Monday, March 31, 2014

உலக வெப்பமயமாதல் – மீண்டும் ஒரு எச்சரிக்கை

உலக வெப்பமயமாதல் – மீண்டும் ஒரு எச்சரிக்கை


download
உலக வெப்பமயமாதல் – மீண்டும் ஒரு எச்சரிக்கை
United Nations scientific panel என்னும் நிபுணர் குழு தமது நீண்ட அறிக்கையில் மீண்டும் உலக வெப்பமயமாதல் குறித்து எச்சரித்துள்ளது. 2007ல் குறிப்பிட்டதை விட இப்போது ஆபத்து நெருங்கி விட்டதையும் மிகவும் மோசமான விளைவுகளையும் அது நமக்கு எச்சரிக்கையாக எடுத்துரைக்கிறது.
CO2 எனப்படும் கரியமில வாயு விண்வெளியை மாசு படுத்திக் கொண்டே வருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, மற்றும் வாகனங்கள், ஆகாய விமானங்கள் வெளியேற்றும் நச்சுப் புகை உலக வெப்பமயாவதற்கு முக்கியக் காரணிகள். Green House Gases என்று அழைக்கப் படும் நீராவி, மீதேன், கார்பன் டை ஆக்ஸைட், நைட்ரஸ் ஆக்ஸைட் மற்றும் ஓஸோன். இவைகள் நம்மை அதிகக் குளிரில்லாத வெட்ப நிலையில் வைத்திருக்கின்றன. ஆனால் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு சுற்றுச் சூழலில் கடுமையாக அதிகரித்து வருகிறது. இது ஒரு பக்கம் வெப்பத்தை அதிகரிக்கிறது. chlorofluorocarbons (CFCs) என்று அழைக்கப் படும் க்ளோரின் அடிப்படையிலான தொழிற்சாலைப் பயன்பாடு ஓஸோன் மண்டலத்தில் ஓட்டைகளை ஏற்படுத்துகிறது. குளிர்சாதனப் பெட்டியின் குளிர்வில் இது அதிகம் பயன்படும் ஒன்று. தீயை அணைக்கும் ரசாயன வாயு, புகைப்படங்களிலும் நகல்களிலும் பயன்படும் ப்ரொமைட் ஆகியவையும் உதாரணங்களே.
சமீப காலத்தில் பேர்ழிவை ஏற்படுத்திய பல புயல்கள், சூறாவளிகள் உலக வெப்பமயமாதலின் விளைவுகளே. ஐரோப்பாவின் கடுமையாக வெப்பக் காற்று நிகழ்வுகள், முஸாம்பிக்கில், பாகிஸ்தானில், பங்களாதேஷில் வந்த பெரு வெள்ளப் பெருக்குகள், ஆஸ்திரேலியா எதிர் கொண்ட வறட்சி, பஞ்சம், அமெரிக்காவின் காடுகள் எரிந்து போவது இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பேரழிவுகளால் பெரிதும் பாதிக்கப் படுவது அடித்தட்டு மக்களும் ஏழை நாடுகளுமே. வளரும் நாடுகள் அழியும் நிலை இப்போது வந்து விட்டது.
உலக வெப்பமயமாதலின் பின் விளைவுகளில் நாம் அவதிப்பட ஆரம்பித்து விட்டோம். ஆர்க்டிக், அண்டார்ட்டிக் பனிமலைகள் உருகி வருகின்றன. உலக முழுதும் கடலின் மேலுயரம் அதிகரித்து வருகிறது.
கார்பன் டை ஆக்ஸைடை மட்டுப் படுத்தும் ஆக்ஸிஜன் தாவரங்களில் இருந்து எளிதாகக் கிடைக்கிறது. அதை நாம் காடு வளர்ப்பின் மூலம் சாதிக்க முடியும். சுற்றுச் சூழலை மாசு படுத்தாத உற்பத்தி முறைகளுக்கு நாம் மாற வேண்டும். உதாரணத்துக்கு நாம் நிலக்கரியை எரித்து உருவாக்கும் மின்சாரத்திலிருந்து சூரிய வெப்பத்தில் உருவாகும் மின்சாரத்துக்குப் படிப்படியாக மாற வேண்டும். தொழிற்சாலை மாசு மட்டுப்பட வேண்டும். வாகனங்கள் புகை மட்டுப்படும் தரக் கட்டுப்பாட்டுக்குக் கடுமையாக ஆட்படுத்தப் பட வேண்டும். மின்சாரத்தை, தண்ணீரை சேமிக்க, குறைவாகப் பயன்படுத்த நாம் பழக வேண்டும். மரங்களை லட்சக் கணக்கில் நட்டுப் பராமரித்து வளர்க்க வேண்டும். வாகனங்களின் பயன்பாட்டை எல்லோருமே குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் அறிக்கை புறந்தள்ளக்கூடியது அல்ல. உலக வெப்பமயமாதல் குறித்த கவலை அரசியல்வாதிகளுக்கு வரும் போது ஒருவேளை அப்பாவி ஜனங்களுக்கு விடிவு பிறக்கலாம். காலம் கடந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

No comments: