Wednesday, August 06, 2014

காந்தியின் சிந்தனைகளில் இருந்து சில கருத்துகள்...

நாம் எந்த மொழியில் சிந்திக்கிறோமோ அந்த மொழியில் கல்வி கற்கும்போதுதான் அது நம் அடிமனதில் ஆழமாக சென்று சேரும். அறிவியலை தமிழில் கற்பதற்கும் ஆங்கிலத்தில் கற்பதற்கும் இந்த வேறுபாடு இருக்கிறது. மொழியை மொழியாக கற்கலாம். ஆங்கிலம் என்பது மொழிதானே தவிர அது அறிவு அல்ல. இதைப் பற்றி காந்தியின் சிந்தனைகளில் இருந்து சில கருத்துகள் :

***

* ஒரு குழந்தைக்கு அந்நிய மொழியின் மூலம் கல்வி கற்பிப்பது கணக்கிட முடியாத தீங்கை விளைவிக்கிறது. பள்ளி என்பது வீட்டைப்போலவே, மற்றொரு வீடாக இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களும் பள்ளியில் தோன்றும் எண்ணங்களுக்கும்
இடையே நெருங்கிய இணக்கம் இருக்க வேண்டும். சிறந்த பலன் ஏற்படவேண்டுமாயின் இத்தகைய இணக்கம் அவசியம். அறிமுகமில்லலாத மொழியில் கற்பிப்பது அந்த இணக்கத்தை குலைத்துவிடும். இந்த இணக்கமான உறவை குலைப்பவர்கள் நல்லெண்ணத்துடன் காரியங்களை செய்பவர்களாக இருந்தாலும் அவர்கள் மக்களுடைய விரோதிகளே.

* ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொடுத்து ஆங்கிலத்தில் முழுப்பயிற்சி அளிப்பதில் தீங்கு ஒன்றும் இல்லை. இதற்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கலாம். ஆனால் பயிற்றுமொழி தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டும்.

* கல்வியமைப்பில் ஆங்கிலத்திற்கு இரண்டாம் இடம் கொடுக்கப்பட்டு தாய்மொழி தனக்குரிய நியாயமான இடத்தைப் பெற்றுவிட்டல் தேவையற்ற விசயங்களால் அளவுக்குமீறி பளுவைச் சுமக்கவேண்டியிருக்கும் நமது புத்திக்கு, இன்னும் அத்தியாவசியமான அறிவைப் பெறுவதற்கு வசதியாக விடுதலை ஏற்படும். அப்போது ஆங்கிலத்தை கற்பது கூட நமக்கு அவ்வளவு கடினமாக இருக்காது. அந்தச் சூழ்நிலையில் நாம் கற்கும் ஆங்கிலம் இன்னும் தரமுள்ளதாக இருக்கும். ஆங்கிலத்தில் கல்வி கற்பிப்பதால் உருவாகும் ஆங்கில அறிவை விட தாய்மொழியில் கற்கும்போது பெருமைப்படக்கூடியதாகவும் இருக்கும்.

* அதுமாத்திரமல்ல, அந்த நிலையில் நம்முடைய புத்தி இன்னம் கூர்மையானதாகவும், சுறுசுறுப்புள்ளதாகவும் இருக்குமாகையால் அந்த அறிவை நாம் இன்னும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆகையால் லாப நஷ்டம் என்ற கோணத்தில் பார்த்தால் கூட தாய்மொழியை உபயோகிப்பது என்ற முடிவு நமது விருப்பங்கள் எல்லாம் நிறைவேறுவதற்கு உதவியாக இருக்கும் என்பது புலனாகும்.



 

No comments: