Saturday, January 13, 2018

பொங்கல் வரலாறு...


தினம் ஒரு தகவல்.

பொங்கல் பண்டிகை வரலாறும், கொண்டாடும் விதமும்!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பற்றியும், அதைக் கொண்டாடும் முறைகள் பற்றியும் இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

பொங்கல் தோன்றிய விதம்:

பொங்கலுக்கெல்லாம் மூதாதை விழா எனப்படுவது தைந்நீராடல் ஆகும். சங்க காலத்தில் தை மாதத்தில் விடியற்காலத்தில் ஆற்றுநீரும், குளத்து நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக இருக்கும். சங்ககால மகளிர் காலையில் இந்த வெதுவெதுப்பில் நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள் தைந்நீராடல் எனக் குறிப்பிடுகின்றன.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையிலும்,மாணிக்க வாசகரின் திருவெம்பாவையிலும் மார்கழி/தை நீராடல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது).

காணும்பொங்கல் அன்று எருதாட்டம் மஞ்சுவிரட்டு. ஜல்லிக்கட்டு என்ற ஏறுதழுவுதல் போன்ற விழாக்கள் ஆங்காங்கு நடைபெறுவது வழகாகம்.

பொங்கல் என்றால் என்ன?

தைப் பொங்கல் என்பது, நாம் சாப்பிடும் நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றுக்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவதாகும். புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு; இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றுக்கும் நன்றி செலுத்துவதே பொங்கல்.

பொங்கல் கொண்டாடும் விதம்:

இந்தப் பண்டிகை 4 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

1. போகி: பொங்கலுக்கு முதல்நாள் போகி. மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் நமது பழைய ஆடைகளை குப்பையில் எறிந்துவிடும் விழா. விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

2. சூரியப் பொங்கல்: சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும். அதிகாலையில் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு, படையல் செய்வது வழக்கம்.

3. மாட்டுப் பொங்கல்: விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். இப்போது வைக்கப்படும் பொங்கல் கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கும், வளர்ப்புப் பிராணிகளுக்கும் வழங்கப்படும்.

4. காணும் பொங்கல்: காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

வரப்புயர நீருயரும்! நீருயர நெல்லுயரும்! நெல்லுயுர குடியுயரும்!
குடியுயர கோனுயர்வான்
         நன்றி

நன்றி...பாலா ரமேஷ்

No comments: