற்படுத்தப்பட்டது. (பின்னர் பீப்பிள்ஸ் பார்க், வ.உ.சி., பூங்கா) காரனேஷன் ஹால், கட்டப்பட்டு அதில், *'காக்ஸ் ரீடிங் ரூம்'* திறக்கப்பட்டது.

திறப்பு விழா செய்தவர் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன். ஈ.வே.ரா., குடியரசு பதிப்பகம் தொடங்கி, 100க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டார். கி.பி. *1282ல் வெட்டப்பட்ட காலிங்கராயன் கால்வாயால்,* ஈரோடு வளம் பெற்றது.

கால்வாயின் கீழ் பெரும்பள்ளம் செல்ல, *1282ல் பாலம் கட்டப்பட்டது.*உலகப் பாலங்கள் நூலில், இது இடம் பெற்றுள்ளது. *வக்கீல் தங்கப்பெருமாள் பிள்ளை தொடங்கிய *பாரதி வாசக சாலை ஆண்டு விழாவுக்கு, ஜூலை, 31, 1921 அன்று பாரதியார் வந்தார*். இதுவே அவரின் கடைசி வெளியூர் பயணமாக அமைந்தது.

*மஞ்சள் மாநகரம்:* கடந்த, 1973ல் நூற்றாண்டு விழாவை, நகராட்சி கொண்டாடியது.

*டிச., 29, 2007ல் ஈரோடு நகராட்சி, மாநகராட்சி ஆனது.* ஈரோடு மஞ்சள் மார்க்கெட், இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜவுளி உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளது.
விசைத்தறியில் முன்னணியில் உள்ளது.

மத்திய, மாநில உதவியுடன் *ஆசியாவிலேயே மிகப் பெரிதாக கட்டப்பட்டுள்ள, 'டெக்ஸ்வெலி' ஜவுளி விற்பனை மையம்* ஈரோட்டில் உள்ளது. எண்ணெய் உற்பத்தி, லாரி போக்குவரத்தும் சிறப்பாக நடக்கிறது. தோல் தொழில் பெரிய அளவில் நடக்கிறது. புகழ் பெற்ற பெரிய பல்துறை மருத்துவமனைகள் பல உள்ளன.
போரையே வென்ற ஊர்: மரம் வளர்ப்பு, ஊனமுற்றோர் மறுவாழ்வில் சக்தி மசாலா நிறுவனம் சிறப்பான பணி செய்கிறது.

இந்திய அளவில் புகழ் பெற்ற பல கட்டுமான நிறுவனங்கள் உள்ளன. 1944ல் ஈரோட்டில் முதலில் தொடங்கப்பட்ட கலைமகள் மேல்நிலைப் பள்ளியில், உலக அளவில் புகழ் பெற்ற அருங்காட்சியகம் உள்ளது. *ஈ.வே.ரா., நூற்றாண்டு விழாவையொட்டி, 1979, செப்.,17ல் அமைக்கப்பட்ட மாவட்டத் தலைநகரான ஈரோடு,* முன்பு ஏற்பட்ட போர்கள், புயல், பூகம்ப அழிவை வென்று, இன்று பற்பல துறைகளிலும் முன்னேறி வருகிறது. நகரின் முன்னேற்றத்தில் நாமும் பங்கெடுப்போம்.

நம் நகரை காப்போம்.- *புலவர் செ.ராசு, முன்னாள் தலைவர், கல்வெட்டு தொல்லியல் துறை, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.*

நன்றி புலவர்.செ.ராசு...அவர்கள்...

No comments: