எஸ்.எஸ்.எல்.சி: அறிவியல் கண்ணோட்டம் இருந்தால் அள்ளலாம் மதிப்பெண்
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் தேர்ச்சி 
பெறுவதும் எளிதுதான். கடந்த 3 ஆண்டுகளாக அறிவியல் தேர்வில்தான் அதிகமான 
மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண்களையும், அதிகமானோர் தேர்ச்சியும் 
பெற்றுவருவதே இதற்கு சான்று. 
அறிவியல் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, செய்முறைத் தேர்வு (25 
மதிப்பெண்கள்) கருத்தியல் தேர்வு (75 மதிப்பெண்கள்) என நடத்தப்படுகிறது. 
இதில் செய்முறைத் தேர்வில் குறைந்தது 15 மதிப்பெண்களும் கருத்தியல் 
தேர்வில் 20 மதிப்பெண்களும் மொத்தம் 35 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி 
அடைந்துவிடலாம். 
சென்னையில் உள்ள பல்லாவரம் கண்டோன்மெண்ட் கழக உயர்நிலைப் பள்ளி ஆசிரியை 
பி.சித்ராவும் வேலூர் மாவட்டம் சோழவரம் அரசு மேனிலைப் பள்ளி ஆசிரியர் 
ஆர்.அமுதனும் மாணவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள்: 
செய்முறைத் தேர்வு 
10-ஆம் வகுப்புக்கான அறிவியல் தேர்வின் முதல் கட்டமாக செய்முறைத் தேர்வு 
உள்ளது. பாடப்புத்தகத்தின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள எளிமையாக 
பயிற்சிகளே, இந்தத் தேர்வில் கேட்கப்படுகின்றன. கரைசலை அமிலமா,காரமா என 
அறிதல், உடல் எடை குறியீட்டெண் அறிதல், கனிகளை வகைப்படுத்துதல் உள்ளிட்ட 16
 பயிற்சிகள் இதில் உள்ளன. புத்தகத்தில் உள்ள இந்தப் பயிற்சிகளை நன்கு 
பயின்று தேர்வை எழுத வேண்டும். இதில் 25 மதிப்பெண்கள் பெறுவது எளிது. 
ஒரு மதிப்பெண்: கருத்தியல் தேர்வு 
ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய பாடப் 
பகுதிகள் 15,16,17. இந்த மூன்று பாடங்களிலிருந்து கட்டாயம் 5 கேள்விகள் 
கேட்கப்படும். 
புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களை மட்டும் படித்தால் 15-க்கு 10 முதல் 
12 மதிப்பெண்களை சுலபமாகப் பெறலாம். 15க்கு 15 மதிப்பெண் பெற புத்தகத்தை 
முழுமையாக உள்ளார்ந்து படிப்பது சால சிறந்தது. 
சுமாராக படிக்கும் மாணவர்கள் செய்முறை தேர்வையும் ஒரு மதிப்பெண்கள் 
பகுதியையும் சிறப்பான முறையில் எழுதினாலே, தேர்ச்சி மதிப்பெண்களான 35 
மதிப்பெண்களை நோக்கி முன்னேறிவிடுவார்கள். 
2 மதிப்பெண் 
இரண்டு மதிப்பெண்கள் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய 
பாடப் பகுதிகள் 3, 5, 8,16,17 ஆகிய ஐந்தும் ஆகும். இந்தப் பாடங்களிலிருந்து
 மட்டும் மொத்தக் கேள்விகள் 30-ல் 15 கேள்விகள் கேட்கப்படுகின்றன. 
5 மதிப்பெண் 
இந்தப் பகுதியின் கேள்விகள் விலங்கியல், தாவரவியல், வேதியியல் மற்றும் 
இயற்பியல் என நான்கு பிரிவுகளில் இருந்து வரக்கூடியவையாக இருக்கும். 
ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு கேள்விகள் வீதம் மொத்தம் எட்டு கேள்விகள் 
கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் ஒன்று வீதம் மொத்தம் நான்கு 
கேள்விகளுக்கு விடையளித்தால் போதும். 
விலங்கியல் பிரிவிலிருந்து வரக்கூடிய கேள்விகளுக்கு பாடப்புத்தகத்தில் உள்ள
 1, 2-வது பாடங்களைப் படிக்க வேண்டும். அதைப் போலவே, தாவரவியல் 
பிரிவிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பாடங்கள் 4, 7-யையும், 
வேதியியல் பிரிவிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பாடங்கள் 10, 
13-யையும் இயற்பியல் கேள்விகளுக்கு பாடங்கள் 15, 17-யையும் நன்றாகப் பயில 
வேண்டும். 
புத்தகத்தில் இந்தப் பாடப் பகுதிகளில் உள்ள கேள்விகளுக்கு முக்கியத்துவம் 
கொடுத்து படிக்கவேண்டும். அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய 
பாடப்பகுதிகள் 2, 7,10,17 ஆகும். 
கேள்விகளின் பட்டியல் 
முக்கியமாக 1, 10, 15, ஆகிய பாடங்களில் உள்ள பயிற்சிகளில் உள்ள கேள்விகளை 
நன்கு பயிலவும். இந்தப் பாடங்களில் இருந்து என்ன மாதிரியான கேள்விகள் 
கேட்கப்படலாம் என யோசித்து, நீங்களே ஒரு கேள்விப் பட்டியலையும் தயார் 
செய்யலாம். மற்ற பாடங்களான 2, 4, 13, 17 ஆகிய பாடங்களில் உள்ள பயிற்சி 
வினாக்களையும் தயார் செய்தால், மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற உதவியாக 
இருக்கும். 
படிப்பும் பயிற்சியும் 
அறிவியல் பாடத்தைப் பொறுத்தவரை மனப்பாடம் செய்து எல்லாவற்றையும் படித்துவிட
 முடியாது. அறிவியல் என்பதே பரிசோதனை, ஆய்வு செய்து பார்ப்பது. அதன் 
முடிவுகளை விதிகளாகத் தொகுப்பது. மீண்டும் பரிசோதித்து பார்ப்பது. விதிகளை 
மேலும் மேம்படுத்துவது என்று மேலும் மேலும் அறிவியலுக்குள் மூழ்குவது தானே?
 எனவே, படிப்பதும் பயிற்சி எடுப்பதுமாக தேர்வுவரை ஒரே கவனமாக இருங்கள். 
அறிவியல் தேர்வில் படம் வரைவதற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. படம் 
வரைவதற்கும் அவற்றின் பாகங்களைக் குறிப்பதற்கும் நன்கு பயிற்சி எடுத்துக் 
கொள்ளுங்கள். படம் வரைவதற்கான சரியான கருவிகளை தேர்வின்போது மறக்காமல் 
வைத்திருங்கள். 
100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க விரும்பும் மாணவர்கள் அனைத்து 
பாடங்களிலும் நன்கு பயிற்சி பெற வேண்டிய அவசியம் என்பது சொல்லித்தான் தெரிய
 வேண்டும் என்பதில்லை. இயல்பாகவே அறிவியல் ஆர்வம் இருந்தால், தேர்வில் 
அள்ளலாம் 100க்கு 100. 
நன்றி தமிழ் இந்து
மாணவர் நலன் கருதி....
அன்புடன்  சிவா.... 
 
 
 
No comments:
Post a Comment